Friday 25 December 2015

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம்


சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங் களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொ றியியல், புவியியல், கணிதவியல், மருத்துவ வியல் குறித்த ஆச்சரியங்க ளின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல் களும் ஒரு தெளிவான சிந் தனையை நோக்கியே பயணித்துள்ளது, சிதம்பர ம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற் புதமான ரகசியங்கள் இவைகள்தான்.”

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறி க்கும் தில்லை நட ராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத் தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லி யம் அன்றை க்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற் றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக் கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உட லில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடு களை கொண்டு வேயப்பட்டுள் ளது, இது மனிதன் ஒரு நாளை க்கு சராசரியாக 21600 தடவை கள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கி ன்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத் தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இரு க்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்ப வையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்ப ரம், அதுவே சதாசிவம், அதுவே அவரி ன் நடனம்”. என்ற பொருளைக் குறிகி ன்றது.


(7) “பொன்னம்பலம்” சற்று இடது புற மாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடை ய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப் படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத் தே அது. “கனகசபை” பிற கோயில் களில் இருப்பதை போன்று நேரான வழி யாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின் றது . இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக் கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங் களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கி ல் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்ட பத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திர ங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கி ன்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண் டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்க ளால் அழைக்கபடுகின்றது.

CERN அராய்ச்சிக் கூடத்தில் நடராஜர்!
சிதம்பரம் கோவிலில் நடனக் கலையின் அரசனான சிவன் ‘நடராஜன்’ என்ற சிலை வடிவில் இருக்கின்றான். அணுவைப் பிளந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலகிலேயே அங்குதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அணுக்கூறுகளின் இயக்கங்களை ஒத்திருக்கும் மனித கலாச்சார விஷயத்தில் நடராஜரின் நடன வடிவமே அதற்குப் பொருந்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.


ஆகாய உருவில் இறைவன்!


சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், 'சிதம்பர ரகசியம்' என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

Wednesday 23 December 2015

மேற்குத் தொடர்ச்சி மலை


பருவ மழையினால் எப்போதும் ஈரம் படிந்த கேரள மலபார் கரைக்கும் இந்திய தீபகற்பத்துக்கும் இடையே பெரும் மதில் போல இருப்பதுதான் மேற்குத் தொடர்ச்சி மலை. 1,600 கி.மீ. நீளமுள்ள இந்த மலைத் தொடர் இந்தியத் தென்கோடியான கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் வரை நீண்டு கிடக்கிறது. உலக அளவில் பல்லுயிர் பெருக்கத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த 34 கேந்திரங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும். இதன் மேற்கு பகுதியில் ஆண்டுக்கு 6,000 முதல் 8,000 செ.மீ. அளவுக்கு மழை பொழிகிறது. இந்த மலைத் தொடரின் கிழக்குப் பகுதியிலோ ஆண்டுக்கு சராசரியாக 900 செ.மீ. மழை மட்டுமே பெய்கிறது. நிலயியல் அடிப்படையிலும் உயிரியல் அடிப்படையிலும் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதி மற்றும் மடகாஸ்கர் பகுதியின் நெருங்கிய உறவினராக இருக்கிறது நமது மேற்குத் தொடர்ச்சி மலை. இதன் பரப்பளவு இந்தியாவின் மொத்த நிலப் பகுதியில் வெறும் ஆறு சதவீதம்தான். ஆனால் இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பங்கு எவ்வளவு தெரியுமா? முப்பது சதவீதம். இதிலிருந்தே இந்த மலைத்தொடரின் முக்கியத்துவம் புரியும். மரம்-செடி வகைகள், மருத்துவ குணமுள்ள செடிகள், பழ வகைகள் சிலவற்றின் பிறப்பிடம் இந்த மலைத் தொடர்தான். பழங்களில் மாம்பழம், வாழைப்பழம் - இவற்றின் மரபணுவின் மூல முகவரி மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் உள்ளது. மிளகு, ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றுக்கும் பிறப்பிடம் இந்த மலைகள்தான்.

சில அரிசி ரகங்கள், கேழ்வரகு இங்கு மட்டுமே விளைகின்றன. கணக்கில் அடங்காத மருத்துவ குணமுள்ள செடி வகைகளுக்கு இங்குதான் பிறப்பிடம். இந்த மலைத் தொடரிலிருக்கும் சில வனங்கள் இமயத்திலிருக்கும் வனங்களை விட மிகப் பழமையானவை. பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு முக்கிய அளவுகோல்- ஒரு குறிப்பிட்ட உயிரினம் ஒரு நிலப்பகுதியில் மட்டுமே காணப்படுவதாகும். இந்தப் பகுதிக்கு வெளியே சாதாரணமாக இந்த உயிரினங்களைக் காண முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக் கிடைக்கக்கூடிய உயிரினங்கள் என்று ஏராளமாக சொல்லலாம். தெற்கு ஆசிய அளவில் மிக அதிக பல்லுயிர் பெருக்கமுள்ள இடங்களில் இந்தப் பகுதியும் அடங்கும். இமய மலைத் தொடருக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் தனக்கே உரித்தான உயிரினங்களுக்குத் தாயகமாக இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலைதான். கன்னியாகுமரிக்கு சற்று வடக்கே இந்த மலைத் தொடரில் உள்ள ஒரு பகுதிதான் மொத்த மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரிலேயே மிக அதிக அளவில் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டிருக்கிறது. இதற்கு இன்னும் சற்று வடக்கேதான் குற்றாலம் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சிகளை வருடியபடி பொழியும் பருவ மழை கொண்டு வரும் நீரானது, பச்சைப் பசேலென்ற காடுகளின் வழி கிழக்கே பயணம் செய்து பற்பல வீழ்ச்சிகளாக சமவெளியை அடைகிறது. தாமிரபரணியுடன் திருநெல்வேலி பகுதி நிலங்களை வளமாக்கிப் பின்னர் மன்னார் வளைகுடாவை அடைகிறது.

குற்றால அருவியில் குளித்தால் பல மருத்துவ பலன்களைப் பெறலாம் என்று பழைய காலம் முதலே நம்பிக்கை இருந்து வருகிறது. பல விதமான பசுமையான காடுகளின் செடி கொடிகள் வழியே தவழ்ந்து வந்து குற்றாலத்தை அடைந்து நீர் வீழ்ச்சியாகப் பாயும்போது அது பல மருத்துவ குணங்களை தன்னிடத்தே அடக்கியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையென்பது பற்பல சிறு மலைத் தொடர்களை உள்ளடக்கியது. பழனி மலைத் தொடரும் ஆனைமலைத் தொடரும் சந்திக்கும் பகுதியில்தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான மலைகள் உள்ளன. 2,695 மீட்டர் உயரமுள்ள ஆனைமுடிதான் மேற்கு தொடர்ச்சியில் மிக உயரமான மலை. இதுவே தென்னிந்தியாவின் உயரமான மலை என்பதுடன், இமயத்துக்குத் தெற்கே இதுதான் மிக அதிக உயரமுள்ள மலையும் கூட! அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் இருப்பதுதான் இங்குள்ள வரையாடு. இது தவிர பல்வேறு வகை ஆடுகள், புள்ளிமான், காட்டெருமை போன்றவை இப்பகுதிக்கே உரித்தானவை. இவற்றை வேட்டையாட சிறுத்தைகளும் புலிகளும் ஒரு வகையான காட்டு நாயும் இங்கு உண்டு. இவை தவிர ஆசிய யானை இனத்தை சேர்ந்த யானைகளை மிக அதிக எண்ணிக்கையில் இந்தப் பகுதியில்தான் காண முடியும். இதுபோன்ற காரணங்களாலேயே இந்த மலைத் தொடரை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் அமைப்பான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்திருக்கிறது.

தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் !


தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் ! உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கீழே இரு மடங்கு சுமை பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும். அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது. தலையாட்டி பொம்மை போல.. தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது. இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சிலை, நாணயங்கள் இருக்கலாம் நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல.

அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும். எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்” என்றார். நம் கலைப்பொக்கிசம் தஞ்சைப் பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,இது எப்படி சாத்தியமானது ? ? ! ! படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் . தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏட்படுத்தியவர்கள் விஸ்வப் பிரம்மகுல சிற்பிகளே மன்னர் கட்டியது மன்னர்கட்டியது என மார்தட்டும் எந்தமன்னனாவது ஒரு சிறு கல்லைத் தூக்கியதாக வரலாறுண்டா ஒருகல்லை அது எந்தபதத்தில் உள்ளது என , தெரியும் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டு உள்ளன . எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது. பெரிய கோயில் அளவுகோல்… எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை 1, விரல், 2, மானாங்குலம், 3, மானம் என்று அழைத்தனர். 4, இருபத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. 5, ஒரு முழமே இருவிரல் நீட்டித்து(நீளம்) பதினாறு விரல் அகலத்து(அகலம்), ஆறுவிரல் உயரத்து (உயரம்)பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உயரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம். தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறைவெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கத . அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது.

சரியான அளவுகள் தெரியவில்லை. இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகளை தீர்மானித்திருக்கிறார்கள் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு 180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்,13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.கருவறையின் நிலகீழ் அமைப்பும் நிலத்தில் நீர் ஊற ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கருவறை அத்திவாரநிலபீடம் எனும் சிட்பசாஸ்திர அளவு முறை ஆலயம் கட்டும் போதும் பயன்படுகிறது என்பது ஒரு முக்கியகுறிப்பு ஆகும், சாரங்களின் அமைப்பு கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்ப ட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது. இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது.

விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்ட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ளஉதவின. அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது. மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்ட . விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது . !! ‘இராஜராஜேச்சரம்’ – பெயர்க்காரணம். “கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் ‘பெரிய கோயில்’ என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்.” “பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் ‘பெரியகோயில்’ என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது.

இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது.” சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை. இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன. “இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்.” “மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.” ‘இராஜராஜேஸ்வரம்’ எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து. நுழைவுக் கோபுரம் – கேரளாந்தகன் திருவாயில் keralanthakangate1இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்’ என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், CE) இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது. ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம். திருக்கோயிலின் அமைப்பு ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது.

இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது. இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது. அற்புதமான துவாரபாலகர்கள் பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.

சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை

சுரண்டை ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். சுரண்டை ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. இந்த சுரண்டை ஜமீனுக்கு 700 ஆண்டு வரலாறு சொல்லப்படுகிறது. சுரண்டை ஜமீன் சொந்தக்காரர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சுரண்டை பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது. சுரண்டை ஊர் அமைப்பு :
இப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகாவில் கீழ சுரண்டை,பங்களா சுரண்டை, மேல சுரண்டை என்ற மூன்று ஊர்களை கொண்டுள்ளது.இதன் ஜமீண்தார் கட்டாரி வெள்ளைதுரை என்ற வெள்ளை துரை பாண்டியன் :. இவர் ஆப்ப நாடு நாட்டிலிருந்து வந்த கொண்டையங்கோட்டை, மறக்குலத்தைச் சார்ந்தவர்கள்.
ஆதியில் இராமநாட்டைச் சேர்ந்த ஆப்ப நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வந்து வாழத் தொடங்கினர். அவர்களில் ஒருவர் வெள்ளைதுரை பாண்டியன். இவரது ஏற்றமும், தோற்றமும் போற்றுவதற்குரியதாக இருந்தது.

ஜமீன் தோற்றம் :
சுரண்டை ஜமீன் 14 ம் நூற்றாண்டில் ஜமீன் தோன்றியது என திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல் கூறுகிறார்.
பாண்டிய மன்னனே இம்மன்னவர்களை இந்த பகுதிக்கு திசைக்காவலானாக நியமித்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்பு நாயக்கர் கால் ஆட்சி காலத்தில் இந்த பகுதி பாளையமாக மாற்றப்பட்டது. அப்போது இந்த மன்னரின் படைகள் மதுரை காவல் கோட்டத்தின் முக்கிய அரனாக விளங்கியதால் திருமலை மன்னர் இவருக்கு தன் கட்டாரியை வழங்கி கட்டாரியார் வெள்ளைத்தேவன் என்ற பட்டம் அளித்தார்.

வெள்ளை துரை பெயர்-விளக்கம் :
சுரண்டை ஜமிந்தார்களுக்கு வெள்ளைத்தேவர் (அ) வெள்ளைத்துரை அதே போல் ரானியர்களுக்கு வெள்ளச்சி (அ) வெள்ளச்சி நாச்சியார் என்று பெயர் வழக்கம் உள்ளது. வெள்ளை துரை பெயர் நெல்லை தாமிரபரனி உற்பத்தியாகும் பொதிகை மலை பகுதியில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரையில் உள்ள பகுதி வரை உள்ள மக்கள் வெள்ளையப்பன்,வெள்ளைச்சி போன்ற பெயர்கள் பாண்டியன் காலத்தில் இருந்து மறவர் குலத்தில் வழக்கத்தில் உள்ளது என ஆய்வாலர்கள் கூறுகிறார்கள். சுரண்டை ஜமீனில் ஜமீன் இருக்கும் காலத்தில் தனது ஆட்சி முடிந்தவுடன் யார் மன்னராக வர வேண்டும் என்று மன்னர் யாரை கூறுகின்றாரோ அவரே மன்னராக பொறுப்பேற்க முடியும். மன்னர் யாரை வாரிசாக நியமிக்கின்றாரோ, அவர்தான் மன்னராக வரமுடியும். மன்னராகத் தேர்ந்தெடுக்க்பட்டவருக்கு ஒரு பிராமணர்தான் முடிசூட்டுவார். மன்னராக பொறுப்பேற்றவுடன் அவர் சில கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதாவது இறந்த உடலை பார்க்க கூடாதென்றும், கண் தெரியாதவர்களைப் பார்க்கக் கூடாது என்றும் இருந்தது. மேலும் மன்னருக்கு உரியதான தண்டிகை, மேளா, பல்லக்கு இதை மன்னர் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், மற்றவர் எவரும் பயன்படுத்தக்கூடாதென்றும் நடைமுறை இருந்தது.

சுரண்டை விடுதலைப்போர்:
ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான வெள்ளைத்துரை இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார்.இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் சுரண்டை மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வெள்ளையத்தேவரின் சுரண்டை கோட்டை முற்றுகை இடப்பட்டது. அந்த படையை மேஜர் ஹெரான் மற்றும் கேப்டன் வெல்லஷ் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர்.
1759ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை பூலித்தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முக்கியனமான போர் என்று கூறுகின்றனர். பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பரங்கிப்படை பூலித்தேவனின் தாக்குதல் முறையை கணிப்பதற்கு முன்பே பரங்கிப்படையில் பாதியை பூலித்தேவன் அழித்துவிட்டான். மேலும் அதில் ஐந்து முக்கிய பரங்கித்தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால் வலிமையிழந்த பரங்கிப்படை பின் வாங்கியது.
இறுதிப் போர்:
1799ல் மீண்டும் பரங்கிப்படை சுரண்டை கோட்டையை கர்னல் ஜே.பானர்மேன் கீழ் பீரங்கிப்படையுடன் தாக்கியது. இம்முறை பரங்கிப்படை நெல்லை தவிர்த்து சென்னையிலிருந்தும் வந்ததால் சுரண்டை பானர்மேனால் கைப்பற்றப்பட்டது. மன்னர் சுளுவ வெள்ளை துரை கைதியாக்கப்பட்டார்.சுரண்டை ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது.
ஜமீண்களுடன் தொடர்பு:
சுரண்டை மன்னர்கள் தனது பகுதிகளில் முக்கிய நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் சிங்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, கங்கைக் கொண்டான்,தலைவன் கோட்டை ஆகிய ஜமீனின் இல்ல விழாக்கள், அந்த பகுதி திருவிழாக்களிலும் ஜமீன்தார் கலந்துக் கொண்டனர். வடகரை ஜமீனுடன் நல்லுறவு வைத்திருந்தன.

முடிவுரை:
சுரண்டை பிற்காலத்தில் ஊற்றுமலை ஜமினுடன் இனைக்கபட்டுள்ளது. இன்றும் சிறப்புடன் திகழ்கிறது. இன்றும் இந்த ஜமீந்தார்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

Thursday 30 July 2015

பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் சங்கரன்கோவில்




பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் முக்கிய பிரதான ஸ்தலமாக சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரா யண சுவாமி கோவில் விளங்கி வருகிறது. சோழ நாட்டில் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. இதே போன்று பாண்டிய நாட்டிலும் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோ விலைச் சுற்றிலும் பஞ்ச ஸ்தலங்கள் அமைந் துள்ளது.

இதில் நிலம் (மண்) ஸ்தலமாக சங்கரன்கோவில் சங்கர லிங்க சுவாமி கோவிலும், நீர் (தண்ணீர்) ஸ்தலமாக தாருகாபுரம் மத்தியஸ்த நாத சுவாமி கோவிலும், நெருப்பு ஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலும், காற்று (வாயு) ஸ்தலமாக தென்மலை திரிபுரநாத சுவாமி கோவி லும், ஆகாய ஸ்தலமாக தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலும் அமைந்துள்ளது.இந்த பஞ்ச ஸ்தல ஆலயங்களில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இந்த 5 ஆலயங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

இறைவனின் ஐந்து முகங்கள்

1. ஈசானம் - பளிங்கி நிறம் -நடுவில் இருக்கும் முகம்.
2.தத்புருஷம் - பொன்னிறம் -கிழக்கில் இருக்கும் முகம்
3. அகோரம் - கருமை நிறம் -தெற்கில் இருக்கும் முகம்.
4. வாமதேவம் - சிவப்பு நிறம் -வடக்கில் இருக்கும் முகம்.
5. சத்தியோ ஜாதகம் - வெண்மை நிறம் - மேற்கில் இருக்கும் முகம்.

ஸ்ரீசங்கரநாராயணசுவாமி கோயிலின் முக்கிய திருவிழாக்கள்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த திருவிழாக்களின் விபரங்களை பக்தர்களாகிய நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.

1. சித்திரைப் பெருந்திருவிழா - 48 நாட்கள்.
2. ஆடித்தபசு திருவிழா - 12 நாட்கள்.
3. நவராத்திரி லட்சார்ச்சனை - 9 நாட்கள்.
4. ஐப்பசி திருக்கல்யாணம் - 10 நாட்கள்.
5. கந்தசஷ்டி திருவிழா - 6 நாட்கள்.
6. திருவெம்பாவை திருவிழா - 10 நாட்கள்.
7. தை மாதம் கடைசி வெள்ளி அன்று

ஆவுடைப்பொய்கை தெப்பத் தேரோட்டம் - -
8. நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு - மாதம் 2முறை.
பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆடிச்சுற்று

தொழிலதிபர் சி.ராமச்சந்திரன், லெட்சுமி பேன்ஸி ஸ்டோர் சங்கரன்கோவில் அருள் மிகு சங்க ரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 12 நாட்கள் ஆடித்தபசு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நாள் முதல் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறை வேற்ற அன்னை கோமதி அம்பாளை வேண்டி ஆடிச்சுற்றாக கோவிலின் உட்பிரகாரத்தை 108 முறை சுற்றி வரும் நிகழ்ச்சி இங்கு கோலாகலமாக நடந்து வருகிறது.

பக்தர்கள் ஆடிச்சுற்றில் கோவிலின் பிரகாரங்களை பக்தர்கள் சுற்றி வரும்போது இது கடலா இல்லை கடல் அலையா என்பது போன்று பக்தர்கள் கூட் டம் கோவிலில் சங்கமித்து இருக்கும். இந்த ஆடிச்சுற்றில் ஆண்கள் முதல் பெண்கள் வரையிலும், சிறுவர்கள் முதல் சிறுமியர்கள் வரை யிலும் கூட்டம் கூட்டமாக ஆடிச்சுற்று சுற்றி வரு வதை நாம் பார்க்க முடியும்.
இக்கோவிலில் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சுவாமி சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகளையும் சேர்த்து ஒரு பிரகாரமாக இருக்கும் கோவிலின் வெளிப்பிரகாரங்களை பக்தர்கள் 108 முறை சுற்றி வழிபடுவதையே ஆடிச்சுற்று என்கிறோம்.

ஐந்து வகை தாண்டவம்

1. ஆனந்த தாண்டவம் - தில்லை சித்திரைக்கூடம்.
2. அசாப தாண்டவம் - திருவாரூர்.
3. ஞானசுந்தரத் தாண்டவம்- திருவாலவாய்.
4. ஊர்த்துவத் தாண்டவம் - திருப்புக் கொளியூர்.
5. பிரமத் தாண்டவம் - திருமுருகன்பூண்டி.

Friday 5 June 2015

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 10 கடைசி


திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை, தென்காசி, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், கடையநல்லூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை இம்மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை, தென்காசி, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், கடையநல்லூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை இம்மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதுதொடர்பாக, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எம்.ஆர். அப்துல்காதர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும், பேட்டை, தென்காசி, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், கடையநல்லூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களுக்கான ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டுக்குரிய சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 25ஆம் தேதிமுதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி நிலையங்களில் பொறிப்பகுதி, கம்மியர், மோட்டார் வண்டி, பற்றவைப்பவர், மின்சாரப் பணியாளர், பம்ப் மெக்கானிக் மற்றும் இயக்குபவர், கம்மியர் மின்னணுவியல், கம்மியர் (குளிர்சாதனம்) மற்றும் தட்பவெப்பநிலையக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

இங்கு பயிலும் மாணவர், மாணவிகளுக்கு வளாகத் தேர்வு மூலம் உரிய வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இலவச மடிக்கணினி, இலவச சீருடை, இலவச மிதிவண்டி, இலவச பேருந்து பயண அட்டை, இலவச புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் அனைவருக்கும் கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 500 வழங்கப்படுகிறது.

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதி, வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளுக்கு உணவு வசதியுடன் இலவச தங்கும் விடுதி வசதியும் உள்ளது. கம்பியாளர், பற்றவைப்பவர் போன்ற பிரிவுகளில் சேர 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்திருக்க வேண்டும்.

பிற தொழிற் பிரிவுகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண், பெண் இருபாலரும் அனைத்துப் பிரிவுகளுக்கும் தகுதியுடையோர். கம்மியர் மோட்டார் வண்டி தொழில் பிரிவில் சேரும் ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ராதாபுரம், கடையநல்லூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சிபெற்று தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 0462 - 2342005, வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04633 - 277962, அம்பாசமுத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04634-251108, தென்காசி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு 04633 - 280933 என்ற தொலைபேசி எண்களில் அலுவலக வேலை நாள்களில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்டத்தில் உள்ள எந்தப் பயிற்சி நிலையத்திலும் விண்ணப்பம் பெற்று எந்தப் பயிற்சி நிலையத்திலும் சேரலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 10ஆம் தேதிக்குள் அந்தந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றார் அவர்.

Wednesday 29 April 2015

மூத்த தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியத்துக்கு ‘தண்டமிழ் ஆசான்’ விருது திருவள்ளுவர் கழகம் வழங்கியது


புதன், ஏப்ரல் 29,2015, 4:30 AM IST


மூத்த தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியத்துக்கு ‘தண்டமிழ் ஆசான்‘ என்ற விருதை கடையத்தில் நடந்த விழாவில் திருவள்ளுவர் கழகம் வழங்கியது.

‘தண்டமிழ் ஆசான்‘ விருது

நெல்லை மாவட்டம் கடையம் கலையரங்கில் திருவள்ளுவர் கழகத்தின் 21–வது ஆண்டு விழா மற்றும் மூத்த தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியனுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

திருவள்ளுவர் கழக தலைவர் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியனுக்கு ‘தண்டமிழ் ஆசான்‘ என்ற விருதை வழங்கி, திருவள்ளுவர் கழக செயலாளர் அறிவரசன் பேசினார்.

‘பாரதியின் உலகப்பார்வை‘ என்ற தலைப்பில் மாணவர் சிவ.மணிமாறன் பேசினார். ‘வாழ வைக்குமா வள்ளுவம்‘ என்ற தலைப்பில் புலவர் செந்தலை ந.கவுதமன் பேசினார்.

விழாவில் தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேசியதாவது:–

இது பாரதியார் வாழ்ந்த ஊர், நடந்த இடம். இந்த இடத்தில் எனக்கு ‘தண்டமிழ் ஆசான்‘ என்ற விருது வழங்கப்பட்டு இருப்பதை நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். தமிழை உணர்ந்தவர்கள் குறைவாகிக் கொண்டிருக்கிறார்கள். இது வருந்தத்தக்கது.

தற்கொலையாகும் காதல்

தற்காலத்தில் காதல் வயப்படுகிறார்கள். ஆனால், சில நாட்களில் தற்கொலைக்கு ஆளாகின்றனர். உண்மையான அன்பு இருந்தால், காதலில் யாருக்கும் தோல்வி இருக்காது.

தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து கிடையாது. ஆனால் திருக்குறளில் கடவுள் வாழ்த்து வருவதற்கு தொல்காப்பியம் தான் காரணம். தமிழின் பெருமையை உலகத்தினர் புரிந்து கொள்ளும் வகையில், உலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதை வலியுறுத்தி ஆங்கிலத்தில் நூல் எழுதி உள்ளேன்.

தமிழ்த்தாய் அரவணைத்தாள்

நான் 5 வயதில் தாயை இழந்து விட்டேன். ஆனால் தமிழ்த்தாய் என்னை அரவணைத்தாள். தமிழ்தான் என் உயிர்.

86 வயதிலும் நான் தளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு தமிழ்தான் காரணம். தமிழ் கற்றவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். வள்ளுவர் கூறும் 10 உடைமைகளுடன் இருக்க வேண்டும். பேராற்றல் உடையது தமிழ். இதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.

இவ்வாறு தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேசினார்.

ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக பொறுப்பாளர்கள் சுந்தரம், சங்கரநாராயணன், கடையம் திருவள்ளுவர் கழக பொறுப்பாளர்கள் மு.அ.சித்திக், இந்திரஜித், சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக திருவள்ளுவர் கழக துணை தலைவர் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றுப் பேசினார்.

முடிவில் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Sunday 22 March 2015

இரா.உ.விநாயகம் பிள்ளை-நாத தனுமனிஷம்

‘மஞ்சரில விளாத்திகுளம் சாமியப் பத்தி வீரகேரளம்புதூர் விநாயகம் பிள்ளைன்னு ஒருத்தர் எழுதியிருக்காரு. படிச்சு பாருங்க. நல்லா இருக்கு’. வேறு ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக இதை சொன்னார் நண்பர் ஜெயமோகன். ‘மோகன், அது வேற யாருமில்ல. எங்க பெரியப்பா’ என்றேன். விளாத்திகுளம் சாமியைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மனிதர்களைப் பற்றி, எவ்வளவோ விஷயங்கள் பற்றி விநாயகத்துப் பெரியப்பா சொல்லி நான் தெரிந்திருக்கிறேன்.

விநாயகத்துப் பெரியப்பா ஒன்றும் எனக்கு ரத்த உறவு இல்லை. ஆனாலும் பெரியப்பா. இப்படி பல உறவுகள் எனக்கு உண்டு. ஐம்பதுகளில் நெல்லை சகோதரர்கள் என்றழைக்கப்பட்டு கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த எனது பெரியப்பாக்களோடு மிருதங்கம் வாசிப்பவராக அறிமுகமாகி எங்கள் குடும்பத்துக்குள் வந்தவர்தான் விநாயகத்துப் பெரியப்பா. அதன் பின் தாத்தாவுக்கும், ஆச்சிக்கும் மற்றொரு மகனாக ஆகியிருக்கிறார். எனது சொந்த பெரியப்பாக்களை விட நான் அதிகமாக பெரியப்பா என்றழைத்தது விநாயகத்துப் பெரியப்பாவைத்தான். எப்போதுமே வெள்ளை அரைக்கைச் சட்டையும், வேட்டியும்தான் உடை. மாநிறம். சற்று பருமனான உடல்வாகு. மீசையில்லாத முகத்தில் சிரிக்கும் போது சற்றுத் தூக்கலான முன்பல் இரண்டும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்.

ரசிகமணி டி.கே.சி.யுடன் நெருங்கிப் பழகிய பெரியப்பாவைப் போன்ற ஒரு கலா ரசிகரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. புகழ் பெற்ற தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். அந்த வகையில் தமிழறிஞர்கள் கி.வா.ஜ, திருக்குறள் முனுசாமி போன்றோரின் நண்பர். எந்த ஒரு சூழலுக்கும் ஒரு குறள் சொல்லுவார். ‘இதுக்கும் ஒரு கொறள் வச்சிருப்பேளே’ என்று கேட்டால், ‘என்ன செய்யச் சொல்லுதெ? அந்த பேதீல போவான் எல்லா எளவுக்கும்லா எளுதி வச்சிருக்கான்’ என்பார். மிருதங்கம், ஹார்மோனியம் போக தானே உருவாக்கிய ஒற்றைக் கம்பி வாத்தியம் ஒன்றும் வாசிப்பார். அந்த வாத்தியத்தை பத்திருபது நிமிடங்களுக்குள் உருவாக்கி வாசிப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒற்றைத் தந்தியில் அத்தனை ஸ்வரங்களையும் கொண்டு வந்து இசைப்பது அவ்வளவு எளிதில்லை.

திருநெல்வேலிக்கு பெரியப்பா வந்தால் குறைந்தது நான்கு நாட்களாவது எங்கள் வீட்டில் தங்குவார். அந்த நான்கு நாட்களும் வீடே நிறம் மாறிவிடும். காலையில் கொஞ்சம் தாமதமாகவே குளிக்கச் செல்வார் பெரியப்பா. அரைத்தூக்கத்தில் இருக்கும் என்னை ஹார்மோனியமோ, மிருதங்கமோ வந்து வருடி எழுப்பும். ஹார்மோனியம் வாசிக்கும் போது பெரியப்பாவிடம் ஒரு கனிவு தெரியும். சித்தரஞ்சனி ராகத்தில் ‘நாத தனுமனிஷம்’ கீர்ததனைதான் பெரியப்பா அடிக்கடி வாசிப்பது. சில சமயங்களில் இருமலோடு பாடுவதும் உண்டு. சித்தரஞ்சனி ஒரு சுவாரஸியமான ராகம். அதில் மேல் ஸட்ஜமத்துக்கு மேலே உள்ள ஸ்வரங்களுக்கு வேலை இல்லை. அந்தச் சின்ன ஏரியாவுக்குள் பெரியப்பா சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வாசித்துக் கொண்டிருப்பார். தூக்கம் கலையாத கண்களுடன் அவரருகில் சென்று உட்காருவேன். ஹார்மோனியத்திலிருந்து கையை எடுக்காமலேயே, அந்த சமயத்தில் தான் வாசித்துக் கொண்டிருக்கும் பிடிமானத்தை கண்களால் எனக்குக் காட்டிச் சிரிப்பார்.

பெரியப்பாவின் ஹார்மோனிய வாசிப்புக்கு நான் பலமுறை மிருதங்கம் வாசித்திருக்கிறேன். அவரது வேகத்துக்கும், லயிப்புக்கும் என்னால் ஈடு கொடுக்க முடிந்ததே இல்லை. கொஞ்ச நேரத்திலேயே நைஸாக மிருதங்கத்தை பெரியப்பாவின் பக்கம் தள்ளிவிட்டு நான் ஹார்மோனியத்தை எடுத்துக் கொள்வேன். மிருதங்கம் கையில் வந்தவுடன் பெரியப்பா ஆளே மாறிவிடுவார். அசுர பலம் வந்து வாசிப்பார். அவர் வாசிப்பில் மிருதங்கம் பேசும். அழும். சிரிக்கும். அதற்குப் பின் மிருதங்கத்திலிருந்து பெரியப்பா வெளியே வர ரொம்ப நேரம் ஆகும். ‘சாமியாடிட்டேளே பெரிப்பா’ என்பேன். ‘வாசிச்சா அப்படித்தான்யா வாசிக்கணும். இல்லென்னா அதத் தொடவே கூடாது’ என்பார். அவரைப் போலவே என்னையும் அந்த இரண்டு வாத்தியங்களிலும் தயார் செய்து விடவேண்டும் என்று பெரியப்பா விரும்பினார். நான் தான் அதற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. இதில் என் மேல் அவருக்கு எப்பொழுதும் ஒரு தீராத வருத்தம் இருந்தது. ‘எல்லாருக்கும் இது வராது. ஒனக்கு வருது. ஆனா வாசிக்க ஒனக்கு வலிக்கி’. பாளயங்கோட்டையில் ஒரு கச்சேரியில் நான் மிருதங்கம் வாசித்து விட்டு திரும்பும் போது உடன் வந்திருந்த பெரியப்பா சலிப்புடன் இதை சொன்னார்.

பெங்களூர் சுந்தரம் அவர்களின் ‘ஆனந்த ரகஸ்யம்’ புத்தகத்தை வைத்துக் கொண்டு நானாக சில ஆசனங்களை பயின்று கொண்டிருந்தேன். ‘பொஸ்தகத்த பாத்துல்லாம் ஆசனம் போடக் கூடாதுய்யா’ என்று சொல்லி, முறையாக எனக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்த ஆசான் அவர். எனக்கு தெரிந்து அப்போதே அவர் எழுபதை நெருங்கியிருந்தார். ஆனால் அந்த வயதிலும் சிரசாசனம் உட்பட கடினமான ஆசனங்களைப் போட்டு காண்பித்து என்னை அசரடித்தார். இத்தனைக்கும் வாதம் காரணமாக அவரது இரண்டு கால்களும் சற்று வளைந்திருக்கும். அந்தக் கால்களை வைத்துக் கொண்டு அவர் நடக்கும் தூரம் நம்ப முடியாதது. பெரியப்பாவுக்கு மாலையிலும் ஒரு குளியல் உண்டு. குளித்து முடித்த பின் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து நடுவகிடெடுத்து தலை வாருவார். மெல்ல நடக்க ஆரம்பிப்பார். இரண்டு மணிநேரம் கழித்து நெற்றி நிறைய திருநீறுடன் வீடு திரும்புவார். நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி வந்திருக்கும் களைப்பு அவர் உட்காரும் போது நமக்கு தெரியும்.

‘நானேதானெ இங்கெ வந்துக்கிட்டிருக்கென். நீ ஒரு நாளைக்கு வீரகேரளம்புதூர் வாய்யா’. ரொம்ப நாட்கள் சொல்லிக் கொண்டிருந்த பெரியப்பாவுக்காக ஒரு மாலையில் அங்கு சென்றேன். சந்தோஷத்தில் பெரியப்பாவின் வீட்டிலுள்ள அனைவரும் உபசரித்தார்கள். தடபுடலான இரவு உணவுக்குப் பின் சுகமான காற்றடிக்க இருவரும் சிறிது தூரம் நடந்தோம். ஊரே அடங்கிய அமைதியான பொழுதில் வீட்டு வாசலறையில் வந்து உட்கார்ந்தோம். பெரியப்பா ‘அந்த பொட்டிய எடு’ என்றார். பெரியம்மை ஒரு பழைய அழுக்குப் பெட்டியை எடுத்து கொடுக்க, அதை தன் பக்கம் நகர்த்தி உள்ளுக்குள்ளிருந்து நிறைய கேஸட்டுக்களை எடுத்தார். எல்லாமே பழையவை. ஒரு மோனோ டேப்ரிக்கார்டர் அருகில் இருந்தது. ‘எய்யா, இத கொஞ்சம் கேளேன்’. கரகரவென கேஸட் ஓடத் துவங்கியது. ஆல் இண்டியா ரேடியோவின் ஒலிபரப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. மயக்கும் குழலிசை. ‘என்ன ராகம் தெரியுதா?’. சற்று நேரம் யோசித்து விட்டு மால்கௌன்ஸ் மாதிரி இருக்கு’ என்றேன். ‘அதேதான். எப்படி வாசிச்சிருக்கான் பாத்தியா?’ பன்னாலால் கோஷ் என்னும் மேதையை அந்தப் பழைய கரகர ஒலிபரப்பில் அன்றைக்குத்தான் முதன்முறையாகக் கேட்டேன். ‘பேஸ் வாசிக்கறதுக்காக தான் விரல அறுத்து ஆபரேஷன் செஞ்சுக்கிட்ட சண்டாளன்யா இவன்’. இந்த மாதிரி ஏதாவது சொல்லும் போது உணர்ச்சி மிகுதியில் பெரியப்பாவின் குரல் உடையும். அப்போது அவர் அழுகிறாரோ என்று நமக்கு சந்தேகம் வரும். பன்னாலால் கோஷைத் தொடர்ந்து படே குலாம் அலிகானும் அன்றைய எங்களின் இரவை நிறைத்தார்.

ஜிம் ரீவ்ஸின்(Jim reeves) குரல் விநாயகத்துப் பெரியப்பாவுக்குப் பிடித்தமான ஒன்று. ‘இந்த ரீவ்ஸ் பய அடியோஸ் அமிகோஸ்னு பாடும் போது நம்ம தோள்ல கையப் போட்டுக்கிட்டு காதுக்குள்ள வந்து பாடுற மாதிரி இருக்குல்லா’ என்பார். லாரல் ஹார்டி இரட்டையர்களும் அவருக்கு பிடித்தமானவர்கள். சில வசனங்களை மீண்டும் மீண்டும் சொல்லி ஒரு குழந்தை போல ரசித்துச் சிரிப்பார். வீரகேரளம்புதூர் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து கொண்டு இவர் எப்படி எல்லாவற்றையும் ரசிக்கிறார் என்று ஆச்சரியமாகவே இருக்கும். நான்கைந்து ஆண்டுகளாகச் சந்திக்கும் வாய்ப்பில்லாமல் இருந்தேன். அவ்வப்போது போஸ்ட் கார்டில் நுணுக்கி எழுதி அனுப்புவார். அதில் ஒரு குறுங்கவிதையோ, சங்கீத சமாச்சாரமோ, குற்றாலச் சாரல் பற்றிய செய்தியோ இருக்கும். அந்தச் சின்ன அஞ்சலட்டைக்குள் அதிக பட்சம் எவ்வளவு எழுத முடியுமோ, அவ்வளவு எழுதியிருப்பார். ‘முதுமை காரணமாக இப்போதெல்லாம் எங்குமே செல்ல முடிவதில்லை. வீரகேரளம்புதூரிலேயே இருக்கிறேன். நீ இங்கு வா. ஆசி’ என்றெழுதிய ஒரு கார்டு சென்ற ஆண்டில் வந்திருந்தது. ஒரு சில வாரங்களில் வீரகேரளம்புதூர் செல்லும் வாய்ப்பு வந்தது. கொஞ்சம் இளைத்திருந்த பெரியப்பா என்னைக் கண்டது எழுந்திருக்க முடியாமல் எழுந்து வந்து கட்டியணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தினார்.

‘மிருதங்கத்த எப்பவோ கைகளுவிட்டெ. ஆர்மோனியமாது வாசிக்கியாய்யா’ என்று கேட்டார். ‘அப்பப்பொ வாசிக்கென். அன்னைக்குக் கூட நாத தனுமனிஷம் வாசிச்சென்’ என்றேன். ‘நானும் அன்னைக்கு டெலிவிஷன்ல சின்னப்பா காதல் கனிரசமே பாடும் போது ஒன்னத்தான் நெனச்சுக்கிட்டென்’ என்றார். சில மாதங்களுக்கு முன் என் தம்பி என்னிடம் இனி நாம் வீரகேரளம்புதூருக்குச் செல்லும் அவசியமில்லை என்ற அர்த்தத்தில் விநாயகத்துப் பெரியப்பாவைப் பற்றிய சேதி சொன்னான். அதுவே அவனுக்கு தாமதமாக வந்த செய்தி. அன்றைக்கு முழுக்க என் மனதில் நாததனுமனிஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஜெயமோகன்..

இது தமிழர்

முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்களில் உருவான பல அரிய தமிழ்க்கலை நூல்களை தின்றழித்த தாமிரபரணியின் கரையில்தான் இந்த தமிழ்ப்புரட்சியும் நடந்து வருகிறது. காடாகக் கிடந்த 120 ஏக்கர் பரப்பை செதுக்கிச் செப்பனிட்டு, ‘தமிழூர்’ என்ற ஒரு கிராமத்தையே நிர்மாணித்திருக்கிறார் ச.வே.சு என்று அன்பாக அழைக்கப்படும் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன். தமிழின் தொன்மத்தை நிறுவும் பல்வேறு ஆராய்ச்சிகள் தமிழூரில் நடந்து வருகின்றன. 25 ஆயிரம் அரிய நூல்களைக் கொண்ட மூன்று நூலகங்கள் எந்நேரமும் ஆய்வு மாணவர்களால் நிரம்பி வழிகின்றன.
முழங்காலுக்கு மேலான வேட்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு... டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஏதுமறியாத கிராமத்துப் பெரியவரைப் போல காட்சியளிக்கிறார் ச.வே.சு. ‘தமிழ்ப்பழம்’ என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். வீரகேரளம்புதூரைச் சேர்ந்த இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும், கேரள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பணி செய்ய ஆரம்பித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குனராக உயர்ந்தவர். ‘‘ச.வே.சு சிலப்பதிகாரம் நடத்தினால் வகுப்பறை முழுவதும் தமிழும் இசையும் ததும்பி நிற்கும்’’ என்கிறார்கள் அவரது மாணவர்கள்.

ஓய்வுக்குப் பிறகு, தம் சொந்த ஊருக்கு அருகிலேயே தமிழூரை நிர்மாணித்து, சங்க இலக்கிய ஆய்வுகள், இலக்கிய உரைகள் என எந்நேரமும் தமிழும், இலக்கியமுமாகவே வாழ்கிறார். 84 வயதான இவரது பணியை மெச்சி, சாகித்ய அகாடமியின் பாஷா சன்மான் உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

‘‘இது எனது நெடுநாள் கனவு. உலகில் வேறெந்த சமூகத்துக்கும் தம் மொழியின் பால் இவ்வளவு அலட்சியம் இல்லை. தமிழ் பிழைப்புக்குரிய முதலீடாக இங்கே மாறிவிட்டது. தமிழாசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் படிக்க வைக்க தயங்குகிறார்கள். சங்க இலக்கியங்கள்தான் நம் மொழியின் செழுமைக்கும், தொன்மைக்கும் சான்று. அதை சர்வதேச தளத்தில் நிறுவுவதற்கான ஆய்வுகள், ஏற்பாடுகள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. நிறைய வரலாறு பதிவு செய்யப்படாமல் கிடக்கிறது’’ என்று வருந்துகிற ச.வே.சு, இதுவரை 170 நூல்களை எழுதியிருக்கிறார்.

ஆலங்குளத்துக்கும் தென்காசிக்கும் இடையில், பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது தமிழூர். அரசுப்பதிவேடுகளும் இப்பெயரை அங்கீகரித்துள்ளன. ச.வே.சு இங்கு வரும்முன்பு, அத்தியூத்து கிராமத்தின் ஒரு அங்கமாக இப்பகுதி இருந்தது. 1985ல் இந்த இடத்தை வாங்கிய ச.வே.சு, இதை ஒரு கல்வி கிராமமாக மாற்றும் எண்ணத்தில் 35 ஏக்கர் நிலத்தை ஒரு பொறியியல் கல்லூரிக்குக் கொடுத்தார். அருகில் ஒரு வேளாண்மைக் கல்லூரியையும் தொடங்கினார். தென்னந்தோப்பு, மாந்தோப்புகளை உருவாக்கினார். உலகத்தமிழ் கல்வி இயக்கம் என்ற அமைப்பு தொடங்கி, சர்வதேச அளவில் தமிழ் பற்றி ஆய்வுசெய்யும் மாணவர்களை ஒருங்கிணைத்தார். குடியிருப்புகளையும் உருவாக்கினார். தற்போது வேளாண் கல்லூரி செயல்படவில்லை. குடியிருப்புகளில் ஆய்வு மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள். ஊரின் நடுவில் தனக்கென ஒரு வீட்டையும் கட்டியிருக்கிறார். வீட்டின் பெயர் தமிழகம்.


‘‘தமிழ்ல இருக்கிற பழமையான இலக்கியங்களை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை என்னைப் போன்றவங்களுக்கு இருக்கு. இலக்கியங்கள்தான் நமக்கு சொத்து. ஆனால், மொழி மேம்பாட்டுக்கான ஆதரவும் இங்கே குறைவா இருக்கு. அந்தக்காலத்தில் தமிழ்ப்பணிக்காக பெரும் செல்வங்களைக்கூட இழந்தவர்கள் இருந்தார்கள். எங்கள் வீரகேரளம்புதூரை உள்ளடக்கிய ஊத்துமலை ஜமீன் இருதாலய மருதப்பர், 37 கவிஞர்களைக் கொண்டு ஊத்துமலை பிரபந்த திரட்டு ஒன்றை உருவாக்கினார். அந்தத் திரட்டின் ஒரு பிரதியை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன். காவடிச்சிந்து இயற்றிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்ற பலரை அரவணைத்துப் பாதுகாத்தார் மருதப்பர். நெல்லைக்கு வந்த உ.வே.சாமி நாதய்யருக்கு ஒரு மாட்டுவண்டி நிறைய ஓலைச்சுவடிகளை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அதில்தான் பத்துப்பாட்டும், குறுந்தொகையும் கிடைத்தன. மருதப்பரைப் பற்றி படித்தபிறகுதான் தமிழில் எனக்கு ஈடுபாடு வந்தது.

எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் கையில் இந்த வேலைகளை ஒப்படைக்க வேண்டும். மாதம்தோறும் ஏதேனும் ஒரு கருத்துருவை முன் வைத்து கருத்தரங்கங்களை நடத்துகிறேன். சிறந்த கட்டுரைகளைத் தேர்வுசெய்து பரிசு வழங்குகிறேன். இப்பணியை இன்னும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது’’ என்கிற ச.வே.சுவின் துணைவியார் பார்வதி அம்மாள். 2 மகன்கள். மூத்தவர், பள்ளி ஆசிரியர். இளையவர், கோவை வேளாண் கல்லூரியில் பேராசிரியர்.

தற்போது ‘தொல்காப்பியமே உலகின் முதல் பொதுநூல்’ என்ற உண்மையை நிறுவும் ஆய்வுகளில் தீவிரமாக முனைந்திருக்கிறார் இவர். தவிர, ‘தமிழ்மரபுச் செல்வம்’ என்ற திட்டத்தை உருவாக்கி, தொல்காப்பியர் தொடங்கி வாலி வரையிலான தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய ஆய்வுகள் தமிழூரில் தீவிரமாக நடந்து வருகின்றன.

Friday 20 February 2015

நெல்லை மாவட்டத்தில் நவீன நில அளவை நிலையம் பிரபாகரன் எம்பி தகவல்

நெல்லை மாவட்டத்தில் 11 தாலுகாக்களில் நவீன நில அளவை மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக பிரபாகரன் எம்பி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பிரபாகரன் எம்பி பேசியதாவது: நெல்லை மாவட�டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 19 ஊராட்சி ஒன்றியங்களில் 425 கிராம பஞ்சாயத்துகளில் 3 லட்சத்து 52 ஆயி ரத்து 730 குடும்பங்களில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 431 பேர் பதிவு செய்யப்பட்டு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.167 வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 63 பேர் பதிவு செய்து 76.98 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.221 கோடி மதிப்பீட்டில் 36 ஆயிரத்து 289 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 214 பணிகள் முடிந்துள்ளன.
தேசிய ந�ல ஆவணங்கள் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 11 தாலுகா அலுவலகங்களில் நவீன நில அளவை மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் பாளை, சங்கரன்கோவில், ராதாபுரம், வீ.கே.புதூர், ஆலங்குளம் ஆகிய 5 தாலுகாக்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நெல்லை, அம்பை, நாங்குநேரி, சிவகிரி, செங்கோட்டை, தென்காசி ஆகிய 6 தாலுகா அலுவலகங்களில் பணிகள் நடந்து வருகிறது. இவ�வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மேயர் புவனேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விஜயகுமார், மகளிர் திட்ட அலுவலர் ஜெயக்குமார், கண்காண�ப்புக் குழு உறுப்பினர்கள் ஜோதி பரமச�வன், வெண்ணிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத் துரை, கவுன்சிலர் பரணி சங்கரலிங்கம், மானூர் யூனி யன் சேர்மன் கல்லூர் வேலாயுதம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிரபாகரன் எம்பி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில், மின் ஆளுமை திட்டத்தின் கீழ், 3ஆம் கட்டமாக திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் இணையதளம் வழியே சான்றிதழ்கள் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மின் ஆளுமை திட்டத்தின் கீழ், 3ஆம் கட்டமாக திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் இணையதளம் வழியே சான்றிதழ்கள் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருநெல்வேலி மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ், வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் மக்கள் பல்வேறு சான்றிதழ்களை இணையதளம் வழியே பெறும் புதிய வசதியை முதல்கட்டமாக ராதாபுரம் வட்ட அலுவலகமும் இரண்டாம் கட்டமாக நான்குனேரி, அம்பாசமுத்திரம் வட்ட அலுவலகங்களும் அளித்துவருகின்றன. மூன்றாம் கட்டமாக வெள்ளிக்கிழமை முதல் (பிப். 20) திருநெல்வேலி, வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சனிக்கிழமை முதல் (பிப். 21) செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் இந்த வசதி செயல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, இந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மக்கள் ஜாதி, வருமானம், நிரந்தர இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் ஆகியவற்றுக்கு தங்களது கிராமத்துக்கு அருகேயுள்ள பொது சேவை மையம் மூலம் இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

வட்ட அலுவலகங்களில் நேரிடையாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. இம்முறையில் இணையதளம் வழியே அனுப்பப்படும் விண்ணப்பங்கள் உரிய கிராம நிர்வாக அலுவலருக்கு இணையதளம் வழியே சென்றுவிடும். அவரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் உரிய வருவாய் ஆய்வாளருக்கும் பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் இணையதளம் வழியாகவே சென்றுவிடும். ஏற்கப்பட்ட விண்ணப்பத்துக்கான சான்றிதழ்களை பொதுமக்கள் விண்ணப்பித்த பொதுசேவை மையம் மூலம் எளிதில் பெறலாம்.

மேலும், திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்டத்துக்குள்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களான மானூர், பாளையங்கோட்டை, ஆலங்குளம், தென்காசி, கீழப்பாவூர், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சமூக நலத்துறையின் சார்பிலான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழையர் விதவை மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களையும் பொதுசேவை மையங்களில் இணையதளம் வழியே பதிவுசெய்தால் போதும். இதன் மூலம் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு வீணாக அலைவதையும், காலவிரயத்தையும் தவிர்க்கலாம்.

எனவே, திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்ட அலுவலகங்களுக்கு உள்பட்ட கிராம பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவ

Sunday 25 January 2015

வீரகேரளம்புதூர் திருமால் பதிகம்


ஒம் நாராயணாய நம

வீரகேரளம்புதூர் திருமால் பதிகம்
காப்பு
நேரிசை வெண்பா

காரைப் பழித்த கருநிறத்தெங் கண்ணனைத்தென்
வீரைப் பதியில் விழம்புதற்குத்-தாரைமதத்து
ஆனைமுக நாற்தோள் ஐந்துகரங் கொண்டவிருஞ்
சேனையர்கோன் காப்புச் சேயும்.

நூல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

உன்னதுசந் நிதியில்வந்து உவணமிசை
உன்னுருவம் உன்னா நிற்கும்
முன்னம்எனது உளமறியப் புரிகருணை
உலகுணர முதிர்நாள் என்றோ ?
பன்னகத்தின் தலைஎறிப் பரதம் இயற்
றியசெழுந்தாட் பசும்பொற் குன்றே
மின்னகுவேற் படை வீரர் பலர்போற்றக்
குலவுதமிழ் வீரை மாலே !

கச்சியில்ஒர் புலவன்நவில் கவிஒன்றாற்
போயிமீண்ட கதைமெய் யாகில்
நச்சியவாறு எத்தனையோ பனுவல்நுவன்
றுள்ளேனை நலிக்க லாமோ ?
பச்சிறகொன்று அணிதருகு ழியக்குருந்தாய்ப்
பொதுவர்மனை பலவற்று உற்றாய் !
மெச்சியபா வலர்தமக்கோர் ஆதரமாத்
திகழ்தருதென் வீரை மாலே !

பூதலத்தில் உள்ள உயிர் அத்தனைக்கும்
தகும்உணவு புகட்டும் நீநின்
பாதம்மற வேனைஇவன் வருத்தலும்பே
ரருட்குரிய பண்பு தானோ ?
மாதவன்என்று இறைஞ்சினருக்கு அருள்பேற்றை
இகழ்ந்தார்க்கும் வழங்கி ஆண்டாய்!
மெதகுசிற் றாறுஅதன்பால் விளங்கும்அம
ரர்பதிநேர் வீரை மாலே !

அல்லிக்கே ணியிற்கொடுத்த கடன்சீட்டும்
தலையாகி அலர்ந்த பூவில்
நல்லிக்கே எனஅனந்தை நகரில்உரைத்
திடும்மொழியும் நம்பொண் ணாதோ ?
புல்லில்தோல் உரித்தணிந்தான் தலைநடுச்செந்
நீரருவி பொலியத் தாக்கும்
வில்லிக்கோர் சாரதியாம் விளையாட்டும்
செயத்துணிந்தாய் வீரை மாலே !

திருவரங்கப் பெருநகரில் என்னதுபாட்டு
உவந்துசற்றே சிரித்த நின்வாய்
ஒருவரம்சத் தியமாக கொடுக்கில் இவ்வாறு
ஊருர்தொறும்போய் உழல்வென் கொல்லோ ?
இருவான்புற் றமைவதற்கும் இடங்கொடுத்த
நெடுமேனி இறைவா! விண்ணோர்
வெருவரச்செய் வார்க்கறுவும் வென்றியுளாய்!
வியங்குலவும் வீரை மாலே !

உரைக்கரும்பற் பலதொழும்பர் உனைத்துதிக்கின்
றார்கதிவேட்டு உன்கை ஒர்நாள்
வரைக்குடைதாங் கியும்புரந்த பசுவினம்வாழ்
வதுகுறித்து வருந்து கின்றேன்!
திரைக்கலைப்பா ரினர்இகழா வாறுஅருள்வாய் !
கவுத்துவமும் திகழ்பல் பூணும்
விரைத்துளவும் திருமகளும் மிளிர்மார்பா
வீரர்மலி வீரை மாலே !

தெள்ளியசெந் தமிழ்ப்புலவர் குலம்மதிக்கும்
பேறளித்தாய்! சேணா றாக்கும்
ஒள்ளியசீர்க் குளிகையுளார் இனம்மதிக்கத்
தகும்வாழ்வும் உதவி ஆள்வாய் !
துள்ளியஏறு ஏழ்அடர்த்துஒர் மகட்புணர்ந்தாய்!
பாண்டவர்கை சேரா வண்ணம்
வெள்ளியசங்கு ஒன்றெடுத்து ஊதியகனிவாய்
முகிலனையாய்! வீரை மாலே !

கூர்த்தநெடும் கோட்டொருமால் களிறுஅழைப்பச்
சென்றபுகழ் குன்றி டாமல்
தூர்த்தகுணக் கலியாய் முதலையினால்
தளரும்என்முன் தோன்றி ஆள்வாய் !
போர்த்தகுவர் குலத்தினுக்கோர் கூற்றாகும்
ஆழியங்கைப் புயலே! பொல்லார்
வேர்த்தவச முறத்தாக்கும் வெங்கலவன்
மரபுயர்த்தும் வீரை மாலே !

தந்தைசினம் சகிப்பரிதாத் தன்னுயிர்காப்
பதற்கிரங்கும் தகுவப் பாலன்
சிந்தைஉவப் புறத்தூணில் உதித்ததுண்டேல்
எனக்குதவி செய்யத்தான் வேண்டும்!
பந்தைநிகர் கொங்கைமின்னார் பலர்கலைகொண்டு
ஒருத்திபெறப் பலவாங்கு ஈந்த
விந்தையுள்ளாய்! மண்ணுலகும் விண்ணுலகும்
பரவுதிரு வீரை மாலே !

துதிபகர்என் றனக்குஉலவா அருட்பேறும்
திருக்கோயிற் தொண்டே நாடும்
மதிஇதயா லயற்குஅருமை மகப்பேறும்
இக்கணமே வழங்கி ஆள்வாய் !
பதின்மர் தமிழ்க்கு அருள்புரிந்தாய்! பரிமுகன்கைக்
கனைஎரித்த பாலற் காத்தாய்
விதிவிதிப்பார் பலர்பிறக்கும் வியன் உந்தித்
தாமரையாய்! வீரை மாலே !


நூற்பயன்

சீதளசந் திரனொடுசெங் கதிரனைய
சங்காழித் திருக்கை யானை
வெதநெறி பிழையாமல் உசந்தெறும்பல்
வாறு உருக்கொள் வீரை மாலைப்
போதவளம் பொலியும்நெல்லை பதித்தவமே
போன்ற்திருப் புகழோன் பாடல்
ஏதமற்ற தெனத்துதிப்பார் எவரேனுங்
கருதியபேறு எய்து வாரே.

முற்றிற்று.