Saturday 12 May 2018

வீ.கே.புதூரில் இந்து அறநிலைய துறை இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா?


நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கு கிழக்கே சிற்றாற்றின் கரையில் உள்ள வீரகேரளம் புதூர் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 வருவாய் ஊராட்சிகளையும், ஒரு பேரூராட்சியையும் தன்னகத்தே கொண்டது. வீ.கே.புதூரில் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். விவசாயம், பீடி சுற்றுதல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தென்காசியோடு இணைந்திருந்த வீ.கே.புதூர் 1998ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டது. மேலும் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த தாலுகா அலுவலகத்துக்கு 2009ம் ஆண்டில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இப்போது வடக்கு, தெற்கு என இரண்டு பஸ் நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன. இவ்வாறு 1998ல் தனி தாலுகாவாக உருவான வீ.கே.புதூர், மாவட்டத்திலேயே பஸ் நிலையம் இல்லாத நிலையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இங்குள்ள இரு பஸ் நிறுத்த பகுதிகளிலும் நிழற்குடையோ, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு வசதியும் செய்துதரப்படவில்லை. எனவே, வீ.கே.புதூரில் பஸ் நிலையம் அமைத்தால் அனைத்து பஸ்கள் நின்று செல்லும். வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தை சுற்றி காலியாக இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமாக உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் மற்றும் மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.