Saturday 9 January 2016

நமச்சிவாயக் கவிராயர்

நமச்சிவாயக் கவிராயர் என்பவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞர். மாதவ சிவஞான யோகியின் தந்தையாகிய ஆனந்தக்கூத்தரின் உடன்பிறந்தவர். பாவநாசம் உலகம்மை மீது பேரன்பு கொண்டு நாள்தோறும் வழிபட்டு வந்தவர். ஒருமுறை உலகம்மை அவருடைய மகளாக வந்து உணவு படைத்தாளாம். கவிராயர், நோய்வாய்ப்பட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, உலகம்மை தடுத்து அருள்புரிந்தார் என்றும் கூறுவர்.

இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது.

இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இந்நூல் சிங்கை பிரபந்தத் திரட்டு என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றன.

“பாபநாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு!”

அந்த நூல் ஆறு பிரபந்தங்கள் அடங்கியது. அவற்றுள் ஒரு நூல், 'சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி' ஆகும். அந்த நூல்களை இயற்றியவர், நமசிவாயக் கவிராயர் ஆவார். அவர் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனப் புலவர், 'திராவிட மாபாடிய ஆசிரியராகிய மாதவச் சிவஞான யோகிகளின் சிறிய தந்தையார் ஆவார்.

அவர் அருளிய, உலகம்மை கலித்துறை அந்தாதியில் உலகம்மை தமக்கு அருள் புரிய வில்லையே என்ற ஏக்கத்துடன், 'வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவதற்கே உரிய இந்த உடல் சுடுகாட்டு நெருப்புக்கு உரிய விறகாக இருக்கிறதே!' என்று பாடுகிறார்.

‘பால் நினைந்தூட்டும் தாய்' என்றார் மாணிக்க வாசகர். சேக்கிழார் “எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி, ‘உண் அடிசில்’ என உமையம்மை ஊட்டினார்' என்றார். அம்மை ஊட்டிய பால் வழிந்த திருவாயுடன் நின்ற மகனை நோக்கித் தந்தையார், “நீ யார் அளித்த பால் உண்டாய்?” எனக்கேட்டார்.

சிவஞானம் பெற்ற மைந்தர், “தோடுடைய செவியன்” என்ற தொடரால் அம்மையைப் போற்றி, அவர் உள்ளங்கவர் கள்வனாகிய சிவபெருமானே, என் உள்ளத்தையும் கவர்ந்தான்; அவனே பிரமாபுரம் மேவிய பெம்மான்! என்று பாடினார்

அவர் பாடலைக் கேட்ட விண்ணவர் மலர் மழை பொழிந்தனர்; மண்ணவர் வாழ்த்தொலி வழங்கினர்; “காழியர் தனமே; கவுணியர் தவமே; மறை வளர் திருவே; வைதிக நிலையே; புகலியர் புகலே; புண்ணிய முதலே; கலைவளர் மதியே;'' என்றெல்லாம் போற்றினர்!

அம்மை அளித்த பாலமுதினை உண்ட பொழுதே, ‘சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம், உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம் ஆகியவற்றை சம்பந்தச் சிறுவர் பெற்றார்!

இந்த நிகழ்ச்சியை மனக்கண்ணால் கண்ட விக்கிரம சிங்கபுரம் நமசிவாய தேசிகர் அம்மை பாலமுதினை திருஞான சம்பந்தருக்கு அளித்த போது, அவர் திருவாய் ஓரத்தில் வழிந்த செய்தியை, ‘சந்தன பாரத் தனம்பிதிரோட’ என்று பாடுகிறார். இவ்வாறு வழிந்தமையால் சீர்காழியில் ஒருபகுதி தென்பாதி என்ற பெயர் பெற்றது, சம்பந்தர் உண்ட பால் பாதியும், அவர் பாடிய தமிழ்த்தேன் பாதியும் வழிந்தமையால் அப்பகுதி தேன்பாதி எனப் பெற்றது.

அப்பாலைப் பருகியமையால் அவருடைய அவா அகன்று நீங்கியது!
“அவாஎன்பது எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து”

என்ற குறட்கருத்தின் படி, பிறப்புத் துன்பம் நீங்கியது! இதனைக் கவிஞர், “அவாஅறப் பால்கொடுத்தாய்!” என்று பாடுகிறார். இதனைக் “கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி” என்று திருவிளையாடல் புராணம் பாடுகிறது.

இதனை “கொங்கை வள்ளத்துப் பால் கிண்ணத்திலே, சைவக் கன்றுக்கு வார்த்தவள்” என்று நமசிவாயக் கவிராயர் பாடுகிறார். மேலும் அன்னை வழங்கிய பால், வேதம் ஓதும் அந்தணர் மைந்தனாய்த் தோன்றிய திருஞான சம்பந்தருக்கும், அவர் வழியில் வேத நெறியையும் சைவப்பயிரையும் வளர்த்த சிவனடியார் திருக்கூட்டமரபு வளர்வதற்கும் காரணமாயிற்று என்பதை “நீதி மறைக்குல சந்ததிக்கு உணப் பால் கொடுத்தாய்” என்று அவரே பாடுகிறார்.

“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க
பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தருளும்
சீத வளவயற் புகலி திருஞானசம்பந்தர்”

என்று பாடிய சேக்கிழார் வழியில், நமசிவாயக் கவிராயர் பாடினார். அந்தப் புகழ்பெற்ற சிவனடியார் மரபில் தானும் பிறந்து வளர்ந்தது உண்மையானால், ஆசை அற்றுப் பாசம் விட்டு, சிவபூசை பண்ணும் நெறியில் இன்னும் ஊக்கத்துடன் விளங்கத் தொடங்கவில்லையே! என்று ஏங்குகிறார்.

சிவனருள் பெற்று, அவா அறுத்து வளரவேண்டும் என்று அன்று திருஞானசம்பந்தருக்குப் பால் கொடுத்த உமையம்மை உலகம்மையாய் விக்கிரமசிங்க புரத்தில் எழுந்தருளிக் காட்சி தருகிறாள். “அந்த அடியார் போல் வாழாமல் வீண் ஆசாபாசங்கள் என்னும் இரும்புச் சங்கிலியால் பிணிக்கப் பெற்று, வெற்றுடம்பை உண்டுடுத்துப் பேணி வளர்த்து இறுதியில் சுடுகாட்டில் எரியும் பெரு நெருப்பில் விறகாகும் பிணமாய் அடியேனும், அதனை வளர்க்கும் நெய்யாக என் மனமும் ஆனோமே!” என்று ஏங்கிப் பாடுகின்றார்; அந்தப் பாடல்:

“சந்தன பாரத் தனம்பிதி ரோடத் தமிழ்மறைச்சம்
பந்தன் அவாஅறப் பால்கொடுத் தாய்விருப் பாய்நிகள
பெந்தன மாம்இச் சடம்சுடு காட்டுப் பெருநெருப்புக்(கு)
இந்தன மாகத் தமியேனும் நெஞ்சும் இருந்தனமே!”

என்பதாகும். இந்தனம் என்ற சொல்லின் பொருள் விறகு. இந்த விறகு வளர்ந்து எரிபொருள் ஆவது போல், ‘இந்த உடம்பும் வளர்ந்து எரியும் விறகானதே’ என்ற கவிஞரின் எண்ணம் இதைப் படிக்கும் நமக்கும் உண்டாகிறது.