Wednesday 25 June 2014

"மழைக் காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உதவித்தொகை'



First Published : 25 June 2014 02:58 AM IST
மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவித்தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் தகுதியான பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

மண்பாண்டத் தொழிலாளர்கள் மழைக்காலங்களில் தொழில் நடத்துவது மிகவும் கடினம். இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அவர்களுக்கு மழைக் காலங்களில் மட்டும் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உதவித்தொகைக்கான தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மு.கருணாகரன் பேசியதாவது: மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 2014-15ஆம் ஆண்டுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெறவுள்ளது.

மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த நபர்கள் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கூட்டுறவுச் சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது இம்மாதம் 26ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை கள ஆய்வு நடத்தப்படும்.

ஆலங்குளம்,அம்பாசமுத்திரம்,நான்குனேரி,தென்காசி,பாளையங்கோட்டை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, திருநெல்வேலி, வீரகேரளம்புதூர் ஆகிய 11 வட்டங்களிலும் அந்தந்தப் பகுதி வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, கதர்கிராமத் தொழில் வாரிய அலுவலர்கள் இணைந்து ஆய்வு செய்வர்.

ஒவ்வொரு குடும்பமாக கணக்கிடப்பட்டு தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

மண்பாண்டம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனைவரும் கணக்கெடுப்பில் தங்களது பெயர் விடுபடாமல் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் யாரையும் விடுபடாமல் முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

இக்கூட்டத்தில், கதர் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநர் ராமசுப்பிரமணியன், கோட்டாட்சியர் ரமேஷ், சமூகப் பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் தமிழ்செல்வி, தொழிலாளர் ஆய்வாளர் லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Saturday 21 June 2014

ஊராட்சித் தலைவி கணவர் மீது தாக்குதல்

• Last Updated: Jun 19, 2014 12:40 AM
வீரகேரளம்புதூர் அருகே திருமண வீட்டுக்கு குடிநீர் வழங்கும் பிரச்னையில் ஊராட்சித் தலைவியின் கணவர் தாக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து பதற்றம் நிலவியது.
இதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டது. வீரகேரளம்புதூர் அருகேயுள்ள கழுநீர்க்குளம் ஊராட்சித் தலைவர் சண்முகத்தாய். இவரது கணவர் ஆண்டபெருமாள். செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திருமண வீடு ஒன்றுக்கு ஊராட்சி குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிப்பது தொடர்பான பிரச்னையில் ஆண்டபெருமாள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஏற்கெனவே இருதரப்பினரிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து புதன்கிழமை காலையில் சுரண்டை ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆலங்குளம் டி.எஸ்.பி.பிச்சை தலைமையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக தீர்வு ஏற்படவே பதற்றம் தணிந்தது. அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வி.கே.புதூர் சாலையில் ஆக்கிரமிப்புகள்

பதிவு செய்த நேரம்:2014-06-18 11:59:10

நெல்லை, : ஆலங்குளம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் காளி சாமி மற்றும் பாஜ பிரமுகர் சொர்ணராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனு:
வீரகேரளம்புதூர்- சண்முகநல்லூர் சாலையில் எங்கள் கிராமமான கீழ வீராணம் உள்ளது. இச்சாலையில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. தற்போது பள்ளி வாகனங் கள் அதிகரித்துள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஒரு வாகனம் இச்சாலையில் வந்தால், எதிரே வரும் வாகனங்கள் சுமார் 300 அடி பின்னோக்கி வந்தே விலக முடியும் என்ற நிலை காணப்படுகிறது. எனவே இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இச்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, செப் பனிட முன்வரவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க விண்ணப்பிக்கலாம் 30–ந் தேதி கடைசி நாள்

புதன், ஜூன் 18,2014, 10:04 AM IST

நெல்லை,
பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க 30–ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு முதல்வர் எஸ்.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
தொழிற்பயிற்சி
பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்பியாள், கம்மியர் மோட்டார் வண்டி, கம்மியர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, பற்றவைப்பவர், திறன்மிகுமையம் (எலக்ட்ரிக்கல்) போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியாள், பம்ப் மெக்கானிக் போன்ற பிரிவுகளும், அம்பை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியர் மின் அணுவியல் பிரிவுகளும், தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியாள் போன்ற தொழிற்பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் வளாக தேர்வு மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதுடன், மின்சார பணியாள், கம்பியாள் போன்ற தொழிற்பிரிவு மாணவ– மாணவிகளுக்கும் ‘பி‘ லைசென்ஸ் பெற்று தரப்படுகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவ– மாணவிகளுக்கு இலவச லேப்– டாப், சைக்கிள், சீருடை, ஷூ, மாதம் ரூ.500 ஊக்கத்தொகை, பஸ் பாஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், மெக்கானிக் மோட்டார் வண்டி, கம்பியர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, திறன்மிகு மையம் (எலக்ட்ரிக்கல்), பம்ப் மெக்கானிக் மற்றும் கம்பியர் மின் அணுவியல் போன்ற தொழிற் பிரிவுகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ– மாணவிகள் சேரலாம். கம்பியாள் வெல்டர் போன்ற பிரிவுகளில் சேர 8–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10–ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் சேரலாம். இருபாலரும் தகுதியுடையவர்கள்.
கம்பியர் மோட்டார் வண்டி தொழிற் பிரிவில் சேர்ந்த ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வீரகேரளம்புதூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் ஓட்டுனர் பயிற்சி கொடுத்து 2 மற்றும் 4 சக்கர வாகன உரிமம் (லைட்) சான்றிதழ் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இயங்கி வரும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பியிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விடுதியில் உணவு வசதியுடன், இலவச தங்கும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பமும், விளக்க உறையும் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். வருகிற 30–ந் தேதி கடைசி நாளாகும். மதிப்பெண் அடிப்படையிலும், இன சுழற்சி மூலமாகவும் மாணவ– மாணவிகள் சேர்க்கை தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
குறைந்தபட்ச கல்வி தகுதியுடன் 14 வயது பூர்த்தி செய்த மாணவ– மாணவிகள், 40 வயது வரை உள்ளவர்கள் சேர்க்கைக்கு தகுதி உடையவர்கள்.
வளாக தேர்வு
பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை மற்றும் தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று மாணவ– மாணவிகளுக்கும் வளாக தேர்வு மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. பலர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பம் பெற்று சேர்ந்து பயனடையலாம்.
விவரங்களுக்கு
பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் 0462 2342005 என்ற தொலைபேசி எண்ணிலும், வீரகேரளம்புதூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 04633 277962 என்ற தொலைபேசி எண்ணிலும், அம்பை தொழிற்பயிற்சி நிலையத்தில் 04634 251108 என்ற தொலைபேசி எண்ணிலும், தென்காசி தொழிற்பயிற்சி நிலையத்தில் 04633 280933 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை, மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகம் 0462 2501251, 2501261 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாலை நேர இலவச பயிற்சிகள் திறன் மேம்பாட்டுக்காக பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை, பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒருங்கிணைந்த முதல்வர் எஸ்.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

Sunday 15 June 2014

வீ.கே.புதூரில் தி.மு.க. பொதுக்கூட்டம்

பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 14, 2:37 PM IST

கீழப்பாவூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வீ.கே.புதூரில் நடந்தது. சேக் மைதீன் தலைமை வகித்தார்.

நகர செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். பரசுராமன் தொகுத்து வழங்கினார். மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, மாநில பேச்சாளர் நெல்லை பா.ரா, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் பேசினர்.

பாவூர் நாவலர், ராமச்சந்திரன், அன்பழகன், ஆண்டபெருமாள், தர்மர், வைத்தீஸ்வரி, சக்தி, ராசாத்தி. அருணாப்பேரி திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் நன்றி கூறினர்.

Sunday 1 June 2014

பேட்டை ஐ.டி.ஐ.யில் முப்பெரும் விழா

: May 30, 2014 5:26 AM
பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) முப்பெரும் விழா நடைபெற்றது.

பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர், கடைசலர், இயந்திரவேலையாள் ஆகிய 8 தொழிற்பிரிவுகளில் மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மையத்தில் 98 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான தேர்வில் மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர் எஸ்.மணிகண்டன் முதல் இடத்திலும், 99 ஆம் ஆண்டு தேர்வில் கம்பியாளர் பிரிவு மாணவி சி.பாரதி முதலிடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது.

இதேபோல வீ.கே.புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் கம்பியாள் பிரிவு மாணவி எஸ்.பேச்சியம்மாள், மாநில அளவிலான திறனாய்வுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வளாகத் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்-மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

இதற்கான முப்பெரும் விழாவுக்கு, பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.முத்துசாமி தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் என்.ரமீசாபானு வரவேற்றார். திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் டி.ஜான் பாஸ்கோ முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் ஆ.வள்ளியம்மாள் பாராட்டிப் பேசினார். பயிற்சி அலுவலர்கள் சத்யராஜ், லட்சுமணன், ஜெயச்சந்திரன், முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.