Friday 29 August 2014

தண்ணீர் என நினைத்து பூச்சிமருந்தை குடித்த காவலாளி சாவு

சுரண்டை, ஆக. 28–

ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதிமுத்து (வயது 58). இவர் வீரகேரளம்புதூர் பகுதியில் உள்ள பல்லாரி தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் தோட்டத்தில் படுத்து இருக்கும்போது தண்ணீர் தாகம் எடுத்தது. அப்போது அங்கு பாட்டிலில் பல்லாரிக்கு அடிக்கும் பூச்சி மருந்து இருந்துள்ளது. அதை தண்ணீர் என்று நினைத்து முப்பிடாதிமுத்து குடித்து விட்டார்.

பாதி அளவு குடித்த பிறகுதான், அது தண்ணீர் அல்ல என்று அவருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் அருகில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று முப்பிடாதிமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Friday 1 August 2014

கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்கள்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது

நெல்லை,

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்கள் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பப்படுகிறது. நேரடி சேர்க்கை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்கள்
நெல்லை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ஐ.டி.ஐ. படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. அதாவது, பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி, ராதாபுரம் ஆகிய 5 ஊர்களில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும், 21 தனியார் தொழிற்பயிற்சி மையங்களுக்கும் இந்த கலந்தாய்வு நடந்தது.

மொத்தம் 26 தொழிற்பயிற்சி நிலையங்களிலும் உள்ள 1,587 இடங்களுக்கு, 2853 பேர் விண்ணப்பம் அனுப்பி இருந்தார்கள். அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். மதிப்பெண்கள், இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதில் 1,406 இடங்கள் நிரபப்பட்டன.

நேரடி சேர்க்கை
மீதம் உள்ள 181 இடங்களுக்கு மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்படுகிறார்கள். மேலும் ஏற்கனவே தொழிற்பயிற்சியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

காலியாக இருக்கும் கம்பியாளர், வெல்டர், பிளம்பர் பயிற்சி பிரிவுகளுக்கு 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், மோட்டார் மெக்கானிக், திறன்மிகு மையம் (எலக்ட்ரிக்கல்), கம்மியர் டீசல், ஏ.சி. மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், திட்டமிடுதல் (கோபா) போன்ற பயிற்சியில் சேர 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சில பிரிவுகளில் சில இடங்கள் காலியாக உள்ளன. மேற்படி காலி இட விவரங்கள் அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விளம்பர பலகையில் ஒட்டப்பட்டு இருக்கிறது.

பயிற்சியில் சேர விரும்புவோருக்கு வயது 14 முதல் 45 வரை இருக்கலாம். நேரடியாக பெற்றோருடன் சம்பந்தப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து பயிற்சியில் சேரலாம். மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், சாதி, வருமானம் ஆகியவற்றின் அசல் சான்றுகளை கொண்டு செல்ல வேண்டும். மார்பளவு புகைப்படம்–4, சேர்க்கைக்கான அரசு கட்டணத்தையும் கொண்டு வரவும்.

கட்டணம் கிடையாது
பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உணவுடன் கூடிய இலவச விடுதியும் உள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம் கிடைக்காத நிலையில், தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு மூலம் சேர்ந்து பயன் பெறலாம். கலந்தாய்வு மூலம் சேரும் ஆண்கள், பெண்களுக்கு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

மேலும் விவரங்களை நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்–0462–2501251, பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 0462–2342005 என்ற எண்ணிலும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04633–277962 என்ற எண்ணிலும், அம்பை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04634–251108, தென்காசி தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04633–280933 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.

இந்த தகவலை பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒருங்கிணைந்த முதல்வர் எஸ்.முத்துசாமி, ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எம்.ஆர்.அப்துல்காதர் ஆகியோர் தெரிவித்தனர்.