Sunday 28 December 2014

வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தமிழலங்காரம்

(விழுப்புரம் இலக்கியக்கூடலில் நூல் அறிமுக உரை)

1.1. இயல்பு
பிறப்பு என்பது ஒரு நேர்ச்சி – விபத்து - போன்றது ‘Birth is an accident” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எவரும் தாம் விரும்பிய நாட்டில், விருப்பமான பகுதியில், விருப்பமான மக்கள் கூட்டத்தில் பிறக்கின்ற வாயப்பைப் பெற்றிருக்கவில்லை. பிறந்தபின், தாய்நாட்டின் மீதும் தாய்மொழியின் மீதும் பற்றுள்ளவராக இருப்பதென்பது இயல்பானதே!
‘காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு’ என்பது போல அவரவருக்கும் அவரவருடைய இனம், அவரவர்களின் மொழி -உயர்ந்தது; சிறந்தது; பெருமை மிக்கது தான்! இருந்தபோதிலும், தமிழர்கள் வரலாறு தொடர்பாகவும், தமிழின் வரலாறு தொடர்பாகவும் கூறப்பட்டு வருகின்ற ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் வியப்பும் பெருமிதமும் அளிக்கக்கூடியனவாக இருக்கின்றன.

1.2.. குமரிக்கண்டம்
இப்போதிருக்கும் இந்திய தேசப்படத்தில் கன்னியாக்குமரி முனைக்குக் கீழே நாம் பார்க்கும் – அரபிக்கடல், வங்காள விரிகுடாக்கடல், இந்துமாக்கடல் – ஆகிய மூன்றுகடல்களின் கூடலாகக் காணப்படும் கடல் பகுதி ஒருகாலத்தில் பெரும் நிலப்பரப்பாக இருந்தது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
அதாவது இலட்சத் தீவுகள், அந்தமான் நக்காவரம் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா சேர்ந்த இப்போதிருக்கும் கன்னியாகுமரியின் தென்பகுதி முழு நிலப்பகுதியாக இருந்தது;
அப்பெரு நிலப்பரப்பைத் தமிழர், ‘குமரிக்கண்டம்’ என்றனர். குமரியாறு, பஃறுளியாறு, குமரிமலை போன்றவை அப்பகுதியில் இருந்தன.
உயிரியல் ஆய்வாளர்கள் அதை ‘இலெமூரியாக் கண்டம்’ என்கின்றனர். நிலத்தியல் ஆய்வாளர்களோ அதனைக் ‘கோண்டுவானாக் கண்டம்’ என்கிறார்கள்.

1.3. மேற்குலக அறிஞர் உறுதிப்படுத்தல்
ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கிய அந்தக் குமரிக்கண்ட பெருநிலப் பகுதியிலேயே முதன் முதலாக மக்களினம் தோன்றியது என்பது ஆய்வாளர் கருத்தாக இருந்து வருகின்றது.
இதனை உறுதி செய்த மேற்குலக அறிஞர்கள் பலராவர். அவர்களுள், Sir John Evans, Prof. Hacckal, Sir Walter Ralegh, Sir T.W.Holderness, Dr.Macclean., Dr.heezer, Sir John Simmons போன்றோர் குறிப்பிடத் தக்கவராவர்.
சோவியத் அறிஞர் அலெக்சாந்தர் கோந்தரதோவ் எழுதிய “The Riddles of Three Oceans” என்ற நூல், தமிழிலே “இந்துமாக்கடல் மர்மங்கள்” என்ற பெயரில் பார்த்தசாரதி என்பாரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. NCBH வெளியீடு, அந்நூல் குமரிக்கண்ட உண்மையை உறுதி செய்கின்றது.

1.4. இலக்கியச் சான்றுகள்
“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என வரும் சிலப்பதிகார வரிகளும், “நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே” என்ற புறநானூற்று வரியும் இன்னும் சில இலக்கியச் சான்றுகளும் குமரிக்கண்ட உண்மையை மெய்ப்பிக்கின்றது.
(உறையூரை அடைந்த கோவலன் கண்ணகி கவுந்தியென்னும் மூவரும் அன்று அங்கு தங்கி வைகறையிற் புறப்பட்டுத் தென்றிசை நோக்கிச் செல்கின்றனர். ஒரு இளமரக்காவுட் புக்கனர். அப்போது பாண்டியனின் பல புகழையும் கூறி வாழ்த்திக்கொண்டு அவ்விடத்திருந்த மறையோன்...
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி! .... என்றும் பாடுகின்றான்!

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் புறநானூறு 9ஆம் பாடலில்,

எம்கோ வாழிய குடுமி தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின், நெடியோன்
நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! ... என்றும் பாடுகின்றார்)

இக் குமரிக்கண்டக் கருத்தை மொழிநூலறிஞர் மாகறல் கார்த்தி கேயனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப்புலவர் கா.அப்பாத் துரையார், அறிஞர் கா.சுப்பிரமணியனார், அறிஞர் பூரணலிங்கனார் போன்ற தமிழ்நாட்டறிஞரும் ஏற்று உறுதிப் படுத்துகின்றனர்.

1.5. முதன்மொழி
ஓரிரு அறிஞர்கள் இவ் உண்மையை ஏற்கத் தயங்கினும், இக்கால் இலக்கியச் சான்றுகள், சொல்லாய்வுகள் போன்ற அகச்சான்றுகளும், கல்வெட்டு, தொன்மையான ஓவியங்கள், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பு போலும் தொல்லியல் சான்றுகள் உள்ளிட்ட அறிவியற் கூறுகளாகிய புறச்சான்றுகளும் இதை உறுதிப் படுத்தி வருகின்றன. பேராசிரியர் மருதநாயகம், நாளுக்கு நாள், உலக ஆய்வறிஞர்களின் முடிவுகள் குமரிக்கண்ட உண்மையை வலியுறுத்தி வருவதை எடுத்துக் காட்டுகின்றார்.
கடற்கோள்களால் அழிந்த அந்தக் குமரிக்கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் முதன்முதலாகத் தோன்றிய மாந்தர் பேசிய முதல்மொழியே தமிழ்மொழி என்பது வரலாற்று அறிஞரும் மொழியியல் வல்லாரும் கூறும் கருத்தாகும்
பி.டி.சீனுவாச ஐயங்காரின் ‘இந்தியக் கற்காலம்’ “The stone age of India” என்ற ஆங்கில நூலும், ‘தமிழர் வரலாறு’ “The History of Tamils” என்ற ஆங்கில நூலும் இதை உறுதிப்படுத்துகின்றன.

1.6. தொல்காப்பியம்
இவையிருக்க, இப்போது நமக்குக் கிடைத்துள்ள பண்டைத்தமிழ் நூல்களுள் பழமையானது, காலத்தால் முந்தியது தொல்காப்பியம் என்னும் இலக்கண இலக்கிய நூலாகும். இதன் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என்று பாவாணரும், அறிஞர் இலக்குவனாரும் இன்னும் பலரும் தீர்மானமாகக் கூறினர். இக்கால் செம்மொழித் தமிழாய்வு நிறுவன ஆய்வாளரும் அதனை உறுதி செய்துள்ளனர்.
ஆகவே, 2700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில், அறிஞர் இன்னவாறு கூறுவர், இவ்வாறு கருதுவர் என்று விளக்கும் முறையில், என்ப, மொழிப, கூறுப, சொல்லினர், மொழியினர், என்மனார், என்றிசின், என்றிசினோரே, என்றவாறு பல இடங்களில் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு: தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்தில், தொல்காப்பியம், எழுத்தெனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப – என்று கூறுகிறது. இவ்வாறு, தொல்காப்பியத்தில் 287 இடங்கள் சுட்டப் படுகின்றன.

1.7. முன்னிருந்த நூல்கள்
இவை ஓர் உண்மையைச் சொல்கின்றன. தொல்காப்பியத்திற்கு முன்னராகவே பல்வேறு இலக்கியங்களும் கலை நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன என்ற உண்மையைத் தான் அவை கூறாமல் கூறுகின்றன; உணர்த்துகின்றன.

1.8. மரபு
இன்னொன்று! தொல்பழங் காலந் தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும், நெறிகள் வழுவாது ஒழுகும் முறைமையை, ‘மரபு’ என்று அறிஞர்கள் கூறுவார்கள்.
நெறிகள் என்றால், ‘கொள்ளுவன கொண்டு, தவிர்ப்பன தவிர்த்தல்’, ‘காப்பன காத்து கடிவன கடிதல்’ அறிவார்ந்த பெரியோர் ‘விதித்தன செய்தலும் விலக்கியன தவிர்த்தலும்’ ஆகும். இப்படிப்பட்ட நெறிகளைத் தொன்று தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதே மரபு என்று சொல்லப்படுகின்றது.
தொல்காப்பியத்தில் மரபு என்ற சொல்லாட்சி 86 இடங்களில் காணப்படுகின்றது. தொல்காப்பிய உட்பிரிவான இயல்கள் சிலவற்றின் பெயர்களே நூன்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு, மரபியல் என்றுள்ளன.
தொல்காப்பியத்தில் சுட்டப்படும் பல்வேறு மரபு நிலைகள், கடைப்பிடித்துவரும் பல்வேறு முறைமைகளை மட்டும் சுட்டவில்லை. ‘தொன்று தொட்டுத்தொடர்ந்து கடைப்பிடித்து வருதல்’ – என்பதால் வேறொன்றையும் தொல்காப்பியம் நமக்கு மறைமுகமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கின்றது! என்ன அது? எண்ணிப் பாருங்கள்!
தொல்காப்பியத்திற்கும் முன்னரே ஒரு பெரும் நீண்ட அறிவுக்காலம் இருந்திருப்பதையும் அல்லவா அவை கூறாமல் கூறுகின்றன?
தமிழ்மொழி, பலதுறை நூல்கள் நிறைந்த மொழியாய் நுட்பச் சிறப்போடும் வளச் செழுமையோடும் இருந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கின்றன. அந்த நூல்களெல்லாம் என்னவாயின?

1.9. அழிந்தவகை
பாவாணரும் பரிதிமாற் கலைஞரும் விடைகூறுகின்றனர். இடைக்காலத் தமிழரின் பேதைமையால், பாழான மண்ணிற்கும் படையான சிதலுக்கும், படியாதார் நெருப்பிற்கும், பதினெட்டாம் பெருக்கிற்கும், பற்பல பூச்சிக்கும், பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்துணை எத்துணையோ எனப் பாவாணர் பதைபதைப்பார்.
பரிதிமாற் கலைஞரென்னும் சூரிய நாராயண சாத்திரியார், ‘தமிழ்மொழியின் வரலாறு’ (மொழிநூல்) என்ற பெயரிலான அவருடைய நூலில் கூறுவதைக்கேளுங்கள்: ‘தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்’ என்பார்.
அவரே, “தமிழர்களின் மறைநூல் மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு, மூல நூல்களை அழித்துவிட்டு வடமொழியனின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தன போலக் காட்டினர் பிராம்மணர்” என்று எழுதியுள்ளார். இவற்றிற்குள் இதற்குமேல் இப்போது போகவேண்டாம்!

1.10. அறிவியல் சார்ந்த மெய்ப்பிப்பு
மேற் கூறிய செய்திகளால், தமிழ்மொழியின் முன்மையையும் தொன்மையையும் அறியமுடிகிறது
தொல்காப்பிய காலத்திற்கும் முன்னரே ஓர் உயர்ந்த நிலையில் அறிவார்ந்த செழுமைமிக்க வளஞ்சான்ற மொழியாகத் தமிழ்மொழி இருந்ததைப் பல்வேறு இலக்கியச் சான்றுகளாலும், அறிஞர் ஆய்வுரைகளாலும், தொல்லியல் ஆய்வு முடிவுகளாலும் அறிவியல் அடிப்படையில் அறிகிறோம்.

2.1. தமிழலங்காரம்
சரி. இவற்றிற்கும் தமிழலங்காரத்திற்கும் தொடர்புண்டா? உண்டு!
தமிழலங்காரமும், தமிழின் உயர்வையும் முன்மையையும் தொன்மையையும் பெருமையையும் சிறப்புகளையும் நுட்பங்களையும் பலவாறாகப் போற்றிக் கூறுகின்றது.
வடமொழியால், வடமொழியாளரால் தமிழ்மொழிக்கு ஏற்பட்ட, ஏற்படுகின்ற தாக்கத்தையும் கேட்டையும் கூறுகின்றது. வடமொழியைவிடத் தமிழ் எங்ஙனம் மேம்பட்டதாகும் என எடுத்துக் கூறுகின்றது.
ஆனால், அங்ஙனம் மேன்மையைக் கூற வேறுபட்ட கோணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதே வேறுபாடாகும்.

2.2. தமிழலங்காரம் பிறந்த கதை
தமிழலங்காரம் சிறிய நூல். இதில் காப்புச் செய்யுளும் நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களும் உள்ளன. இந்நூலை இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாராவார்.
இவர், தேவார மூவர் – திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார் - போல பல ஊர்களுக்கும் சென்று, ஆங்காங்கு கோயில்கொண்ட சிவனைப் போற்றிப் பதிகம் பாடி வந்தார். அவ்வாறான நிலையில் ஒருமுறை வேலூரில் வந்து தங்கி அவ்வூர் உறையும் இறைவனைப் போற்றிப் பதிகமும், திருப்புகழும் பாடியிருந்தார்.
அக்கால், அவரைத்தேடி வந்த ஒரு பனவன் – பனவன் என்றால் பார்ப்பனன், பிராமணன் என்று பொருள் – அவரிடம் வடமொழியே உயர்ந்தது; வலிமை பெற்றது எனத் தருக்குரை செய்ய, இருவரும் பல்வேறு நிலைகளில் சொற்போர் புரிந்தும் முடிவுபெறாத நிலையில், சீட்டெழுதிப் போட்டு முருகப் பெருமானிடம் தீர்ப்பறிய முடிவு செய்தனர்.
அம்முடிவின் படியே முருகனின் திருஉருவின் முன் சீட்டெழுதிப் போட்டு ஒரு சிறு பெண்குழந்தையை விட்டு ஒரு சீட்டை எடுக்கச் சொல்லினர். அக்குழந்தை எடுத்த சீட்டில், ‘தமிழே உயர்ச்சி’ என்று இருந்தது. இந் நிகழ்ச்சியே, தாம் தமிழலங்காரம் பாடக் காரணமாக இருந்தது என்று ‘குருபர தத்துவம்’ என்ற தன்வரலாற்று நூலில் நூலாசிரியர் குறித்துள்ளார்.

2.3. நூலாசிரியர்
‘தமிழலங்காரம்’ இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தந்தை, திருநெல்வேலி நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில் நாயகம் ஆவார். தாய் பேச்சிமுத்து அம்மையார். இவர் 1839 -இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்.


2.4. பாப் பொழியும் ஆற்றல்
எட்டு அகவையிலேயே சுரண்டை என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள ‘பூமிகாத்தாள்’ எனும் பெண் தெய்வத்தின் பெயரில் இவர் முதன்முதலாக ஒரு வெண்பா பாடினார்.
பதின்மூன்றாம் அகவையிலேயே ‘வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததார். இவ்வாறு இளமையிலேயே பாடல் பொழியும் ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராமனார் என்பார், இவருக்கு "ஓயா மாரி" என்ற பட்டப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
(வண்ணப் பா: முத்தைத்திரு பத்தித்திருநகை
அத்திக்கிரு சக்திச்சரவண.................................. என ஓதும்)
2.5. பெயர்க் காரணம்
‘சரபம்’ எனபது ஒரு புனைவான, ‘கற்பனை’யான எட்டுக்கால்களை உடைய பெரும் பறவை. இது பனிமலையில் வாழ்வதாகவும், சீயம், அரிமா என்னும் விலங்கரசான ‘சிங்க’த்தையும் தாக்கக் கூடியதென்றும் கூறுவர்.
இப் புனைவுப் பறவையைத் தமிழில் ‘சிம்புள்’ என்பர். ‘சிம்புட் பறவையே, சிறகை விரி, எழு!’ என்பது பாவேந்தரின் புகழ் பெற்ற பாடல் வரி!.
வண்ணம் என்றால் சந்தம். வண்ணப்பா இயற்றும் ஆற்றலில், அந்தப் பறவைக்கு இருந்த உடல் ஆற்றலை ஒத்த ஆற்றல் அவருக் கிருந்ததால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்பட்டார். வெண்பா எழுதுவதில் திறம் மிக்கவரை ‘வெண்பாப் புலி’ என்று சொல்வார்கள். அதைப் போன்றே அடிகளார் ‘வண்ணச்சரபம் என்றழைக்கப்பட்டார். (12 வண்ணங்கள் பாடியுள்ளார்)
(சரபம்: A large fabnulous bird with 8 legs regarded as the foe of the lion and as inhibiting the snowy mountains. – வின்சுலோ அகராதி)
உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டு இடுப்பில் நீர்ச்சீலை என்னும் கோவணமும், கையில் தண்டமும் வைத்துக்கொண் டிருந்ததால் தண்டபாணி அடிகள் என்றும், முருகனை மனம் உருகிப் பாடியதால், "முருகதாசர்" என்றும் அழைக்கப்பட்டார். அருணகிரியாரின் அடியொற்றித் திருப்புகழ் பல படைத்ததால் ‘திருப்புகழ் அடிகள்’ என்றும் அழைக்கப்பட்டார்.

2.6. இயற்றிய நூல்கள் திருவரங்கத் திருவாயிரம், சடகோபர் சதகத்தந்தாதி, பெருமாளந்தாதி, அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள், புலவர் புராணம், திருமாவாத்தூர் தலபுராணம், அருணகிரிநாதர் புராணம், முசுகுந்த நாடகம், மறுநெறித் திருநூல், நான்குநூல், கௌமார முறைமை, தியானாநுபூதி ஆகிய நூல்களையும்,
சத்திய வாகசம் என்னும் உரைநடை நூலையும்,
அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய இலக்கண நூல்களையும்,
தமிழைப் போற்றி வணங்கும் முத்தமிழ்ப் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழலங்காரம் என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார்.
ஆங்கிலேயரை எதிர்த்து ‘ஆங்கிலியர் அந்தாதி’ என்ற நூலையும் இன்னும் பலநூல்களையும் அடிகள் இயற்றியுள்ளார்.

2.7. தமிழிசைத் தொண்டர் தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாத்திரி முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடிவந்த காலத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் தமிழில் வண்ணம் (சந்தப்பாட்டு) பாடித் தமிழிசைக்கு உயிரூட்டினார்.
சந்த வகைக்கு இலக்கணம் வகுத்து ‘வண்ணத்தியல்பு’ என்ற இலக்கண நூலை முதன்முதலாக இயற்றிவர் இவரே!. இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள் ஒரு நூறாயிரத்திற்கும் – ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டவையாம்.

2.8. அடிகளும் ஆமாத்தூரும்
பல ஊர்களுக்கும் சென்று பதிகமும் திருப்புகழும் பாடிவந்த அடிகள், தம் இறுதிக் காலத்தில் நம் விழுப்புரம் நகருக்கு அருகிலுள்ள திருஆமாத்தூர் வந்துத் தங்கிக் கெளமார மடத்தை நிறுவித் தமிழ்ப்பணி யாற்றி யிருக்கிறார்.
அடிகளின் பெயரர் முருகதாசர் எழுதிய உரையுடன், தமிழலங்காரம் 1964-இல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், 34 ஆண்டுகள் கடந்தபின், நம் விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் தலைவர் மருத்துவர் பாவலர் பாலதண்டாயுதம் ஐயா, தமிழலங்காரம் நூலை உரையுடன் 34 ஆண்டுகளுக்குப் பிறகு 1998-இல் மீண்டும் அச்சேற்றி வெளியிட்டார்.
3.1. தமிழலங்காரம் தமிழின் உயர்வை எவ்வாறு விளக்குகிறது?
தமிழலங்காரம், பல்வேறு தெய்வியக் கதைகள், கடவுளரின் வாழ்க்கை. நிகழ்வுகள், நம்பிக்கைகள், இலக்கண இலக்கிய சிறப்புகள் துணையுடன் தமிழின் உயர்வை, பெருமைகளை, சிறப்புகளை, நுட்பங்களை விளக்கிக் கூறுகிறது.

3.2. தமிழலங்கார விளக்கங்களில் யார்யார் தொடர்பான செய்திகள் இடம் பெறுகின்றன?
சிவபெருமான், திருமால், பிரமன், இந்திரன், பிள்ளையார், முருகன், கலைமகள், திருமகள், சூரியர், சந்திரர் போன்ற கடவுளர் தொடர்பான பல செய்திகளும்
விருத்திராசூரன், சூரபன்மன். இராவணன் தொடர்பான செய்திகளும்,
சனகன், வசிட்டர், திருமலை ராயன், கணிவண்ணன், ஆண்டாள், பரவை நாச்சியார், தொடர்பான செய்திகளும்,
திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், கச்சியப்ப சிவாசாரியார், ஒட்டக்கூத்தர், அம்பிகாபதி, இரட்டைப் புலவர், அகத்தியர், நக்கீரர், காளமேகம், முத்துவயிரப் புலவர், கந்தசாமிப் புலவர், வீரபாண்டியப் புலவர், சீநிவாசப் பெலவர், ஆறுமுகப் புலவர், பாணினி, தக்கன் தொடர்பான செய்திகளும்,
பகழிக் கூத்தர், பட்டினத்தடிகள், பத்திரகிரியார், பராசரமுனிவர், திருஞான சம்பந்தர், சுந்தர மூர்த்தியார், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர், குகை நமச்சிவாயர், அபிராமிபட்டர், வியாசர், சேரமான் பெருமாள் நாயனார், திருப்பாணாழ்வார், வீரபாகு, திருமங்கை யாழ்வார், இன்னும் சிலர் தொடர்பான செய்திகளும் தமிழின் உயர்வைக் கூறுவதற்கு வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

3.3. தமிழலங்காரம் சுட்டும் நிகழ்வுகள், நம்பிக்கைகளில் சில
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது,
இறைவனின் திருமணத்திற்கு அனைவரும் இமயத்தில் குவிந்ததால் இமயம் தாழ, அதைச் சரிசெய்வதற்குச் சிவன் அகத்தியரைப் பொதிகை மலைக்குச் செல்லுமாறு பணித்தது,
சுந்தரர், வறண்ட குளத்தில் நீர் வரவழைத்து, அதில் முதலை தோன்றச் செய்து, மூன்றாண்டுக்கு முன் அது விழுங்கிய பார்ப்பனச் சிறுவனை உரிய வளர்ச்சியுடன் உமிழச் செய்தது,
திருஞான சம்பந்தருக்கு உமை ஞானப்பால் ஊட்டியது,
திருஞானசம்பந்தர், மயிலாப்பூர் குளக்கரையில் சுடப்பட்ட எலும்பிலிருந்து பெண்வரப் பாடியது,
திருநாவுக்கரசர் கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது, கொல்லவந்த பட்டத்து யானையைப் பின்வாங்கச் செய்த்து, நீற்றறயைக் குளிரவைத்தது, இறந்த அப்பூதியார் மகனை உயிர்பெற்று எழச் செய்த்து,
தருமி பாண்டியனிடம் பொற்கிழி பெறச் செய்தது,
ஒளவையார், வெட்டப் பட்ட பலாமரம் தழைக்கப் பாடியது.
சுந்தரர்க்காகப் பரவைநாச்சியிடம் சிவன் தூது சென்றது,
அபிராம பட்டரைக் காப்பாற்றக் காருவா நாளில் அமாவாசையில் முழுநிலா தொன்றச்செய்தது - போன்ற பலப்பல கதைகளும், நிகழ்வுகளும் நம்பிக்கைகளும் தமிழின் உயர்வைக் கூற வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் தமிழலங்காரத்தில் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

4.1. தமிழலங்காரப் பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
முதலில் காப்புச் செய்யுள்:
தித்திக்கும் நூறு தமிழலங்காரப் பாடல்களை நன்றாகத் தாம் பாடுவதற்குப் பிள்ளையார் துணையிருக்க வேண்டுமென வேண்டுகிறார் வண்ணச்சரபம் அடிகளார். அக்காப்புச் செய்யுள் இதுதான்:
இமிழ லங்கார மதநீர் அருவிகள் எப்பொழுதுதும்
உமிழ லங்காரத் தலைக்கண நாதனை உன்னுகின்றேன்
சிமி ழலங்கார முலையார் மொழியினும் தித்திப்பதாம்
தமிழ லங்காரக் கவிநூறும் நன்கு தருவதற்கே!
மங்கையரின் இன்மொழியினும் தித்திப்பது தமிழ்மொழி என்கிறார். இந்தக் கருத்து, ‘மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை என்று சொல்வேன்’ என்ற பாவேந்தரின் கூற்றை நினைவூட்டுகிறது அல்லவா?

4.2. ஆரிய வேள்வியில் உயிர்க் கொலை
பிரம்மன், தக்கன் போன்ற வடமொழியாளர், ஆரிய வேத்ததில் ஆ என்னும் பசு, ஆடு, குதிரை முதலியவற்றைக் கொன்று செய்யும் வேள்வியைப் பாராட்டிக் கூறுவர்.
ஆனால், திருவள்ளுவர் ஒளவையார் முதலானவர் கூறிய தமிழ்மறையோ கொலை எவ்விடத்தும் கூடாது என்று வலியுறுத்துவதால் உயர்ந்தமொழி தமிழே என்று வண்ணச்சரபம் ஐயா வலியுறுத்துகிறார். பாடல் இதோ:
நான்முகன் தக்கன் முதலோர் அநேகர் நவின்றவட
நூன்முழு தும்கொலை வேள்வியைப் போற்றும் நுடங்கரிய
வேன்முனைக் கண்ஒளவை வள்ளுவன் ஆதியர் விண்டதென்னூல்
ஊன்முழுப் பாவம் எனவே அடிக்கடி ஓதிடுமே! - 4
(‘மனோன்மணீயம்’ சுந்தரனாரும், ‘மணிமேகலை’ ஆபுத்திரனும் நினைவுக்கு வருகின்றனர் அன்றோ?)

4.3 தென்றலும் வாடையும்
தண்மையுடன் தமிழின் இனிமை சேர்ந்துவரும் தென்றல் காற்று உடலுக்கு நலத்தையும் மனத்திற்கு மகிழ்வையும் தரும்.
கடினமான வடமொழித் தன்மை தாங்கிவரும் வாடைக்காற்று உடலுக்கு அயர்வும் கேடும் தரும்.
இவற்றை ஆராய்ந்து மருத்துவநூல் வல்லாரே கூறுவர் என்று தமிழின் உயர்வைக் கூறுகிறார். பாடல் இது:
தண்டமிழ் வாசம் கலந்து குலாவும் தனித்தென்றலும்
ஒண்டகை ஆரியச் சீர்தோயும் வாடையும் ஊனிலொன்றி
மண்டலத் தோர்க்குத் தரும்பயன் தன்னை மதித்தறிந்து
கண்ட வயித்தியர் வாய்மேன்மை தாழ்மையைக் காட்டிடுமே! -10 ‘வாடைக் காற்று தமிழர்க் காகாது’ என்ற வரி நினைவுக்கு வருகின்றது.

4.4. இறைவன் தன்கையால் எழுதிய திருவாசகம்
பராசர முனிவரின் மகனான வியாசர் கூறிய வடமொழியின் ஐந்தாம் மறையாகிய பாரதத்தை மேருமலையின் மீது எழுதும்படி பிள்ளையாரைப் பணித்தார் இறைவன்.
ஆனால், அன்புருவான திருவாதவூரடிகள் பாடிய தென்மொழித் திருவாசகத்தை தம் கையாலேயே எழுதினார்.
அதை உமாதேவி மகிழும்படிப் பொன்னம்பலத்தில் பாதுகாப்பாகவும் வைத்தார் என்று தென்மொழித் தமிழுக்கு இறைவன் அளித்த உயர்வை அடிகள் கூறுகிறார்.
பாடல் இதோ:
வண்மைப் பராசரன் மகன்சொல்ஐந் தாமறை வாசகத்தை
அண்மைப் புதல்வன் கரத்தால் வரைவித்த அண்ணலருள்
உண்மைத் தமிழ்த்திரு வாசகப் பாடல் ஒருங்கெழுதிப்
பெண்மைக் குவகை தருமரங் கூடுறப் பேணினனே! - 17

4.5. எகர ஒகரம் இல்லாத மொழி
சீர்காழி அகன்ற பொய்கைக் கரையில் அழுத சிறுவரான திருஞான சம்பந்தருக்கு உமையவள் ஊட்டிய ஞானப்பாலின் இனிமை, அடியவர் அஞ்ஞான இருள் நீக்கும் தேவாரத் தமிழாக வெளிவந்ததே யல்லாமல்,
எ, ஒ போன்ற எழுத்துக்கள் இல்லாத வடமொழி மூலமாக வெளிவரவில்லை. எனவே, தமிழ் ஞானமொழி எனகிறார் அடிகள்.
அந்தப் பாடல் இதுதான்:
சீகாழி யூர்த்தடம் பொய்கைக் கரையிற் சிறிதழுத
வாகாரும் சேய்க்குமை நல்கிய பாலின் மதுரமன்பர்
சோகாந்த காரம் கெடத்தமி ழோடு துலங்கிற்றன்றி
ஏகாரத் தின்குறில் இல்லாக் கலையொ டிலங்கிற்றன்றே! - 19
தேவாரம் எகர ஒகரமில்லா வடமொழியிலா பிறந்தது? தமிழில்தானே பிறந்தது என்கிறார் வண்ணச்சரப அடிகளார்.

4.6. திரிந்த தமிழ்ச்சொல்
‘புகல்’ என்னும் தமிழ்ச் சொல்லைப் ‘போல்’ என்று இந்தியில் கூறுகின்றனர். இவ்வாறு பல தமிழ்ச் சொற்களை இந்துத்தானியில் திரித்து வழங்குகின்றனர்.
உலகில் எம்மொழியின் சொற்களும், தமிழ்ச்சொல்லும் வடசொல்லும் கலந்தே அமைகின்றன.
எனவே, தமிழே உலக மொழிகளின் தாய் என்கின்றார்.
பாடல் இது:
புகல்எனும் சொல்லினைப் போல்எனச் சொல்லுதல் போற்பலசொல்
இகல்இந்துத் தானியும் செந்தமி ழிற்கொண் டியம்புகின்றார்
அகல்நிலத் துள்ள கலையாவும் தென்சொல் லதுவுமெதிர்
திகழ்வட சொல்லும் கலந்தே விளங்கும் தெரிந்திடினே! - 22

4.7. ஒண்தமிழ் ஆற்றல்
திருநாவுக்கரசரைக் கருங்கல்லிற் பிணித்துக் கடலில் வீசினர். அந்தக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது தமிழ்ப்பாடல்.
கொல்ல வந்த பட்டத்து யானையை அஞ்சி அடங்கச் செய்தது தமிழ்ப் பா. சுண்ணாம்புக் காளவாயாகிய நீற்றறையைக் குளிரவைத்தது அப்பரின் தமிழ்ப் பாட்டு.
அப்பருக்கு உணவு பரிமாற இலை கொண்டுவரச் சென்ற போது பாம்பு கடித்து இறந்த அப்பூதியடிகளின் தலைமகனை உயிர்பெற்றெழச் செய்தது அப்பரின் தமிழ்ப் பதிகம்.
ஒண்டமிழின் ஆற்றல் என்னே! என்று பாடுகிறார்.
கடல்நீரில் கல்மிதக்கும் படிச்செய்து களிறுறுக்கும்
அடல்யாவும் குன்ற அடக்கிவெந் நீற்றறை அம்புயப்பூந்
தடமாகக் காட்டி அரவால் இறந்த தனயனையும்
உடலோ டெழச்செய்த தன்றோ ஒருவன்சொல் ஒண்டமிழே! - 29

4.8. பேய்க்கரும்பு இனிக்கும் பேறு தரும் தமிழ்
திருவாரூரில் காமத்தால் இறந்த ஒருவனைப் பிழைக்கச் செய்தது பட்டினத்தார் தமிழ்ப் பா, இறந்த தாயின் உடலை நீரூறும் வாழை மரங்கொண்டு எரியூட்டியது அவர் தமிழ்ப் பாடல், காஞ்சியில் இகழ்ந்து பேசிய ஒருவனது பெருவயிறு பிளக்கச் செய்ததும் அவர் தமிழ்ப்பாவே, திருவொற்றியூரில் மாடு மேய்க்கும் சிறுவர்க்குப் பேய்க்கரும்பை இனிமை யுடையதாக்கியது (பட்டினத்தார் பாடிய) செந்தமிழே என்கின்றார். அது இந்தப் பாடல்:
ஆரூரில் மொத்துண்டு செத்தார்க் குயிர்நல்கி, அன்னையினால்
நீரூறும் வாழையில் தீமூட்டிக், கச்சியில் நிந்தைசெய்தோன்
பேரூன் வயிறு பிளந்து, கைப்பாகிய பேய்க்கரும்பும்
சீரீர்தென் ஒற்றியில் தித்திக்கச் செய்தது செந்தமிழே! - 53
(முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
அளன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூளக மூள்கவே! – பட்டினத்தார் பாடல்)

4.9. தமிழை மற்றொருமொழி தந்ததென்பவன் பதர்!
தமிழை உணர்ந்த பாவலன் போன்ற ஒருவன், தனது மொழியை அமிழ்தினும் உயர்வென்று அறிந்து மகிழாமல், பிறமொழியை விரும்புவது, வேறொரு பெண்ணின் கணவனை வியக்கும் ஒருத்தியின் செயலுக்கு ஒப்பாகும். அவன் புலவனல்லன் என்கிறார். அந்தப்பாடல் இது:
தமிழ்உணர் பாவலன் போல்வான் ஒருவன் தனதுகலை
அமிழ்தினும் ஏற்றமென் றேமாப் புறாமல் அயற்கலையால்
உமிழ்வதென் றொப்பிடில் மற்றோர் மடந்தைக் குரியகொண்கன்
குமிழ்மலர் நாசியி னால்மணந் தாள்நிகர் கோதினனே! - 97
இவ்வாறு எல்லாப் பாடல்களும் சுவையோடு தமிழின் உயர்வைத் தெரிவிக்கின்றன.

5.1 தண்டபாணியார் தமிழ்ப்பற்று
"இளநகைச் சிறுமியர் சொல் மொழியினும் தித்தித்திருக்கின்ற தமிழ்" என்றும்,
"செந்தமிழே உயர்வென்று முன்னாள் சீட்டு எனக்குத் தந்தனன் கந்தன்" என்றும்
"தமிழ் மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதெனில் வெகுளியற் றிருப்பவன் வெறும் புலவோனே" என்றும்,
”மதுரத் தமிழை இகழ் தீயோர் மணிநா அறுத்துக் கனலில் இட” என்றும்
“தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில், அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே!” (பு. இ.) என்றும்

தண்டபாணி அடிகளார் பாடிய பாடல் வரிகள் அவரின் ஒப்பற்ற தமிழ்ப்பற்றை உணர்த்துகின்றன.
5.2. தமிழலங்காரச் சிறப்பு
வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், தமிழின் உயர்வை விளக்கி மெய்ப்பிக்க, அவர் காலத்தில் (ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன்னர்) மக்களிடம் அழுத்தமாகக் கருத்தேற்றம் பெற்றிருந்த தெய்வியக் கதைகளையும், கடவுளர் வாழ்க்கை நிகழ்வுகளையும், பல்வேறு நம்பிக்கைகளையும், மொழிகளின் இலக்கண அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, காலத்திற்கேற்ற உத்தியைக் கையாண்டு தமிழின் உயர்வைத் ‘தமிழலங்காரம்’ நூல்வழி நிலைநாட்டி நிறுத்தியிருபதை உணர்ந்திட முடிகின்றது என்று கூறி என் உரையை முடிக்கின்றேன்.

பொதிகை என்னும் ஹாட் ஸ்பாட்


அலையின் சுழற்சியிலே,

இலைகள் தோன்றுகின்றன;

மடிகின்றன; இந்தச் சுழற்சி,

விரிவாக, நட்சத்திரங்களிடையே

மெதுவாகவே நிகழ்கிறது.

- தாகூர்

என் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்தான ஓர் அனுபவம் ஏற்பட்ட நந்நாள் பொதிகையின் சிகரங்களில் ஏற்பட்டதுதான். பூங்குளம் என்னும் ஒரு மொட்டையான பாறையில் படுத்திருந்தபோது என்னைச் சுற்றி மஞ்சு தவழ்ந்து கொண்டிருந்தது. மெலிதாகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. திரைப்படப் பாடல்களில் வரும் தென்றலுக்கும், பொதிகை தென்றலுக்கும் அன்றுதான் வேறுபாடு தெரிந்தது. இறந்து போன உடலை உயிர்ப்பிப்பதற்கான வலிமை, அத்தென்றலுக்கு இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய இளவயதில் கானகத்தில் அலைந்த நாட்கள் என்னுடைய வாழ்க்கையை வேறு விதமாக மாற்றியமைத்தன. ‘பூங்குளத்தில்’ தான் தாமிரபரணி உற்பத்தியாகிறது.

பொதிகை மலையைப் பற்றி விரிவாக பார்க்கும் போது ஹாட்ஸ்பாட் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். ஹாட்ஸ்பாட் என்பதை உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்று குறிப்பிடலாம். எங்குமில்லாத பல்லுயிர்ப் பெருக்கம், மிக அருகிப்போன அபாயத்தில் உள்ள மிருகங்கள், தாவரங்கள், வனப்பாதுகாப்பையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய இடமாக ஹாட்ஸ்பாட்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மறைந்து கொண்டிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்கவும், மனிதன் அழித்தது போக மிஞ்சிபோன பல்லுயிர்ப் பெருக்கங்களைப் பாதுகாக்கவே இந்த ஹாட்ஸ்பாட் உருவாக்கப்பட்டது. 1988ல் பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் அறிஞர் நார்மன் மையர்ஸ் இக்கருத்தாக்கத்தை உருவாக்கினார். இப்பூவுலகில் ஹாட்ஸ்பாட்கள் நிலப்பரப்பில் 2.3 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளன. ஒவ்வொரு ஹாட்ஸ்பாட்டும் ஏற்கனவே தன்னுடைய 70% சதவீத இயற்கைப் பல்லுயிர்களை இழந்துவிட்டது. உலகில் இதுவரை ஹாட்ஸ்பாட்டுகளாக 34 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் இமயமும், பொதிகை மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளது.

ஹாட்ஸ்பாட்டுகளின் அடிப்படை இழையாக உள்ள கருத்தாக்கம் என்னவெனில் அழிந்து வரும் உயிரினங்கள், அதாவது திரும்பவும் உருவாக்க இயலாத தன்மையை இது கவனப்படுத்துகிறது. எனவே இதை பாதுகாப்பதே நமது தலையாய கடமை Bird life international என்னும் நிறுவனம் ‘218’ இடங்களில் அருகி வரும் பறவையினங்கள் உள்ளதாக குறிக்கிறது. ‘Global 200 Eco regions’ என்று இருநூறு இடங்களைச் சுற்றுச்சூழல் மதிப்புமிக்கதாகக் கூறுகிறது. இந்த ஹாட்ஸ்பாட்கள் சுற்றுச்சூழல் மதிப்புமிக்க இடங்களில் 60 சதவிகிதத்திற்கு மேல் உள்ளடக்கியுள்ளன.

‘ஹாட் ஸ்பாட்’ என்று ஒரு இடத்தை நாம் குறிப்பதற்கு அவ்விடம் 1,500 தாவரங்களைக் கொண்டதாகவும் (அதாவது உலகின் 5 சதவிகிதத்தை), இரண்டாவதாக அந்த இடம் தன்னுடைய சுயமான உயிரினங்களில் 70 சதவிகிதத்தை இழந்திருக்க வேண்டும். இந்த 34 ஹாட் ஸ்பாட்டுகளும் 1,50,000 அருகி வரும் தாவரங்களைக் கொண்டுள்ளன. அதாவது இவ்வுலகின் பாதி தாவரங்களை. இதைத் தவிர பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் அனைத்து பல்லுயிர்ப் பெருக்க நிகழ்வுகளும் அடங்கும்.

இந்தியாவின் ‘வளர்ச்சித் திட்டங்களால்’ மேற்குத் தொடர்ச்சி மலை பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. மக்கள்தொகைப் பெருக்கம், மரங்களை வெட்டுதல், விவசாயத்திற்கு காட்டை அழித்தல் ஆகியவற்றின் மூலமும் மேற்குத் தொடர்ச்சி மலை பல்வேறு அழிவுகளைச் சந்தித்து வருகிறது. வேட்டை, தொழிற்சாலைகள், போக்குவரத்து ஆகியவை நிரந்தரப் பிரச்சனைகளாகவும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் மேலைக் கடற்கரையோரத்தில் படிக்கட்டுகளைப் போல காட்சியளிப்பதால் இது (Western Ghats) மேலைப்படி என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவக்காற்று மழையின் மூலம் ஜுன் முதல் செப்டம்பர் வரை பல்வேறு ஆறுகள் இம்மலையிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. இந்த ஆறுகளினாலேயே தமிழகத்தின் விவசாயம், குடிநீர், எரிசக்தி அனைத்தும் உருவாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவுகளில் தொல் பழங்குடி மக்களான காணிக்காரர்கள், பறியர்க்காடர், இருளர், தொதவர், முதுவர், புலையர் போன்றவர்கள் வசிக்கின்றனர். பொதிகை மலையின் அடிவாரத்திலும் காணிக்காரர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர்.


மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக இலங்கையின் மலைகளும், காடுகளும் ஒரே ஹாட்ஸ்பாட்டாக அமைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த, தொன்மையான புராணங்களும் தொன்மங்களும் நிறைந்த பகுதிதான் ‘பொதிகை’. தமிழகத்தையும் கேரளத்தையும் இரண்டாகப் பிரித்து, ஓங்கி நிற்கிறது இப்பொதிகை. தமிழகத்தின் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், காரை அணைக்கட்டுகளின் மேல்பகுதியே பொதிகை மலை என்று அழைக்கப்படுகிறது. பொதிகை மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 6.125 அடி உயரத்திலுள்ளது. 8.25&9.10 வடக்கு அட்ச மற்றும் 77.89&78.25 கிழக்குத் தீர்க்க ரேகையில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அதிஉன்னதச் செழுமையான பகுதிகளைக் கொண்டுள்ளது இப்‘பொதிகை’. முழு மேற்குத் தொடர்ச்சி மலையுமே ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்பட்டாலும், பொதிகை ஹாட் ஸ்பாட்டுகளின் ஹாட் ஸ்பாட்டாக அமைந்துள்ளது எப்படி என்று காணலாம்.

‘பொதிகையின் தன்மை’

உண்மையில் பொதிகை மலையைப் பற்றி ஆய்வுகள் இல்லை. வாய்மொழிக் கதைகளும், புராணங்களும், தொன்மங்களுமே பொதிகை மலையை சிறப்பித்துள்ளன. எனினும் சங்க இலக்கியங்களில் பொதிகை மலை குறிப்பிடப்பட்டுள்ளது. மன்றப் பொதியில், தமிழ் மலை, பொதியப்பட்டு, அகத்தியர் மலை, மன பொதியம், தென்மலை, செம்மலை, குடைமலை, மலையாமலை, பொதியில் என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுவது பொதிகை மலையேயாகும். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலையில் பொதிகை மலை தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.
“பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே” (புறம் 2:8) புறநானூற்றுப் பாடல் ஒன்று இரு ஹாட் ஸ்பாட்களை அன்றே அடையாளப்படுத்தியுள்ளது. புராணங்களிலும் வெவ்வேறு இடங்களில் பொதிகை மலை வந்து போவது அதன் தொன்மையைக் காட்டுகிறது. மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ‘பொதியில்’ என்று குறிப்பிடப்படுவது பொதிகை. ‘இரகு வம்சத்தில்’ காளிதாசர் பொதியமலையை குறிப்பிடுகிறார். பொதிகையில் உற்பத்தியாகும் தாமிரபரணியையும், அது சங்கமமாகும் இடத்திலுள்ள முத்துக் குளிக்கும் துறையான கொற்கையையும் குறிப்பிடுகிறார் காளிதாசர். வியாசபாரதம் இம்மலையை தாமிரபரணி என்று குறிப்பிடுகிறது. இது தேவர்கள் தவம் செய்யும் இறையுணர்வுமிக்க இடம் என்றும் குறிப்பிடப்படுகிறது.பொதிகை மலையில் ‘மகேந்திரகிரி’ என்ற இடம் உள்ளது. இவ்விடமே வால்மீகி இராமாயணத்தில் வரும் மகேந்திரமலையாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


பொதிகையின் தமிழ் முனி அவலோகிதரா?அகத்தியரா?

என்னுடைய முதல் பொதிகைப் பயணத்தில் பூங்குளத்தை விட்டு இறங்கியபோது பதினைந்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் விசாரித்தபோது தாங்கள் புத்தரை தரிசிக்க வந்ததாகக் கூறினர். எனக்கு அது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. பின்பு வெகு நாட்களுக்குப் பிறகு முனைவர் ஜி.ஜான்சாமுவேலின் ‘பண்பாட்டுப் பயணங்கள்’ என்னும் நூலைப் படித்ததில் அவர் பொதிகை மலைக்கும், பௌத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவாக விளக்கியிருந்தார். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் பௌத்தம் தமிழகத்திற்கு வந்தது. பௌத்த இலக்கியங்களில் இம்மலை ‘போதலகிரி’ என்று குறிப்பிடப்படுகிறது.

தாராசூக்கம் என்னும் நூலில் அவலோகிதர் தன் மனைவி தாராதேவியுடன் வீற்றிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமிழ் வரலாறு’ எழுதிய இரா.இராகவையங்கார் அவலோகிதரைப் போதலகிரி நிவாஸிநி என்று குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டுகிறார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய மகாயான நூலான கந்தங்வவூவ்யூக சூத்திரம் தென்திசையிலுள்ள ‘பொத்தலகா’ என்ற மாலையில் ‘அவலோகிதர்’ வசித்ததாகக் குறிப்பிடுகிறது.

இந்தியாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் பௌத்தம் அழிக்கப்பட்டு பொதிகை மலையோடு அவலோகிதருக்கு இருந்த அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. காலப்போக்கில் அவலோகிதர் வீற்றிருந்த இடத்தில் அகத்தியர் இடந்தரப்பட்டார் என்றும் ஆனால் அகத்தியரை ஏற்றுக்கொள்ளாத பௌத்தர்கள், அகத்தியர் பொதிய மலைக்குச் சென்று அங்கு வீற்றிருந்த அவலோகிதரிடம் தமிழ் கற்றார் என்று கதையினை பௌத்தர்கள் ஏற்படுத்தினர் என்று ஜான் சாமுவேல் குறிப்பிடுகிறார்.

பௌத்த இலக்கண நூலான வீரசோழியத்தில்

“ஆயும் குணத்து அவயோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு

ஏயும் புவனிக்கு இயம்பின தண்டமிழ்”

என்று அகத்தியர் அவயோகிதரின் மாணவனாக வீற்றிருந்து தமிழ் கற்றார் என்பது குறிக்கப் பட்டுள்ளது.

பல்வேறு இலக்கியங்களின் மூலம் நாம் அறிவதென்பது ‘அகத்தியர்’ வட மாநிலத்திலிருந்து வந்தார் என்பதுதான். அவர் வந்தபோது பொதிகையில் அவலோகிதர் பொதிகை மாமுனியாக வீற்றிருந்தார் என்றும் நமக்குத் தெரிகிறது. எனினும் இவையாவும் விரிவான ஆய்வுகளின் மூலம் நிறுவப்பட வேண்டியவை. எனினும், பொதிகை மலையில் மாமுனி ஒருவர் தமிழை வளர்த்தார், உலகிற்கு தமிழ்க் கவிதையாக அளித்தார் என்று சொல்வது மிகையாகாது.

பொதிகையின் மகள் தாமிரபரணி

பொதிகையின் தொன்மையை தமிழர்கள் மட்டுமன்றி சீன யாத்ரிகர் யுவான் சுவாங் பொதிகையில் சந்தன மரங்களை சிலாகித்து எழுதி உள்ளார். தாலமி பொதிகைத் தென்றலை பதிவு செய்து எழுதியுள்ளார். பெரிபுளுஸ் ஆப் எரிதீரியன் சீ என்றும் கடற்பயண நூலை எழுதிய கிரேக்க மாலுமி பொதிய மலையைச் செம்ம என்று குறிப்பிடுகிறார். குமரிக்கண்ட கொள்கையின்படி எல்லாத் தொடர்ச்சிகளும் இருந்த காலத்தில் இவையனைத்துமே தாமிரபரணி என்று அழைக்கப்பட்டது. இன்று எல்லாவற்றின் நினைவாக பொதிகையிலிருந்து புறப்பட்டு புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமிரபரணி என்பதற்கு சிவப்பு சந்தன மரக்காடுகளின் ஊடே பாய்ந்து ஓடுகிறது என்றும், தாமிரத்தின் நிறம் பெற்ற இலைகளிலிருந்து வரும் ஆறு என்றும் கூறுவன. எனினும் தமிழகத்தில் மூலிகைகளின் மருத்துவக் குணம் கொண்டு எப்பொழுதும் தண்ணீரோடு, வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி ஒன்றுதான்.

பொருநை, தன் பொருநை, கண் பொருள் பொன்நிறத்துப்புனல் பெருகும் பொருநை தன் பொருத்தம், மகாநதி, தட்சிண கங்கை பொருநல் என்ற பெயர்களும் உண்டு. இவ்வாற்றின் மூலம் 2460 ஏரிகள், குளங்கள், 515 மைல் நீளமுள்ள 394 கால்வாய்கள், 3 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி (நீளம் 225 கி.மீ), 149 புனித குளியல் கட்டிடங்கள், 3 மாவட்டங்களில் நாளன்றுக்கு 60 லட்சம் மக்கள் தங்கள் தாகத்தைத் தணித்து கொள்கின்றனர். இதன் கிளை, துணை நதிகளாக காரையாறு, பேயாறு உள்ளன. சேர்வலாறு, பாம்பாறு, மணி முத்தாறு, வராக நதி, ராம நதி, கடனா நதி, கள்ளாறு, கருணையாறு, பேச்சியாறு, சிற்றாறு, குண்டாறு, ஐந்தருவியாறு, ஹனுமா நதி, கருப்பா நதி, அமுத கன்னியாறு ஆகியன தொடர்ச்சியாக அமைந்துள்ளன. எட்டு அணைக்கட்டுக்கள் இதன் வழியே அமைந்துள்ளன. ஜூன் தொடக்கத்தில் மேலைக்காற்றும், தென் மேற்குப் பருவக்காற்றும் ஆரம்பிக்கிறது. ஜூன் 15க்குப் பிறகு முதல் வெள்ளம், இருமுறை தண்ணீர் கரைபுரண்டோடி முழு வெள்ளத்துடன் செழிப்பு வண்டல் மண் சமவெளியில் பாய்ந்தோட வேண்டும். ஆனால் இன்று இதில் நிறைய மாற்றங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், அதிபயங்கரமான மணல் கொள்ளை ஆகியவற்றால் இன்று தாமிரபரணி ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என விரைகிறது.
தாமிரபரணி தண்ணீரை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் பிசானம், கார், அட்வான்ஸ் கார் என மூன்று போகத்திற்கு தண்ணீர் வரத்து இருந்தது என சொல்லுகிறார்கள். ஆனல் இன்று சிப்காட், ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளின் தேவைகளுக்காக ஆண்டு முழுவதும் நீர் பாய்ச்சப்படுகிறது. பிசானம் பருவ விவசாயத்திற்கு மட்டும் தாமிரபரணி நீர் கிடைக்கிறது. ஆலைகளுக்கே முதலிடம். விவசாயத்திற்கு அல்ல. தாமிரபரணி கடலில் கலக்கும் மன்னார் வளைகுடாவை யுனெஸ்கோ கடல்வாழ் உயிரினங்களுக்கான பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தாரங்கதாரா கெமிக்கல்ஸ் பல ஆண்டுகளாக பாதரசம் உள்ளிட்ட மாசுக்களை தாமிரபரணி முகத்துவாரத்தில் கலக்க விடுகிறது.

தாமிரபரணி நதிக்கரையில் இரு உலக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் எச்சங்கள் உள்ளன. ஒன்று ஆதிச்சநல்லூர். மற்றொன்று கொற்கை. ஆதிச்சநல்லூர் மூதமிழர்களின் வாழ்விடமாக (Proto Tamil) அறியப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்துக்கு இணையான நகரங்களும் தொன்மையும் நிறைந்த இடமாக ஆதிச்சநல்லூர் கருதப்படுகிறது. எனினும் இன்னும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது இந்திய வரலாறே மாற்றம் பெறும் வகையில் ஆதிச்சநல்லூர் செயல்படும்.

கொற்கை தமிழர்களின் மிகத்தொன்மையான துறைமுகம். இது சங்ககால துறைமுகப் பட்டினமாகவும், பாண்டியர்களின் தலைநகராக இருந்துள்ளது. சங்கு குளித்தல், சங்¢கு அறுத்தல், முத்துக் குளித்தல் ஆகிய தொழில்களால் உலகப் புகழ் பெற்றிருந்தது. கோநகர் கொற்கை முத்து சிந்துவெளி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி என்பது வெறும் நதியல்ல, அது உலகப் பாரம்பரிய சின்னம். தாமிரபரணி தண்ணீரை குடித்து, கூடு கட்டி, குஞ்சுகள் பொரித்து, உயிர் வாழ்வதற்காக உலகெங்கிலுமிருந்து பறவைகள் கூந்தன்குளத்திற்கு வருகின்றன. பத்தமடை பாய்கள், திருநெல்வேலி அல்வா போன்ற அனைத்து பண்பாட்டு அடையாளங்களாகவும் விளங்குகிறது தாமிரபரணி. அத்தகைய அற்புத நீரை உருவாக்கி வழங்குகிறது பொதிகை மலை. காடுகள் என்பது கற்பனையான நிலப்பரப்பல்ல, அது நேரடியாக ஒவ்வொரு நிமிடமும் நம்மை பாதிக்கிற பொதிகை என்றும் அற்புதம்.
இவ்வளவு தொன்மைகளையும், அதிசயங்களை யும் உடைய பொதிகை இன்று எப்படி உள்ளது. இந்த ஹாட்ஸ்பாட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். மற்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதிகளைவிட இது இன்றும் அழியாமல் இருப்பதற்கு இங்கு பாதைகள் போடப்படாததுதான் காரணம். 2003ல் இக்காட்டின் வழியே பாதை போடப்பட வேண்டும் என்ற திட்டம் மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இத்திட்டம் ஒருபோதும் வரக்கூடாது என்பதே நம் விருப்பம். மே மாதம் முதல் வாரத்தில் மட்டும் ஐந்தலைப் பொதிகையில் உள்ள அகத்தியரை வழிபட 2000க்கும் அதிகமான பக்தர்கள் சென்று வந்தனர். இப்பொழுது அதற்குத் தடை உள்ளது. ஆடி அமாவாசை சொரி முத்தைய்யனார் கோவிலுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து தங்குவது வழக்கம். இவை இரண்டுமே பெரிய சுற்றுச்சூழல் சேதங்களை ஏற்படுத்தக்கூடியவை. வனத்துறையினரால் சிறப்பாக செயல் திட்டங்கள் தீட்டி இவற்றை நேர் செய்ய முடியும். மக்களும் இவ்வியற்கையை வழிபட்டாலே போதும். சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடாது என்ற மனோபாவத்தையும் வேண்டும்.

இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக அதிக மழை, அதாவது 4,300 மில்லி மீட்டர் மழை இங்கு பெய்து வந்தது. காலநிலை மாற்றத்தால் இது குறைந்திருக்கக்கூடும். மத்திய அரசு இதனை அகத்திய தேசியப் பூங்காவாக அறிவித்தது. வன உயிரினப் பாதுகாப்பு சட்டம், 1970 வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, 2005 பல்லுயிர் பாதுகாப்பு மசோதா, 2006 வன உரிமைச் சட்டம். இவ்வளவு சட்டங்களோடு ஹாட் ஸ்பாட் என்னும் தகுதியோடு பொதிகை இருந்து வந்தாலும், வனம் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. முன்பு இஞ்சிக்குழியில் நிறைய காணி மக்களின் குடியிருப்புகள் இருந்து வந்தன. களக்காடு&முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் பேரில் ஆதிவாசி மக்கள் காடுகளில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டனர். காடுகளையும், பழங்குடி மக்களையும் பற்றிய தவறான பார்வைதான் இது. பழங்குடி மக்கள் காடுகளைப் பாதுகாப்பார்கள். அவர்களுடைய பாரம்பரிய மருத்துவ, கானக அறிவை யாரும் நம்பத் தயாரில்லை. இன்னும் சொல்லப்போனால் பொதிகை மலையின் பாதைகளையும், தட்பவெப்ப நிலையையும் அறிந்தவர்கள் காணிக்காரர்கள் மட்டுமே. பொதிகைத் தாவரங்களின் மருத்துவ குணங்களை அறிந்தவர்கள் அவர்கள் மட்டுமே.

பொதிகை மலை முழுவதுமே சித்தர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. சித்தர்கள் மூலிகைகள் குறித்த மிக ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தனர். இன்றும் பொதிகை மலை அதனுடைய மருத்துவ மூலிகைகளுக்காகவே போற்றப்படுகிறது. பொதிகை மலைக்குள் மட்டுமே 11 விதமான மழைக்காடுகள் இருக்கின்றன. வாழை வகைகளில் மட்டுமே 26 விதங்கள் உள்ளன என்று சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 10 வருடத்திற்கு ஒரு முறை காய்க்கும் கல்வாழை இன்றும் பொதிகையில் உள்ளது. 10 மாதங்களுக்குள் காய்க்கும் வாழைக்கு நாம் வந்துவிட்டோம். குங்கிலியம் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. குழவு என்ற மரவகை இங்கு உள்ளது, இதைக் கீறிவிட்டால் ஒரு குடத்திற்கு எண்ணெய் கிடைக்கும், இதைப் பாதுகாப்பது நம் கடமை. அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் கல்தாமரை பொதிகை மலையில் அதிகமாகக் காணக் கிடைக்கிறது. பெட்ரோல் காய் எனப்படும் அகழிக்காய் இங்கு காணப்படுகிறது.

தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய சிகரமாக விளங்கும் பொதிகையில் இன்று எல்லோருடைய கவனத்தைக் கவர்ந்து காடுகளின் தலையாய அடையாளமாக விளங்கும் ‘புலி’ அதிகமாகவே உள்ளது. இந்தியாவின் காரையாறு, 17வது புலிகள் சரணாலயம் இஞ்சிக்குழி பூங்குளம், நாகப்பொதிகை, ஐந்தலைப் பொதிகை வழியாக நாம் பயணிக்கும்போது எண்ணற்ற ஆறுகள் மலையின் வழியாக ஓடுவதையும் நாம் காணலாம். பாம்பாறு, பேயாறு, கல்லாறு, சேர்வலாறு, மயிலாறு இன்னும் எத்தனையோ சிற்றாறுகள். கிழக்கே பாயும் தாமிரபரணியைப் போல கேரளாவில் மேற்கே பாயும் தாமிரபரணியும் இங்கு உண்டு. இது களியக்காவிளைக்கும், மார்த்தாண்டத்திற்கும் நடுவே ஓடுகிறது. 800 வகையான உயிரினங்கள் இங்கு உள்ளன. புலி, யானை, கரடி ஆகியவற்றை நாம் சாதாரணமாகப் பார்க்க முடியும்.

தமிழ்நாட்டில் காணப்படும் 5,640 அதிகமான தாவரங்களில், 2,254 தாவரங்கள் பொதிகையில் காணப்படுகின்றன. அழிந்து வரும் தாவரங்களில் 533ல், 448 தாவரங்கள் பொதிகை மலையில் காணப்படுகின்றன. அதாவது மாபெரும் அபாயத்தில் உள்ள 230 தாவரங்களில் 58 இங்கு உள்ளன. மருத்துவக் குணம் கொண்ட 1,761 தாவரங்களில் 601 இங்கு உள்ளன. பாலூட்டிகளில் அழிந்து வரும் இனத்தில் 17 வகையும், பறவைகளில் 140, ஊர்வனவற்றில் 39ம், நீர்நிலவாழ்வில் ambibians 27ம் pisces 9 இங்கு காணப்படுகின்றன. அரிதான பறவைகளான பஞ்சவர்ணப் புறா (emerald dove) இருவாச்சி அல்லது மலைமொங்கானை (Horn bill) இங்கே பார்க்க முடியும். தமிழ் தேசிய விலங்கான வரையாடுகளும் இங்கு அதிகமாக உள்ளது. சிறுத்தை, சிறுத்தைப் பூனைகளையும் பொதிகை மலையில் நாம் பார்க்க முடியும்.
பொதிகை மலைப் பயணம் என்பது சாதாரணமான ஒன்று அல்ல. வாகனங்கள் செல்ல முடியாத பாதை, நடப்பதற்கும் மிகக்கடினமான ஒன்று. கன்னிகட், துலுக்கமொட்டை, தவிலடிச்சாடின் பாறை, பாண்டியன் கோட்டை என்று காணிக்காரர்கள் ஒவ்வொன்றாக விவரிக்கும்போது நாம் இயற்கையின் சங்கமமாக மெல்ல மாறிக் கொண்டிருப்பதை உணர முடியும். நாம் எதைத் தேடிப் பொதிகைக்கு பயணம் செய்கிறோம்? பல்லுயிர்ப் பெருக்கத்தின் வளங்களைப் பார்க்கவா, 100 அடிகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் மரங்களைப் பார்க்கவா, மிருகங்களைப் பார்க்கவா, தாவரங்களைப் பார்க்கவா, அருவிகளைப் பார்க்கவா, மலையுச்சியிலிருந்து தெரியும் நமது ஊரை பார்க்கவா? காட்டின் ஒவ்வொரு வளைவிலும் நாம் நம்மையே பார்க்கிறோம். நாம் பெரிதாக மதிக்கும் வாழ்வின் தத்துவங்களும், லட்சியங்களும், பேராசைகளும், ஒவ்வொரு சிகரங்களில் ஏறும்போது தகர்த்துவிடுகின்றன. மலையுச்சியில் நாம் பறவையின் காட்சியையும், இறுதியாக பறவை மனதையும் அடைகிறோம். அதுவரை வாழ்ந்த வாழ்வில் ஒவ்வொரு இலையும், மலர்களும் நம்மைக் கேள்வி கேட்கிறன.

இயற்கையின் முன் ஏதுமற்றுப் போகிறோம். கடினமான பளுவோடு சிரமத்தோடு ஏறிச்சென்ற நம் மனது பறவையாகி மாறி, லேசாகி பறந்து, மிதந்து மீண்டும் நிலப்பரப்பிற்கு வருகிறோம். கீழேயிருந்து பொதிகையைப் பார்க்கும்போது, இலைகளாலும், மரங்களாலும் பொதிகை தன் ரகசியங்களை மூடிக்கொள்கிறது. இறுதியில் நாம் கற்றுக்கொண்டது ஏதுமில்லை, இயற்கையின் லயத்தையும், அன்பையும் தவிர.

(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)

விவரங்கள்
எழுத்தாளர்: ஆர். ஆர்.சீனிவாசன்
தாய்ப் பிரிவு: சுற்றுலா
பிரிவு: தமிழ்நாடு
வெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2012

Saturday 20 December 2014

நெல்லை மாவட்டத்தில் நாளை 70 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர் கண்காணிக்க 21 பறக்கும் படைகள்

பதிவு செய்த நேரம்:2014-12-20 09:56:50

நெல்லை,: நெல்லை மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) நடக்கும் குரூப் 4 தேர்வை 69 ஆயிரத்து 792 பேர் எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, வள்ளியூர், வீ.கே.புதூர் ஆகிய 12 இடங்களில் 228 மையங்களில் குரூப் 4 தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வை 69 ஆயிரத்து 792 பேர் எழுதுகின்றனர்.
நெல்லையில் 25 மையங்களில் 6 ஆயிரத்து 494 பேரும், ஆலங்குளத்தில் 11 மையங்களில் 3 ஆயிரத்து 31 பேரும், அம்பையில் 30 மையங்களில் 7 ஆயிரத்து 439 பேரும், நாங்குநேரியில் 5 மையங்களில் 1,221 பேரும், பாளையங்கோட்டையில் 58 மையங்களில் 17 ஆயிரத்து 291 பேரும், ராதாபுரத்தில் 4 மையங்களில் 895 பேரும், சங்கரன்கோவிலில் 46 மையங்களில் 10 ஆயிரத்து 331 பேரும், செங்கோட்டையில் 14 மையங்களில் 2 ஆயிரத்து 915 பேரும், சிவகிரியில் 18 மையங்களில் 4 ஆயிரத்து 572 பேரும், தென்காசியில் 42 மையங்களில் 10 ஆயிரத்து 519 பேரும், வள்ளியூரில் 11 மையங்களில் 2 ஆயிரத்து 853 பேரும், வீ.கே.புதூரில் 10 மையங்களில் 2 ஆயிரத்து 229 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வுக் கூட முதன்மை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர்கள் தலைமையில் 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர தாசில்தார்கள், பிடிஒக்கள், துணை தாசில்தார்கள் நிலையில் 56 சுற்றுக்குழுக்களும், துணை பிடிஒக்கள், உதவியாளர்கள் நிலையில் 274 ஆய்வுப் பணி அலுவலர்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அனைத்திலும் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சீனிவாசன், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் சிவாஜி, சண்முகம், பிரேம் மனோகர் வில்லியம்ஸ், உதவி பிரிவு அலுவலர்கள் பெருமாள், பால தண்டாயுதம், சத்தியராஜ் மற்றும வருவாய் துறை, போக்குவரத்து துறை, கருவூலத் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Thursday 18 December 2014

திருமலைக்கோவில்-வீ.கே.புதூர்-நெல்லை வழித்தடத்தில் பஸ் தொடக்க விழா


செவ்வாய் 16, டிசம்பர் 2014 4:52:02 PM (IST)
திருமலைக்கோவிலில் இருந்து பண்பொழி, கம்பிளி, விந்தன்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, வீ.கே.புதூர், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்ல புதிய வழித்தடத்தில் (தடம் எண்.101) அரசு பஸ் தொடக்க விழா சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட அதிமுக துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சண்முக சுந்தரம், எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் கரையாளனூர் சண்முகவேலு, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் பண்டாரம் வரவேற்றார். அமைச்சர் செந்தூர்பாண்டியன் புதிய வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் யூனியன் தலைவர்கள் செல்லம்மாள் பால்ராஜா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், சுப்பிரமணியன், மேலபாட்டாகுறிச்சி ஊராட்சி தலைவர் பண்டாரிநாதன், மாநில போக்குவரத்து துணை செயலாளர் கந்தசாமிபாண்டியன், மண்டல தலைவர் இளவரசு, துணைசெயலாளர் குத்தாலிங்கம், அமைப்பாளர் வேல்முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.