Saturday 14 December 2013

நெல்லை, வீ.கே.புதூர்-தென்காசிக்கு நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2013,01:59 IST

வீரகேரளம்புதூர்: நெல்லையிலிருந்து வீரகேரளம்புதூர், சுரண்டை, ஆய்க்குடி வழியாக தென்காசிக்கு இயக்கப்பட்ட அதிகாலை நேர பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழக தாமிரபரணி பணிமனையிலிருந்து வீரகேரளம்புதூர், சுரண்டை வழியாக தென்காசிக்கு எஸ்.எப்.எஸ்., பஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. வீரகேரளம்புதூர் வழியாக இயக்கப்பட்ட முதல் எஸ்.எப்.எஸ்., என்ற பெயரைப் பெற்று பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றிருந்த இந்த பஸ் அதிகாலை 5.10 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு வந்தது.இதனால் கோவையில் இருந்தும், சென்னையிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் வீரகேரளம்புதூர் தாலுகாவைச் சேர்ந்த பயணிகள் பெரும் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு வார காலமாக இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அதிகாலை நேர பஸ் இல்லாமல் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கு அடுத்ததாக இயக்கப்படும் பஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை எனில் சுமார் ஒன்னரை மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென வீரகேரளம்புதூர் தாலுகா பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Saturday 7 December 2013

போகர்

அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது.

போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.
அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே
இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர்.

மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.
அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை.

இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார். மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை. நான் சாகப்போகிறேன் எனச் சொல்லி தரையில் புரண்டு அழுதார்.மற்ற சித்தர்கள் அவரைத் தேற்றினர்.போகா, நீ எடுத்த முடிவு சரியல்ல. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக, உயிரை விட்டால், உலகில் யாருமே மிஞ்சமாட்டார்கள். நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வகுத்த நியதி.

இறைநியதியை மீறுவது நல்லதல்ல. மேலும், நீ அவரது கோபத்திற்கு ஆளாவாய். உன் தற் கொலை எண்ணத்தை மாற்றிக் கொள். நீ காயகல்பம் உள்ளிட்ட மருத்துவ முறைகளைக் கற்றவன். அதைக் கொண்டு, மக்களுக்கு தீர்க்காயுள் தர முயற்சிக்கலாமே தவிர, நிரந்தர வாழ்வு தரும் எண்ணத்தை விட்டு விடு. நடக்காததைப் பற்றி சிந்திக்காதவனே ஞானி, என்று அறிவுரை கூறினர்.போகர் அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி மேருமலைக்குச் சென்றார். அங்கே காலங்கிசித்தரின் சமாதி இருந்தது. அதை வணங்கியபோது, அவர் முன்னால் பல சித்தர்கள் தோன்றினர்.

போகரே! நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? என்றனர்.


உலகத்தில் பிறந்த எவரும் இறக்காத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்பதை போகர் அவர்களிடம் பணிவுடனும், கருணை பொங்கவும் கேட்டார். அந்த சித்தர்கள் போகரிடம், மகனே! இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம்! போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான்.

போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே! இது இங்கே வீணாகக் கிடக்கிறதே. உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே! இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே! என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா! எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே! அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.

ஐயையோ! இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே! இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில், அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே! இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது! கொண்ட கடமையையே மறக்கச் செய்து விடுகிறதே, என வருந்திய போகரை நோக்கி ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது. அது அவரது கண்களை கூசச் செய்தது.
போகர் தன் கைகளை மடக்கி, கண்களை மறைத்தபடியே, ஒளி வந்த திசையை நோக்கினார். ஆள் அளவு உயரமுள்ள ஒரு புற்றில் இருந்து அந்த ஒளி பாய்ந்து வந்தது. அந்த புற்றை நோக்கி நடந்தார் போகர். புற்றுக்குள்ளிருந்து மூச்சு வந்தது. இது பாம்புகளின் மூச்சு போல இல்லையே! யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும் முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவரது தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார்.


அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே! என ஆரம்பித்ததும், சுவாமி! என் பெயர் தங்களுக்கு எப்படி தெரியும்? என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே! தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே! தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள்? என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது? என சித்தர் கேட்கவே, சித்தரே! இது கலியுகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது, என்றதும், ஆஹா...காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.


நான் துவாபராயுகத்தின் துவக்கத்தில் இருந்து இங்கே தவமிருக்கிறேன். ஒரு யுகமே முடிந்து விட்டதா? என்ற சித்தர், போகனே! உன் குறிக்கோளையும் நான் அறிவேன். முதலில், அதோ தெரிகிறதே! அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா! இந்த பதுமை உன் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும், என சொல்லிவிட்டு, மீண்டும் புற்றுக்குள் போய் விட்டார்.

போகர் அந்த பதுமையிடம், இறப்புக்குப் பின் உயிர் வாழும் வித்தை பற்றி கேட்டார். அந்தப் பொம்மையோ, பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள விஷயங் களை பேசியதே அன்றி, அந்த வித்தையும், அதற்குரிய மூலிகைகளும் தனக்குத் தெரிந்தாலும், உலக நியதிப்படி அதைச் சொல்லித் தர முடியாது எனச் சொல்லி மறைந்து விட்டது.எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்க மறுக்கிறதே என கலங்கிய போகசித்தர், தன் முயற்சியை விட்டாரில்லை. முயற்சி உடையவனுக்கு அவன் முயலுவது கிடைக்காமல் போனதில்லை. சித்தருக்கும் அந்த நல்ல நாள் வந்தது.அவர் ஒருமுறை, மேருமலை உச்சியில் ஏறினார். அந்த மலையில் சித்தர்கள் பலர் வசித்து, பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தங்கப் பாறைகள் நிறைந்ததாக இருந்தது. ஓரிடத்தில், தங்கத்தின் ஒளி கண்ணைப் பறிக்கவே, அதன் பிரகாசம் தாங்க முடியாமல், போகர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை சில சித்தர்கள் தாங்கிப் பிடித்தனர்.


போகனே! நாங்கள் நான்கு யுகங்களாக இங்கே வசிப்பவர்கள். உலகை வாழ வைக்க வேண்டுமென்ற உன் விடாமுயற்சியைப் பாராட்டுகிறோம். வா எங்களுடன்!இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின.

போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும்! மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான்! எதற்கும் ஒரு அளவு வேண்டும்.

போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி குதித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்! அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா! என்ன இது! மகிழ்ச்சியின் போது தான் மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உன் நடனத்தால், கலையாத எங்கள் தவத்தைக் கலைத்து விட்டாய். பல யுகங்களாக நாங்கள் செய்த தவம் வீணாகிப் போய் விட்டது. இதற்கு கடும் தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறோம். ஒருவர் செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும்.

எங்கள் நீண்ட கால தவம் எப்படி பயனற்றுப் போனதோ, அதே போல நீ இங்கே பார்த்த சஞ்சீவினி மூலிகைகளை பயன்படுத்தி உயிர்களைக் காக்க நினைத்த உங்கள் நீண்ட நாள் முயற்சி பயனற்றுப் போவதாக! இந்த மூலிகைகளை நீ பறித்துச் சென்றாலும், நீ அதைப் பயன்படுத்தும் போது அதற்குரிய மந்திரம் உனக்கு மறந்து போகும் என சாபமிட்டனர். போகர் அலறித்துடித்தார்.
சித்தர் பெருமக்களே! செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே! வேண்டாம்.... வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார்.

அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே! அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ! என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே! இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும்? இறைவா! என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார். எதுவும் காரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார்?

இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும்? அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான். அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க முடியும்? மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார்.

போகரே! நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும்! இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன் வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா! வருந்தாதே! உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால் முருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே! நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும்.

நான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார். முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வருமானம் உள்ள கோயிலாகவும் இது விளங்குகிறது. போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார். கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே! சீனாவில் இருந்து திரும்பி, பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

Sunday 1 December 2013

வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா துவக்கம்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பாளை. மறைமாவட்டத்தில் பிரசித்திபெற்ற வீரகேரளம்புதூர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குத்தந்தை வர்க்கீஸ் திருப்பலி நிறைவேற்றி, கொடியேற்றினார். அருட்தந்தைகள் மைக்கேல் ராஜ், வியாகப்பராஜ் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊர்த்தலைவர் சேசுராஜன் தலைமையில் இறைமக்கள் பங்குத்தந்தைக்கு முதல் மரியாதை அளித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து தினமும் மாலையில் திருப்பலி, மறையுரை வழங்கப்படுகிறது.இன்று (28ம் தேதி) புதுவாழ்வு தியாகனக்குழுவினரின் தியானமும், 30ம் தேதி இரவு ஆர்.சி.துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் வீரை இளையோர் மற்றும் அன்பியங்கள் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.வரும் டிசம்பர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. 2ம் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ தேர்ப்பவனி நடக்கிறது. 3ம் தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலியும், புதுநன்மை விழாவும் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை தலைவர் சேசுராஜன் தலைமையில் செயலாளர் மரியசுந்தரம், பொருளாளர் அருளானந்தம், உறுப்பினர்கள் சேசு, ஆரோக்கியராஜ், மிக்கேல், ஞானசாமி, ராயப்பன் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Sunday 3 November 2013

10. சந்திரசேகர மூர்த்தி

நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு திருமணம் செய்வித்தார். சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி, அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி வைத்தார். சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகனும் மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே அவரை சரணடையிமாறு சொன்னார். அதன்படி சந்திரன் சிவபெருமானிடம் சரணடைய சிவனும் சந்திரனின் ஒரு கலையை எடுத்து தன் சடையில் வைத்து இனி உன் ஒருக்கலைக்கு அழிவில்லை ஆனாலும் தட்சனின் சாபத்தால் தினமொரு கலையாக அழிந்தும், என்னிடம் உள்ளதால் தினமொரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என அருளாசி கூறினார். சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சந்திர சேகரன் ஆனார். அவரது தலம் திருவாரூர்(புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது. இங்கு
கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் கோணபிரான் மற்றும் அக்னிபுரீஸ்வரர். இறைவி கருந்தாழ்குழலி யாகும். நல்லவனவற்றை மட்டுமேக் கொடுக்க கூடியவர் இங்குள்ள சந்திர சேகர மூர்த்தி. இவரை வழிபட பித்தளையும் வைரமாகும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், நெய்யன்ன நைவேத்தியமும் சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கொடுக்க அறிவு வளர்ச்சி மிகுவதோடு நினைவாற்றல் பெருகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ந்த சந்தனத்தால் அபிசேகம் செய்தால் நற்புகழ் அடையலாம்.

9. சோமாஸ் கந்த மூர்த்தி

சூரபத்மனின் கொடுமைகள் எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் அனைவரும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். வல்லமைபெற்ற தங்கள் மகனால் அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள் விரும்பினர். சிவபெருமானும் அவர்களுக்காக மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள் அகிலமெல்லாம் பரவின. உடன் பார்வதி தேவியார் அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று மோதி சிதறும் படி அந்தப்புரம் நடந்தார். இதனால் தேவர்கள் சித்தம் கலங்கி, மனம் வருந்தினர். மகனைக் கேட்டால் இவர் நெருப்பு பொறிகளை கொடுக்கின்றாரென கலங்கினர். உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கொடுத்து கங்கையில் விடச் சொன்னார். கங்கையோ அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது.
ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும் பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் முன் செல்ல தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு ஆறு குழந்தைகளை பார்வதி ஒன்றாக தூக்குகையில் அவை ஒரேக் குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்கள் கொண்டதாகவும் விளங்கியது. ஆறு முகங்களைக் கொண்டதால் ஆறுமுகன் என்றும், கந்தன் என்றும் அழைத்தனர். பின்னர் மூவரும் வெள்ளிமலையை அடைந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி என்கிறோம்.
சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் செல்ல வேண்டும். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே சுரக்கும் அமுத தீர்த்தத்தினால் சோமாஸ் கந்தரை அபிசேகம் செய்ய உடல் வலிமை, அறிவு விரத்தி, தந்தைக்கே உபதேசிக்கும் அளவு புத்தி வலுவடையும். மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில் வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும். எனவே எழுத்தாளர்கள் தொழ வேண்டியவர் இவர்.

8.உமேச மூர்த்தி

முன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை மேற்க்கொள்ளாமல் தவச்சாலையை நோக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் நான்முகன் விஷ்ணுவை கானச்சென்றார். அவர்தம் குறைகளைச் சொன்னார். இக் குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே, எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர்.

அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்களனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அப்பொழுது தனிமையில் இருந்த சிவபெருமான் தன் தோளைப்பார்க்க அவரது சக்தியே உமாதேவியாக வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன் உமாதேவியை தன் இடபுறமாக இருக்க செய்தார். பின்னர் எரிந்து சாம்பலானவர்களை முன் போலவே படைத்தார். அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார். உலகமே செழித்தது. உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து, காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை உமையவளாக இடது பாகத்தில் வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே சிவபெருமானது பெயர்களில் உமேச மூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது.
பொதுவாக சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே உமேசமூர்த்தி யானது என்றும் சொல்லலாம். இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டியத் தலம் திருஇடைமருதூர் ஆகும். கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக அமைய அருள்புரிவார்.

7. சுகாசன மூர்த்தி

வெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் ஜோதி மயமான சிவபெருமான் நடுவே நாயகனாக வீற்றிருக்க, அவரைச் சுற்றிலும் மும்மூர்த்திகளும் தேவகணங்களும், தேவலோக வாழ் அனைத்துமே அங்கே கூடியிருக்கின்றன. சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருக்கிறார். நேரம் கடந்தது. அனைவரும் தங்களது பணிக்கு, இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.
சற்றைக்கேல்லாம் உமாதேவியார் அங்கே பிரசன்னமாகி இறைவனின் தால் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின் உண்மைகளை, விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்கிறார். உடன் சிவபெருமான் சிவாகமங்களின் உண்மைகளையும் , விளக்கங்களையும், ஐவகை பந்த பாசங்களின் நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும், சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கின்றார். அச்சமயம் அவர் சுகாசன நிலையில் அமர்ந்த படி உறைக்கிறார். அருகே உமாதேவியார் நின்று கொண்டுள்ளார். சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி உறைத்த காரணத்தால் இவரை நாம் சுகாசன மூர்த்தி என்கிறோம். இவரது கரங்களில் மான், மழு உள்ளது. தேவியார் அருகே இல்லை.

இத்தகைய சுகாசன மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சீர்காழியாகும். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் பிரம்மபூரிஸ்வரர், சட்டைநாதர், தோணியப்பர் என்று மூன்று திருநாமங்களை உடையவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி யாகும். இங்கு அருள்பாலிக்கும் சுகாசன மூர்த்தியை மனமுருக வேண்டி அர்ச்சிக்க வியாழன் சார்ந்த அனைத்து குறைகளும் தீரும். மேலும் தொழில் துறை நிர்வாகம் நல்ல முறையில் நடைபெற இவர் நமக்கு அருள்புரிவார். வில்வ அர்ச்சனையும், கற்கண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் செய்தோமானால் நிர்வாகம் செழிப்பாகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு உகந்த அபிசேகம் பலாப்பழத்தால் செய்யப்படுகிறது. இதனால் யோக சித்திகள் கைகூடும் என்பது ஐதீகம்.

சுகாசன மூர்த்தியார் தோணியப்பர் கோயில்
சகதொழிலும் ஓங்கும் அருளும்-சிகரமாய்
திருஞான சம்பந்தர் சீழ்காழி மண்ணின்
பெரும்ஞானம் பெற்ற இடம்!

சிவபெருமான் ஆறு திருக்கரங்களோடு பார்வதி தேவியைத் தன் இடப் பக்கத்தில் இருத்திக் காட்சி தரும் கோலம்- சகஜ சுகாசனம். சீர்காழியில் உள்ள பிரம்ம பூரிஸ்வரர் ஆலயத்தில் சுகாசன மூர்த்தியை தரிசிக்கலாம்.

இவரை வழிபட்டால் குருகிரக பிரச்சினைகள் தீரும். சோமவாரத்தில் கல்கண்டு அபிஷேகம் செய்தால் நிர்வாகம் சிறக்கும். பலாப்பழ அபிஷேகம் செய்தால் யோக சித்திகள் கை கூடும்.


Read more: http://www.penmai.com/forums/temples-gods-goddess/51202-64-forms-lord-shiva-64-a.html#ixzz2jaxeouQJ

6. உமா மகேச மூர்த்தி

திருக்கைலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர் ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார். முறையே
1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
2. ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
3. இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
4. ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
5. கிரியாசக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இதில் பராசக்தி பக்குவமடைந்த ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி திருஷ்டித் தொழில் செய்து நம்மை சிருஷ்டிப்பவர். கிரியாசக்தி உலகப் படைப்பை செய்பவர். மேற்க்கண்ட இந்த ஐந்து சக்திகளும் ஒன்றினைந்து ஒரு செயல் செய்யும் போது ஒன்றாகி சதாசிவமூர்த்தியாகி விடுகின்றது. எனவே சிவன் - சக்தி பிரிக்க முடியாத ஒன்று. இத்தகைய சிறப்பு வாய்ந்த உமா மகேஸ்வர மூர்த்தியை நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள கோனேரி ராஜபுரம் தான் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே உமாமகேஸ்வரர் ஆவார். இறைவி பெயர் தேகசௌந்தரி என்பதாகும். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவி, இறைவனுக்கு இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய கடுமையான குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின் மற்றொரு திருநாமம் பூமிநாதர் என்பதாகும். பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும் இந்த பூமிநாதரை வணங்கி இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் தொழில் சிறப்படையும். புதன் தோறும் சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது. இருந்தாலும் விலகும்.இங்குள்ள மண்ணால் வினாயகர் செய்து நம் வீட்டில் வைத்து வழிபட எந்தவொரு காரியத்தடையும் அகலும்.


Read more: http://www.penmai.com/forums/temples-gods-goddess/51202-64-forms-lord-shiva-64-a.html#ixzz2javeizMm

5. மகா சதாசிவ மூர்த்தி

இவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம். அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர். மேலும் இவரைச் சூழ்ந்தவாறு ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர். இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன. மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும். மேலும் இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது. அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இவரை கோயிலுள் காண முடியாது. சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும். மேலும் பல கோயில் விமானங்களில் தான் தரிசிக்க முடியும்.
இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம் ஆரோக்கியம் பெறும் என்றும் கூறப்படுகிறது.


4. சதாசிவ மூர்த்தி

சடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் கைகளைக் கொண்டவர். இவறுடைய வலக்கையில் சூலமும், மழுவும், கட்வங்கமும், வாளும், பீஜா பூரகமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டு காட்சியளிக்கும். இடக்கையில் நாகம், பாசம், நீலோற்பலம், அங்குசம், டமருகம், வரதம், மணிமாலை, பரிவட்டம் எனக்காணப்படும். இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர். மேலும் தியான பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர். இவரது இடைப்பாகத்தில் சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரமனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அடங்கியுள்ளனர். இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம். இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரணகர்த்தாவாவார். இந்த மூர்த்தி ஈசானம், தத்புருடம், வாமம், அகோரம், சத்யோஜாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருப்பவர். முனிவர் கௌசிகரின் பொருட்டு இவரது சத்யோகஜாத முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களை அருளினார்.

காசிபமுனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்ற ஆதமங்களை அருளினார். பரத்வாஜருக்காக அகோரமுகத்திலிருந்து விசயம், நீச்சுவாசம், சுவயம்புவம், ஆக்நேயம், வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார். கௌதம முனிவரின் பொருட்டு தத் புருட முகத்தினின்று ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார். முடிவில் அகத்தியருக்காக ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனும் எட்டு ஆகமங்களையும் அருளினார். இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சிதம்பரமாகும். இங்குள்ள கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன. இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார். இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தால் அபிசேகம் செய்து வில்வ இலை அர்ச்சிக்க அனைத்து மூர்த்திகளையும் வணங்கிய, அர்ச்சித்த பலன் கிடைக்கும். மேலும் சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நைவேத்தியம் செய்ய மறுபிறவியில்லை எனும் நிலையை அடையலாம். இங்குள்ள சிவபெருமானை திருநீரால் அபிசேகம் செய்ய சகல நன்மையும் உண்டாகும்

3. முகலிங்க மூர்த்தி

சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆடயம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முக வேதங்களைப் பெறும். ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் என ஐந்தும் அடங்கும். முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போல பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று விளக்குகிறது. பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக உள்ளவன் இறைவன் அவனையே நாம் முகலிங்கத்தின் மூலமாக தரிசிக்க முடியும்.
முகலிங்க மூர்த்தியை தரிசிக்க நமக்கு மூன்று இடங்கள் அமைந்துள்ளது.
1. திருவக்கரை
2. கச்சபேஸ்வரர்
3. கொட்டையூர்
இதில் திருவக்கரையில் அமைந்துள்ள சங்கரமௌலீஸ்வரர் கோயிலில் முகலிங்கமூர்த்தி சிறப்பு பெற்றது. எப்படியெனில் சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சிக்கொடுக்கிறார். இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால் அர்ச்சிக்க விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர், இல்லையெனில் சிவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களை கண்டிப்பாள். என்று நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி. மேலும் காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் முகலிங்கம் உள்ளது. மற்றொன்று கும்பகோணம் அருகே அமைந்துள்ள கொட்டையூரில் உள்ளது. இங்குள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த சக்தி வாய்ந்தவர். அவரை சக்கரையால் அபிஷேகம் செய்தால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.


2. இலிங்கோற்பவ மூர்த்தி

நான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க சென்றார். உடன் தேவலோகத்தினரும் மகலோகம் சென்றனர். அப்பொழுது பெரும் கடற்பெருக்குத் தோன்றி உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. அதனால் உலகம் மறைந்து விட்டது. திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன் உறங்கினார். இதனை கண்ணுற்ற அனைவரும் குழந்தையை ஆராதித்தனர். ஆராதனையைக்கேட்டு எழுந்த திருமால் பழைய உலகைத் தேடினார். அது பாதாளத்தில் இருப்பதைக் கண்டார். உடன் வராக அவதாரம் எடுத்து தனது கொம்பினால் குத்திக்கொண்டு வந்து முறைப்படி நிறுத்தினார். பின் பாற்கடலில் நித்திரையில் ஆழ்ந்தார். இதனிடையே நான்முகனுக்கு இரவு நீங்கி பகல் ஆரம்பமானது. அனைத்து தேவ மாந்தர்களையும் ஈரேழுலகங்களையும் திரட்டி இந்திரனையும் சபை நிறுத்தி அரசாள செய்தார். இடையில் ஏற்பட்ட சம்பவம் தெரியாததால் , இந்த உலக இயக்கம் தன்னாலே எனக் கர்வம் கொண்டார். தானே முழுமுதற்கடவுள் என்ற எண்ணத்துடன் உலகை வலம் வரும் போது பாற்கடலில் யோக நித்திரையில் திருமால் இருப்பதைக் கண்டு அவரிடம் சென்று நீ யார்? என வினவினார். அவரோ நான் உனது தந்தை என்றார், இதனால் பெரும் வாக்குவாதம் இருவருக்கும் ஏற்பட்டது. அது யார் பெரியவர் என்றளவில் பெரும் போரானது. இப் போரினால் உலக உயிர்கள் அனைத்தும் வாடின. உடன் நாரதர் தோன்றி நீங்களிருவருமே பெரியவர் கிடையாது. சிவபெருமானே அனைவருக்கும் பெரியவர் என்றுரைத்தார். மேலும் இனியும் போர் தொடர்ந்தால் ஜோதிரூபமாக சிவபெருமான் தோன்றுவார் என்று கூறி மறைந்தார். இருப்பினும் விடாமல் போர் தொடர்ந்தது. சிறிது நேரத்திற்குப் பின் பெரும் ஜோதி தோன்றியது, அதிலிருந்து அசரீரீ கேட்டது. உங்கள் இருவரில் எவர் எனது அடியையும், முடியையும் கண்டு வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று அசரீரீ கூறியது. உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட, திருமால் வராகமாக மாறி அடியைத் தேட இரண்டுமேக் கிடைக்கவில்லை. இருவரும் சிவனே சரணம் என்று சிவனை அடைந்தனர். மனம் வருந்தினர். உடன் இருவரும் ஒன்றாக அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். உடனே சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும், நான்முகன் என் வலதுபுறத்திலும், திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எவனே எனக்கு இருவரும் ஒன்றே என்றுக்கூறி மறைந்தார். வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும். அவர்கள் இருவரும் வணங்கிய சிவலிங்கமே லிங்கோர்பவர் ஆகும்.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால் நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்து விடும். இனி குற்றம் செய்யும் எண்ணம் வராது. நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்க வல்லவர். இங்கு பௌர்ணமி கிரிவலம் மிக விசேஷமானது. மேலும் இவரை வணங்க சூரியகிரகணத்தால் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளும் விலகும். மேலும் வென்னிற நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும் பௌர்ணமி அன்று கொடுக்க சித்தம் தெளிவடையும் . மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ச்சியான நல்லெண்ணையில் அபிசேகம் செய்தால் வெப்பநோய்கள் நீங்கும்

1.லிங்கமூர்த்தி

லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இது தான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.
மேற் சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும்.

இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர் -இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.

அறுபத்து நான்கு சிவ ரூபங்கள் .....

சிவபெருமான் சைவர்களின் தலைவராக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். இவர் மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வன் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள்.

சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் `சத்தர்' என்றும், அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் `பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது.

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை'' (பூரணத்துவம்), "மங்களமானது'' என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம். சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை:- காலையில் தரிசிக்க நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது. சிவனின் ஐந்து முகங்கள் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம். இம்முகத்தின் மூலம் ஆகம ரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள். இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம்.

மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன. சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதைவிட லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரதத்தில் கூறி இருக்கிறார்.

`லிங்கம்' என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் `மங்கலத்தைத் தரும் பரம்பொருள்' எனவும், `அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது' என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன. ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம், இல்லங்களில் வைத்துப் பூஜிக்கும் லிங்கம் சலம்.

ஈசன் கருணைப் பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம். சிவ வடிவங்கள் மொத்தம் 64 ஆகும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என மூன்று வகைக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. போக வடிவம் என்பது உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர் முதலானவற்றை குறிக்கும்.

யோக வடிவம் என்பது தட்சிணாமூர்த்தி சுகாசனர் முதலானவற்றை குறிக்கும். வேக வடிவம் என்பது கங்காளர், வீரபத்திரர் முதலானவற்றை குறிக்கும். இவை முறையே உயிர்களுக்கு போகத்தை அருளுவதற்கும், யோகத்தை அருள்வதற்கும், வினைகளை நீக்கி அருள்வதற்கும் ஏற்பட்டவை.

இனி இந்த அறுபத்து நான்கு சிவ ரூபங்களை சற்று விரிவாக காண்போம்

Wednesday 30 October 2013

தஞ்சைக் கோயிலைப் பற்றியும் பொதுவாகவே கோயில் விமானங்கள் பற்றியும் குடவாயில் ஆய்வு

பெரிய கோயிலைப் பற்றி டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற ஆய்வறிஞர்களிடம் பேசப் பேச நமக்கெழும் முதல் நினைவு அது ஒரு மாபெரும் கலைக் களஞ்சியம் (Encyclopiedia) என்பதே.

கவிஞர் மு மேத்தா இவ்வாறு எழுதுவார் -

"இதனை குளமென்று எண்ணி குளிக்கப் புறப்படுங்கள் -
கால் வைத்தவுடன் இது கடலாக மாறுவதை கண்டு கொள்ளலாம்"

பெரியகோயிலும் அப்படிப் பட்டதொரு கடல்தான்.

ஒரு காலகட்டத்தின் ஒட்டுமொத்த பொறியியல் அறிவு, கலாச்சார அறிவு, சமய அறிவு முதலியவற்றை தாங்கி காலகாலத்தைக் கடந்து நிற்கும் காவியமாகத்தான் நாம் பெரிய கோயிலை அணுக வேண்டும். நாமும் சரி நம்முடன் வந்த நண்பர்களும் சரி - பெரிய கோயிலை பலமுறை பார்த்தவர்கள்தான். என்றாலும் அது தன்னுள் மறைபொருளாக அடக்கி வைத்திருக்கும் விஷயங்களை அறிஞர்கள் சிறிதளவு வெளிச்சம்போட்டுக் காட்டியதுமே - குவிந்து கிடக்கும் பொக்கிஷங்களின் அளவைக் கண்டு பிரமித்துப் போகிறோம் !

"The true knowledge is knowing the extent of your ignorance" என்பதுபோல் அதனைப் பற்றி விஷயங்களை அறிந்துகொள்ள அறிந்துகொள்ள அறிந்ததன் அளவைவிட அறியாததன் அளவு பிரமிப்பூட்டுகிறது. கடல் வரை வந்தாலும் கையளவு நீர்தான் அள்ளிச் செல்ல முடியும் - ஆக குடவாயில் அவர்கள் அன்று பகிர்ந்துகொண்ட செய்திகளில் எங்கள் சிற்றறிவில் தங்கியதை மட்டும் முடிந்தவரை பகிர்ந்து கொள்கிறோம்.

29 சைவ ஆகமங்களில் சிவபெருமான் திருக்கோயில்களுக்கான அமைப்பு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் பெரிய கோயில் மகுடாகமம் என்ற ஆகம வகையை சார்ந்து அமைக்கப்பட்ட கோயிலாகும். ஆகமங்களில் மகுடாகமம் திருமூலர் காலத்திலேயே பிரபலமாக இருந்ததென்பது திருமந்திரப் பாடலால் தெரிகிறது.

மகுடாமத்தின் சிறப்பு என்னவெனில் மூலமூர்த்தத்தை முதலில் பிரதிஷ்டை செய்துவிட்டு பிறகுதான் அதனைச்சுற்றி கோயிலே எழுப்பப்படும். ஆக வழிபாடுகள் முதல் நாளிலிருந்தே உண்டு. இதனால்தான் அத்தனை பெரிய இராஜராஜேசுவரமுடையார் எனும் லிங்கத்தை குறுக்களவில் சிறிய நுழைவாயிலைக்கொண்ட கருவரைக்குள் இருத்த முடிந்தது. இதே காரணத்தினால்தான் கோயில் முழுமையாய் பூர்த்தி பெறாத நிலையிலேயே கும்பாபிஷேகம் செய்வதும் சாத்தியமாயிற்று என்றார். (டாக்டர் கலைக்கோவன் 52 இடங்களில் கோயில் நிறைவடையவில்லை என்று தெரிவித்ததை நினைவு கூர்கிறோம்). இந்த மகுடாகமத்தை பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நமது To Do லிஸ்டில் எழுதிவைத்துக் கொண்டோம்.

அக்காலத்தில் ஒரு திருக்கோயிலைக் கட்டுவதற்கு முன்னும் அது கட்டப்படும் போதும் கடைபிடிக்கப்பட்ட சமய நெறிமுறைகளை ஏறக்குறைய திரைப்படம் காட்டுவதுபோல் மிக pictorial ஆக விளக்கினார் குடவாயில். திசை, வாஸ்து என்று எல்லாம் பார்த்து திருக்கோயில் எழும்ப வேணடிய இடத்தை தெரிவு செய்தல், தேர்ந்தெடுத்த இடத்தை மயிர் முதலான அசுத்தங்கள் இல்லாமல் சுத்தமாக சலித்தல், யானைகளை கொண்டு நடக்கச் செய்து மண்ணை கெட்டிப் படுத்துதல், கோயில் உருப்பெரும் காலத்தில் பசுக்களை பல காலத்திற்கு கட்டிவைத்து அந்தப் பசுக்களின் கோமியம் மற்றும் சாணம் திருக்கோயில் கட்டப்படும் இடத்தின் பல பகுதிகளிலும் விழுமாறு செய்து அந்த இடத்தைப் பவித்திரமாக்கி தோஷங்களை நீக்குதல் என்று ஒரு கோயிலைக் கட்டத் துவங்குவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன.

இதில் பெரிய கோயில் போன்ற மெகா ப்ராஜக்டுகளில் இந்த நெறிமுறைகளெல்லாம் எத்தனை கவனத்துடன் நடந்தேறியிருக்கும் என்று சொல்லத் தேவையேயில்லை.

இந்த நெறிமுறைகளில் நம்மைக் கவர்ந்த அம்சம் ஒன்று இருந்தது.

அதாவது கோயில் கட்டப்போகும் முழு இடத்தையும் குறிப்பிட்ட அளவுடைய கட்டங்களாகப் பிரித்து (மொத்தம் 21 கட்டங்கள் என்று நினைவு) அதில் ஒவ்வொரு கட்டத்தையும் காப்பதற்கு ஒரு தேவதையை வழிபட்டு வேண்டுவார்களாம். இதற்கு பதவிந்யாசம் என்று பெயர். இந்த தேவதைகளில் அஷ்டதிக் பாலகர்கள் (எண்திசைக் காவலர்) முக்கியமானவர்கள். ஆக பெரிய கோயிலின் ஒவ்வொரு குறிப்பிட்ட கட்டத்தையும் ஒரு தேவதை ஆட்சி செய்து காத்து வருகிறது.

இதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே - அட, அத்தனை பெரிய வளாகத்தை கட்டம் கட்டமாய் கோடுகட்டிப் பிரித்து பூஜை செய்து முடிப்பதற்கு மிகுந்த சிரமமாயிருந்திருக்குமே என்றோம்.

அது அப்படி இல்லையாம் !

வளாகத்தின் அருகில் தரையில் நெல்லைப் பரப்பி அதில்தான் கட்டங்களைப் போடுவார்களாம் ! அதாவது மொத்த கோயில் வளாகத்தையும் இப்போது அந்த நெல் பரப்பில் நினைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்தப் பரப்பிலேயே உரிய கட்டங்களைப் போட்டு பூஜையெல்லாம் அதற்கு அருகிலேயே முடித்து விடுவார்களாம் ! அதாவது அந்தப் பூஜையை பொறுத்தவதை நெற்பரப்பே அந்தக் கோயில் வளாகம் என்றாகிறது. எத்தனை எளிமையான / அர்த்தம் மிக்க முறை என்று வியந்தோம். இந்துமதச் சடங்குகளில் இந்தத் தத்துவம் முக்கியமானது. அதாவது ஒன்றை மற்றொன்றாய் நினைத்து அதன்படியே நடந்து வழிபாடு செய்தல். உருவம் முக்கியமில்லை, நமது நினைப்புத்தான் முக்கியம் என்கிற விஷயம் அது. "நினைத்தலும் செயலும் ஒக்கும்" என்பது வள்ளுவர் வாக்கு. சடங்குகளின்போது பிடிக்கப்படும் மஞ்சள் பிள்ளையாரும் சரி, கருவறையில் இறைவடிவமாய் வீற்றிருக்கும் கற்சிற்பமும் சரி - இந்தத் தத்துவத்திற்குள் அடங்குபவையே. வடமொழியில் இதற்கு ஆவாகனம் என்று பெயர்.

இந்த எண்திசைக் காவலர்களின் சன்னிதிகள் பெரிய கோயில் வளாகத்தில் மூலைக்கொன்றாக அமைக்கப்பட்டிருந்தனவாம். காலப் போக்கில்அனைத்தும் அழிந்தொழிய இன்றைக்கு மிஞ்சுவது அக்கினி தேவன் சிலை, மூர்த்தம் இல்லாத இந்திரன் சன்னிதி என்று ஒரு சில மட்டுமே.




எண்திசைக் காவலர் சன்னிதிகளின் அமைப்பு


இந்த எண்திசைக் காவலர் அமைப்பு கோயில்களுக்கு மட்டுமல்ல - யாகங்களுக்கும் பொருந்தும். யாகத்தீ மூட்டப்படும் முன் எண்திசைக் காவலர்களையும் படத்தில் காண்பித்துள்ள திசைகளிலேயே எழுந்தருளுவிப்பது மரபாம்.

அடுத்து இராஜராஜேச்சுர விமானம் பற்றிய பேச்சு ஆரம்பித்தது.

விமானத்தின் உள்கூடு அமைப்பே பரசிவம் என்கிற எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருளை ஒரு கட்டுக்குள் அடக்கி வழிபடும் விதமாகும் என்கிற தனது முக்கியமான கருத்தை வலியுறுத்திச் சொன்னார். இதே கருத்து அவரது இரு புத்தகங்களிலும் ("தஞ்சாவூர்" மற்றும் "தஞ்சை இராஜராஜேஸ்வரம்") மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இதனைப் புரிந்துகொள்ள குடவாயிலின் புத்தகத்திலிருந்தே சில படங்களை பயன்படுத்திக் கொள்கிறோம்.




விமான உள்கூடு / சிவ லிங்க வடிவம் - பரசிவம்


அதாவது முதலில் தூலவடிவமான பெருவுடையாரிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த லிங்க வடிவில் படத்தில் காட்டியிருப்பதுபோல் பல்வேறு ரூபங்களும் அடங்கும். பிரம்மா, விஷ்ணு, பரசிவம், பரபிந்து, பரநாதம்...என்று ஒவ்வொன்றாக வழிபட்டுக்கொண்டு வரும்போது ஒரு கட்டத்தில் லிங்கத்தின் வடிவம் முடிந்து அதற்கு மேலெழும்பும் ஆகாசமே பரசிவமாக விரியும். அதாவது இந்த உலகை படைத்து காத்து அழித்து மீண்டும் படைக்க வைக்கும் கண்ணுக்குப் புலனாகாத அந்த ஒப்பற்ற ஆற்றலே சிவம் ! கண்ணுக்குத் தெரியும் தூலப்பொருளாக அந்தச் சிவத்தை வழிபடத்துவங்கி மனம் அமைதியுற்றதும் உருவமற்ற பரம்பொருளை வணங்க வேண்டும்.

இந்த பரசிவமும் பெரிய கோயிலைப் பொருந்த அளவில் கிட்டத்தட்ட லிங்க வடிவத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயம் ! சிதம்பரம் கோயிலில் எந்த பரவெளி இரகசியமாக காட்டப்படுகிறதோ அதே பரவெளி இங்கு பெருவுடையார் லிங்கத்தின்மேல் பரசிவமாக விரிகிறது - முப்பரிமாணத்தில் !

இராஜராஜர் காலத்தில் லிங்கவடிவத்துக்கு மேல் நேராக விமானம் மேலெழும்படிதான் அமைப்பிருந்தது. சமீப காலத்தில் (அதாவது கிட்டத்தட்ட சரபோஜி ராஜா காலத்தில்) பெருவுடையாருக்குமேல் ஒரு மரப்பலகையை போட்டு இந்த லிங்கம் - பரசிவமாக விரியும் அற்புதக் கோலத்தை தடுத்தாட்கொண்டு விட்டார்கள் சில புண்ணியவான்கள் ! உண்மையில் பெருவுடையாருக்கும் விமானத்தின் கலசத்திற்கும் நடுவில் எந்த தடுப்பும் இல்லை ! மேலே அமைக்கப்பட்டுள்ள தளங்களும் கவனமாக இந்த விஷயத்தை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

தன் கருத்துக்கு வலிவூட்ட வேறொரு விஷயத்தையும் சொன்னார் குடவாயில். அதாவது தனது போர் வெற்றக்குப் பிறகு பொற் பூக்களை பெருவுடையாருக்கு அர்பணித்த இராஜராஜர் எட்டு பூக்களை பெருவுடையாருக்கு செலுத்திவிட்டு ஒன்பதாம் மலரை பரசிவத்திற்கு அர்பணிப்பாராம் ! இந்த ஒப்பற்ற ஆற்றலை ஒரு குறியீடு மூலமும் உணர்த்த நினைத்தார்கள் நமது முன்னோர்கள். அந்த குறியூட்டு வடிவம்தான் நடராஜ தாண்டவம். இந்த ஆனந்த தாண்டவ தத்துவத்தை மிக மிக அழகாக வேறொரு சமயத்தில் விளக்கினார் குடவாயில்.

கோயிலின் உள்கூடைப் போன்று வெளி விமான அமைப்பும் கவனிக்கப்பட வேண்டியதே.

விமானத்தின் ஒரு தளம் விட்டு ஒரு தளம் பற்பல சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறன்றன. இவை அனைத்துமே சிவபெருமானின் பல்வேறு வடிவங்களாகும். மேல் தளத்தில் ருத்ரேச்வரர், மூர்த்தேச்வரர், இராஜராஜேஸ்வரர் முதலான மூர்த்தங்கள் வடிக்கப்பட்டிருக்க கருவறையின் நாற்புற வாயில்களையும் சிவபெருமானின் தசாயுத பேரர் காவல் காக்கின்றனர்.

மழை நீர் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குச் செல்லும் வழியில் கும்ப பஞ்சரங்கள் அமைக்கப்பட்டு அவை மழை பெய்யும்போது கையிலயங்கிரியின் துரோணிகளை ஒத்துள்ளன என்கிறார் குடவாயில். சான்றாக ஞானசம்மந்தரின் பதிகம் ஒன்றையும் குறிப்பிட்டார்.

பேச்சு இந்தக் கட்டத்தில் சற்று விறுவிறுப்படைந்து விட்டது....

அதாவது அத்தனை பெரிய விமானத்தின் மூலம் மன்னர் இராஜராஜர் குறிப்பிட நினைத்தது என்ன ? அந்தக் கோயில் அமைப்பின் அடிப்படைத் தத்துவம் என்ன ? What was the fundamental concept behind rajarajeswaram ? என்று ஆவேசமாக கேட்டுவிட்டு எங்களைப் பார்த்தார்.

எங்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை - குடித்த டீ வெளியில் வந்துவிடும்போலிருந்தது ! கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக ஒருவாறு சமாளித்துக் கொண்டோம்.

ரொம்ப முக்கியமான கேள்வி. இப்படி வேலை மெனக்கெட்டு பிரம்மாண்டமான கற்றளியும் விமானமும் குறிப்பிட்ட விதத்தில் கட்டி குறிப்பிட்ட மூர்த்தங்களை எழுந்தருளுவித்து பெரிய லிங்கப் பிரதிஷ்டை செய்து..... இதற்கெல்லாம் அடிப்படையாக இராஜராஜர் சொல்ல நினைத்த ஒரு தத்துவம் - ஒரு கருத்து - ஒரு செய்தி இருந்திருக்கவேண்டும் அல்லவா ? அது என்ன ?

அந்த மாமன்னர்தான் எல்லா விதத்திலும் அதிபுத்திசாலியாயிற்றே ? இந்த அடிப்படைக்குப் பின்னால்தானே அந்த மாபெரும் கற்றளி அவரது மனதில் உதயமாகியிருக்க வேண்டும் ? What was his vision behind such a massive project ?

குடவாயில் அவர்களை பொறுத்தவரை இந்த அடிப்படைத் தத்துவமாக ஒன்றே ஒன்றுதான் மீண்டும் மீண்டும் எழுகிறது. இந்தத் தத்துவம்தான் அந்தக் கோயிலின் மூலை முடுக்குகளெல்லாம் பரந்து விரிந்துள்ளது. இதே தத்துவம்தான் அந்த மகத்தான விமானத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.

அந்தத் தத்துவம் இதுதான்.

அதாவது அந்த ஒட்டுமொத்த விமானமும் தூலக் கண்களால் காணமுடியாத - இறைவன் கொலுவீற்றிருக்கும் கையிலங்கிரியையே குறிப்பதாகும். அந்த விமானத்தின் அமைப்பு, அதற்கு பொற் தகடுகள் போர்த்தியமை* விமானத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் மகாமேரு விடங்க மூர்த்தி, உள்ளே அமைந்த பரசிவம் - எல்லாமே ஞானிகள் தமது ஞானக் கண்களால் கண்டு வர்ணித்த கையிலங்கிரியை தூலக் கண்களாலும் அனைவரும் காணவேண்டும் என்பதற்கான மன்னரின் முயற்சியே இது !

* இது குடவாயில் அவர்களின் மற்றொரு செய்தி - அதாவது மொத்த விமானமும் இராஜராஜர் காலத்தில் பொன் வேயப்பட்டிருந்ததாம் ! இதற்குச் சான்றாக துண்டுக் கல்வெட்டொன்றையும் தனது புத்தகத்தில் பதிப்பித்துள்ளார் அவர்.

தேவாரத்தில் - ஆளுடையப் பிள்ளையான சம்மந்தர் உட்பட பலரும் கயிலயங்கிரி பற்றிய விளக்கமான செய்திகளைத் தருகிறார்கள். அந்த செய்திகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு அமைக்கப்பட்டதே பெரியகோயிலான இராஜராஜேஸ்வரம் என்பது குடவாயில் அவர்களின் கருத்து.

மேற்கொண்டு பருத்தியூர் இராமர் திருடர்களிடம் பறிபோய் மீண்ட அனுபவம், உடையார்குடி அனந்தீசுவரம் கல்வெட்டு, நந்திபுரம், பஞ்சவன் மாதேவீச்சுரம், ஆடவல்லான் தத்துவம் என்று நாள் முழுவதும் தொடர்ந்த அவரது ஆய்வு மழையை நமது சிற்றறிவுக்குள் தேக்கி வாசகர்களுக்கு வழங்க மேலும் பலப்பல கட்டுரைகள் தேவைப்படும் என்பதால் இந்தக் கட்டுரையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.

பெரிய கோயில் ஒரு கலைக் களஞ்சியமெனில் அதனை குடவாயில் போன்ற அறிஞர்கள் விவரிக்கக் கேட்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சுகானுபவம்.

தஞ்சை பெரிய கோவில் எப்படி கட்டப்பட்ட்து ????



பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்ட்து பெரிய கோவில். பண்டைய தமிழர்களின் கலை திறனை இப்பொழுதும் சொல்லிக்கொண்டு ஆயிரம் ஆண்டுகலை கடந்து கம்பீரமாக நிற்கும் கோவில் இது. பரந்து விரிந்த இக்கோவிலைக் கண்டால் ஒவ்வொரு தமிழனின் மனதும் கண்டிப்பாக பரவசப்படும்.


டிஸ்கவரி சானலில் ,  கோவில் எப்படி அந்த காலத்தில் கட்டி இருந்து இருப்பார்கள் என்று டாக்குமெண்டரி அடிக்கடி காட்டுகின்றனர். அதைப் பார்த்த பிறகுதான், நமக்கும் பல கேள்விகள் எழுகின்றன
எப்படிய்யா, அவ்வளவு பெரிய கல்லை , தூக்கி மேல வைச்சாங்க..? எங்கே கிடைச்சு இருக்கும், எப்படி அங்கே இருந்து  தூக்கி வந்து இருப்பாங்க..? அதோட எடை இவ்வளவுன்னு எப்படி கண்டுபிடிக்கிறாங்க? அதுக்கு என்ன வழி ?
எதற்கு வேலை மெனக்கெட்டு இப்படி செய்யனும்? இவ்ளோ பெரிய விஷயம் பண்ணனும்னா, அப்போ உள்ள இருக்கிற கர்ப்பகிரகம் எவ்வளவு சக்தி வாய்ந்த கதிர்களையும் ஈர்க்க கூடியதா இருக்கணுமே! முகத்தில் அறையும் பிரமாண்டத்தையும் தாண்டி, காலம் காலமாக அருள் பாலித்து வரும் அந்த இறைவனின் மகத்துவம் எப்பேர்ப்பட்டது என்பதையும் மனப்பூர்வமாக உணர முடிகிறது.
எண்பது ஆயிரம் கிலோ  எடையுள்ள கல்லை, தற்போது உள்ள எந்த தொழில் நுட்பமும் இருந்து இருக்க வாய்ப்பில்லாத அந்த காலத்தில் , எப்படி கோபுரத்தின் உச்சியில் வைத்து இருக்க கூடும்? அதை தாங்கும் அளவுக்கு கோபுரம் வடிவமைக்கப்பட்டது? இவையெல்லாம், தற்போது இருக்கும் பொறியியல் வல்லுனர்களையே வியப்பில் ஆழ்த்தும் அதிசயங்கள்...
கிட்டத்தட்ட தென் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், ஒன்றுகூடி - உடல் உழைப்பு , பொருள் உதவி எல்லாம் செய்து  எழுப்பிய மகத்தான ஆலயம் இது. ராஜ ராஜ சோழன் என்னும் அரசன், ஒரு தனிமனிதன் தன் பெருமையை காலம் காலமாக நிலைக்க செய்த ஒரு செயல் , என்று நினைத்து , இங்கு நிலவும் தெய்வ சாந்நித்தியத்தை மறந்துவிட போகிறீர்கள்...
இங்கு உள்ள வராஹி - ஒரு மாபெரும் வரப்பிரசாதி. சோழர்களின் குல தெய்வமாக இருந்த துர்க்கை அம்மனுக்கு போர்படைத் தளபதி. கணபதிக்கு இணையாக முதல் வழிபாடு இங்கு இவளுக்கே என்னும்போது - நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிகிறது.  அடுத்து நந்தி எம்பெருமான். பிரதோஷ நேரத்தில் , ஒருமுறை சென்று பாருங்கள்...

பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் - ராஜ ராஜ சோழனின் காலத்தில் , அரசருக்கு பலவிதங்களில் இந்த ஆலயம் அமைக்கும்போது வழி காட்டி இருந்து இருக்கிறார். சிவலிங்கம் மட்டும் 25 ,000  கிலோ எடையுள்ளது என்கிறார்கள்..... இப்போது புரிகிறதா? இது மனிதமுயற்சியையும் தாண்டி, தன் செல்லப் பிள்ளைகளான சித்தர்களையும் உடன் வைத்துக்கொண்டு - அருண்மொழி என்னும் கருவியின் மூலம் , சிவம் தன் சித்து விளையாட்டை நிகழ்த்தி இருப்பதை!
அருண்மொழித் தேவருக்கு, சிவம் எப்பேர்பட்ட பேறை அளித்து இருக்கிறது தெரியுமா? அவர் மூலமாக , சிவம் தான் உறைய  , தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட மாபெரும் அதிசயம் தான் , இந்த ஆலயம்.
மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பாருங்கள்...
புராதனக் கல்வெட்டு சாசனங்களையும் ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தையும் பற்பல தெய்வீக ரகசியங்களையும் உள்ளடக்கியது, தஞ்சை பெருவுடையார் கோயில். சுந்தர சோழர் வம்சத்தில் வந்த  சக்ரவர்த்தி ராஜராஜ சோழனால்  கோயில் எழுப்பப்பட்ட வரலாறு, நாடிச் சுவடியில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் காவிரியின் கரையில் கம்பீரமான 216 அடி விமான உயரமும், அதன் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட 80 டன் எடையுள்ள கலசத்தையும் பொருத்தி 9 அடி உயரமும், 23.5 அடி சுற்றளவும், 25 டன் எடையும் கொண்ட ஒரே கல்லால் ஆன பெருவுடையார் லிங்கத்தையும் தனது குருவான ‘ஹரதத்தர்’ ஆலோசனை பேரில் உருவாக்கினார் ராஜராஜ சோழன். நந்தி தேவனார் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உயிர் ஊட்ட பெற்றவர். கோயிலுக்கு வாஸ்து சாந்தி செய்த பின்னரே நந்தி தேவரை நிறுவினார், சோமன் வர்மா என்ற தலைமை சிற்பி. 12 அடி உயரமும் 19.5 அடி நீளமும் கொண்டவர் நந்தி. ஆதலால், வாஸ்து புருஷன் தன் அருளாசியை பக்தர்களுக்கு எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சொந்தவீடு, கடை, நிலம் போன்ற அசையாசொத்துகளை வாங்க எண்ணுபவரும், வாங்கியசொத்துகள் விருத்தி ஆகவும் அமாவாசைதிதியில் உச்சி வேளையில் நந்தியின்வால்புறத்தில் நின்று நந்தி சகஸ்ரநாமம்சொல்ல சித்திக்கும் என்கிறார்அகஸ்தியர்.

பெருவுடையார், பஞ்ச பூதங்களின் அம்சம். இவரை தொழுவது பஞ்ச பூத லிங்கங்களை தொழுவதற்கு சமம். சரும நோயினால் அவஸ்தைப்பட்ட சோழ மன்னர், நோயின் கொடுமை தீர ஆலய யாத்திரையை மேற்கொண்டார். அருணகிரிநாதருக்கு வந்த நோய்க்குச் சமமான நோயால் பீடிக்கப்பட்ட சோழன், தனது ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை என இந்நாளில் அழைக்கப்படும் தலை மன்னார் காடு உறை ஈசனைத் தொழச் சென்றார்.

அப்போது மன்னரின் குலகுருவும் உடன் இருக்க, கருவறையின் உள்ளிருந்து அசரீரி ஒலித்தது: ‘‘ராஜராஜனே, எமக்கொரு கோ இல் சமை.” இம்மொழி கேட்ட மன்னர் தன் நாடு மீண்டு மனைவி லோகமாதேவியோடு திருவாரூர் தியாகராசரைத் தொழுது நாடி கேட்டனர். அப்பொழுது அகஸ்திய மகரிஷியே வானில் தோன்றி ஆசி கூற, ஓலைச்சுவடி படிக்கப்பட்டது.

அதில் தஞ்சை, உறையூர், காஞ்சி என்ற மூன்று தலைநகர்களில் தஞ்சையில் காவிரிக்கரையில் கோயில் கட்டவும், இதற்கான கற்கள் திருச்சி மலைப் பகுதியிலிருந்து எடுக்கவும் ஆணை வந்தது. சிவனே நாடி படித்ததாக கூறுகிறார், சிவ வாக்கியர். நர்மதை தீரத்திலிருந்து மூலவருக்கு கற்களை கொணர்ந்து, அதில் ஒளி பொருந்தியதும், நீரோட்டம் நிறைந்ததுமான ஒரு லிங்க ஸ்வரூப கல்லை ப்ரஹந் நாயகி என்ற சோழரின் குலதெய்வம் காட்டி மறைந்தது. இந்தக் கல், லிங்க வடிவில் தானே பெரு வளர்ச்சி அடைந்ததால் இந்த லிங்க மூர்த்திக்கு ‘பெருவுடையார்’ என்ற பெயர் வழங்கி வருகிறது.

கோபுரத்தின் ஒரு பகுதியில் ஆங்கிலேயரின் உருவம் காணலாம். இது பின்னர் இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆள்வர் என்பதன் குறிப்பாகும். மேலும் பற்பல ரகசிய கல்வெட்டுக்கள் தேசத்தை ஆள்பவரின் பெயரையும் காட்டுகின்றன. ராஜராஜ சோழ மன்னரின் படமும், அவரது குரு ஹரி தத்தர் ஓவியமும் உள்ளது உள்ளபடியே வரையப்பட்டுள்ளன. நாடிச் சுவடிகளை படித்த முனிவர், ராஜராஜனின் நோய் நீங்கும், வம்சம் தழைக்கும் என்றெல்லாம் கூறி வந்தவர்,  காலத்தால் கோயில் சிதிலம் அடையாது இருக்க, ‘‘திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேரு” என்ற யாகத்தை செய்யச் சொன்னார்.

இந்த யாகம் 288 நாட்கள் நடைபெற்றது. சுமார் ஆறு மண்டல காலம். கோவிலை கைப்பற்றும் எண்ணத்தில் - மாற்று அரசர்கள், அமைச்சர்கள், அரசு பிரதானிகர்கள் யாரும், ஆலயத்துள் எவ்வகையில் நுழைந்தாலும் அவர்கள் சிம்மாசனத்தை இழப்பர்; குலம்  நசியும் என்று நந்தி மண்டபத்திலிருந்து அசரீரி ஒலித்தது. இதனாலேயே, பிரகதீஸ்வரன் சந்நதியுடைய தஞ்சை பெருங்கோயிலுக்கு அரசரோ, அவர் குடும்பத்தவரோ நுழைவது தீமை பயக்கும் என்கிறது, நாடி. இதனாலேயே மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களிடமிருந்து இந்தக் கோயில் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
இங்கே, அஷ்டதிக் பாலகர்கள் அமர்ந்து வழிபாடு செய்கின்றனர். ஆறு அடி உயரம் கொண்ட இந்திரன், வருணன், அக்னி, ஈசானன், வாயு, நிருதி, யமன், குபேரன் போன்ற விக்ரகங்களைக் காணலாம். இவை ஜீவன் உடையவை. கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 தேய்பிறை பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது நாடி.
வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், கண்டிப்பாக விமோசனம் உண்டு. நாடியும் இதைத்தான் சொல்கிறது:

‘‘பேரிடர்  நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான்  பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே.’’

பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி,நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர்.

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு???

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது???

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.
இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது.உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம்.

ஆயிரம் ரூபாய் நோட்டு

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954&ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4&வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.

ஆயிரமாண்டு நிறைவு விழா
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது.

Thursday 24 October 2013

POLICE STATION



V.K.PUDUR POLICE STATION

View Police Station
Mother Village Hamlets
1. V.K.PUDUR1.    KALINGAPATTI
2.    ANNANAGAR
3.    RAMANOOR
4.    THAYARTHOPPU
5.    GOVINDAPERI
2. RAJAGOPALAPERI1.    ATHISAYAPURAM
3. VEERANAM1.    ENTHALOOR
2.    NATCHIYARPURAM
4. RAJAPANDI1.    CHEMPULIPATTINAM
5. KALUNEERKULAM1.    KALLUTHU
2.    ATHIYOOTHU

Friday 4 October 2013

நவராத்திரி

சிவனுக்கு உகந்த ஒரு ராத்திரி, சிவராத்திரி. சக்திக்கு உகந்த ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10–வது நாளான தசமி அன்று விஜயதசமி விழாவாகும்.

மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில்களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத்திரி விழா, வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று கூறினால் அது மிகையாகாது.

சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி யும் கொண்டாடப்படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேசுவரி, கவுமாரி, வராகியாகவும், இடை மூன்று தினங்களில் லட்சுமிதேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டியாகவும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. நவராத்திரி விழாவை வைணவர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்றன.

இந்தியா மட்டுமின்றி இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உலகில் உள்ள இந்து மக்கள் ஆகியோரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தார் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரதத்தை இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.

இந்த விரதம் பெண்களுக்கே உரியதாகும். அனைத்து வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயனாகும். அதே போல் இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.

நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு அமைக்கும் முறை:

முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின்

பொம்மைகள்.

இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

நாலாம்படி : நான்கறிவு உயிர்களாக விளங்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

ஐந்தாம்படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள்,

பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்

ஆறாம்படி: ஆறறிவு மனிதர்கள்

பொம்மைகள்.

ஏழாம்படி: மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

எட்டாம்படி: தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவகிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

ஒன்பதாம்படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர். அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.



நவராத்திரி வழிபாட்டு முறை:

முதலாம் நாள்: சாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபம் கொண்ட அன்னை. நீதியைக் காக்கவே கோபமாகக் காட்சியளிக்கிறாள்.

நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல்.

இரண்டாம் நாள்: அன்னையை வாராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

நிவேதனம் : தயிர்சாதம்.

மூன்றாம் நாள்: சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்ரி, சாம்ராஜ்யதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி. பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

நிவேதனம்: வெண்பொங்கல்.

நான்காம் நாள்: அன்னையை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். இவள் தீயவற்றை சம்ஹரிப்பவள்.

நிவேதனம் : எலுமிச்சை சாதம்.

ஐந்தாம் நாள்: அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். இவள் சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். க டின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற

அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

நிவேதனம் : புளியோதரை.

ஆறாம் நாள்: அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். இவள் தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்குபவள். வீரத்தைத் தருபவள்.

நிவேதனம் : தேங்காய் சாதம்.

ஏழாம் நாள்: அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும். இவள் விஷ்ணு பத்தினி. தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.

நிவேதனம் : கற்கண்டு சாதம்.

எட்டாம் நாள்: அன்னையை நரசிம்ஹியாக வழிபடவேண்டும். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.

நிவேதனம் : சர்க்கரைப் பொங்கல்.

ஒன்பதாம் நாள்: அன்னையை ப்ராஹ்மி (சரஸ்வதி )ஆக வழிபடவேண்டும். இவள் வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியம்.

நிவேதனம் : சுண்டல்