Sunday 22 July 2018

தோரணமலை


தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இந்த மலை யானையைப் போன்று காட்சியளிப்பதால், 'வாரண மலை' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரணமலை என்று மாறியது. இந்த மலையில் அருளாட்சி செய்கிறார் அழகு முருகன். மேலும், அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்த மலை இது என்பதால், இந்த மலையில் பல்வேறு அபூர்வ மூலிகைகள் இருந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


தோரணமலை


மலையின் கீழிருந்து 926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். சிவனாரின் கட்டளைப்படி தென்பாரதம் வந்த அகத்தியர், பொதிகை மலைக்குச் செல்லும்வழியில், இந்த மலையின் அழகில் லயித்து, சில காலம் இங்கே தங்கியிருந்தார். சுமார் 4,000 மூலிகைகள் வரை இங்கிருந்த காரணத்தினால், அகத்தியர் இங்கே தங்கியிருந்து மருத்துவச்சாலை ஏற்படுத்தி பலருக்கும் வைத்தியம் செய்ததாகச் சான்றுகள் உள்ளன என்கிறார்கள். இங்கு தங்கியிருந்த அகத்தியரும் அவருடைய சீடரான தேரையரும் பல மருத்துவ நூல்களை இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. தோரணமலையெங்கும் பல குழிகள் காணப்படுவதை இன்றும் காணலாம். அவை சித்தர்கள் இங்கு மருந்துகள் தயாரிக்க உதவிய குழிகள்தான் என்கிறார்கள். அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்ற பிறகும்கூட இந்த மலை பல சித்தர்களின் ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
சித்தர்கள் வாழ்ந்த பகுதியானதால் சில காலம் வரை இந்த மலைக்கோயிலில் வழிபாடு இல்லாமலிருந்தது. பின்னர் காலம் கனிந்ததும் மீண்டும் முருகப்பெருமான் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார். தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் தோரணமலையில்தான் என்று நூல்குறிப்புகள் பலவும் கூறுகின்றன. இன்றைக்கும் சித்தர்கள் பலர் அருவமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை தோரணமலை.


இந்த மலை பார்ப்பதற்கு தனியே தோரணம் கட்டியதுபோலவும், மாபெரும் பாறையை தொப்பியாக்கி அணிவித்தது போலவும் இருக்கும். நாம் பார்க்கும் அந்த மலையில் ஒரு கபால அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதுதான் உலகிலேயே நடந்த முதல் அறுவை சிகிச்சையாகும். அகத்தியர் தலைமையில் தேரையர் உட்பட பல்வேறு சித்தர்கள் அமர்ந்து அந்த சிகிச்சையை நடத்தியுள்ளனர். தேரையர், புலத்தியர் இருவருமே அகத்தியரின் சீடர்களாவர். அகத்தியரோடு இணைத்துத்தான் தேரையரின் வரலாறும் கூறப்படுகிறது.

தலையைப் பிளந்து அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தேரையருக்கு என்ன பெயர் இருந்ததோ? ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார்.

அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார். குருவின் இந்த அற்புதமான விளக்கத்தைக் கேட்ட தேரையர், அவரிடம் மிகுந்த நேசம் கொண்டார். அந்நேரத்தில் அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார். இந்த சமயத்தில், காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது. அவன், அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்தான்.பெருமானே! என்னை தாங்க முடியாத தலைவலி ஆட்டிப்படைக்கிறது.

ராஜாங்க விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தாங்கள் நினைத்தால், இதை நொடியில் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காப்பாற்ற வேண்டும், என வேண்டி அவரது பாதத்தில் விழுந்தான்.அரசன் மீது அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். அவனை பரிசோதித்தார். தலைவலிக்கான காரணம் தெரிந்து விட்டது. அவனிடம் சொல்ல யோசித்தார். மன்னா! நீ அரண்மனைக்குச் செல். நாளை இந்த வியாதியை தீர்த்து விட ஏற்பாடு செய்கிறேன், என்றார்.சுவாமி! இந்த வலிக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சொல்லி அருளுங்களேன் என்றான் மன்னன்.அது உனக்கெதற்கு? வியாதியஸ்தனுக்கு மருந்தும் சுகமும் தானே தேவை. நீ புறப்படு, என்றவரிடம், மன்னன் மிகவும் பணிவுடன் கேட்டான். மன்னா! சொல்ல வேண்டாம் என நினைத்தேன். சொல்ல வைத்து விட்டாய். உன் தலைக்குள் தேரை ஒன்று இருக்கிறது, என்றார். தேரை என்பது தவளை வகையில் ஒன்று. தேரையா! அதெப்படி தலைக்குள் நுழைய முடியும், என்று மன்னன் கேட்கவே, நீ தூங்கும்போது, உன் மூக்கின் வழியாக குஞ்சு ஒன்று நுழைந்திருக்க வேண்டும். அது தலையை இப்போது அடைந்ததால், வலி வந்திருக்கிறது, என்றதும், மன்னன் அதிர்ந்தான். சுவாமி! என்னால் நம்பவே முடிய வில்லையே. இப்படி ஒரு கொடிய நிலைமையா எனக்கு? தலைக்குள் இருக்கும் தேரையை எப்படி வெளிக்கொண்டு வர முடியும்? என்று பதட்டப்பட்டு கேட்ட மன்னனிடம், பயப்படாதே. நாளை உனக்கு கபால சிகிச்சை செய்யப் போகிறேன். உன் தலையைப் பிளந்து, உள்ளிருக்கும் தேரையை எடுக்க முயற்சிக்கிறேன், என்ற தேரையரை இடைமறித்த அரசன், ஐயோ சுவாமி! தலையை உடைத்த பின் எப்படி என் உடலில் உயிர் தங்கும்? என உடல் வெடவெடக்க கேட்டான்.

அகத்தியர் அவனைத் தைரியப் படுத்தினார். மன்னா! தலையைப் பிளக்கவும், அதை மூடவும் என்னிடம் மூலிகைகள் உள்ளன. இதனால் உனக்கு வலி தெரியாது. மேலும், சில மூலிகைகளைக் கொடுத்து உன்னை மயக்கமடையச் செய்து விடுவேன். என்ன நடக்கிறது என்பதை நீ அறியமாட்டாய். என்னிடம் வைத்தியம் பார்க்க வந்த எவரும் இதுவரை குணமாகாமல் திரும்பியதில்லை, என்றார். அகத்தியரின் தெய்வசக்தியை மன்னனும் அறிவான். எனவே, அவன் சிகிச்சைக்கு சம்மதித்தான். அகத்தியர் மன்னனின் மூக்கருகே ஏதோ ஒரு மூலிகையை நீட்டினார். அதன் வாசனைபட்டதுமே, மன்னன் படிப்படியாக மயக்கநிலையில் ஆழ்ந்தான். ஏதோ ஒரு மூலிகையை எடுத்து அரைத்து மன்னனின் தலையில் தடவிய அகத்தியர், அவனது தலையின் ஒரு பகுதியை பவ்யமாக உடைத்து திறந்தார். என்ன அதிசயம்! மன்னனின் மூளையில் ஒரு தேரை (தவளை) உட்கார்ந்திருந்தது. அது மிரள மிரள விழித்தது. இதை எப்படி வெளியேற்றுவது...கை படக்கூடாது. ஏதாவது குச்சியால் தட்டினால் அது ஏதாவது ஒரு இடத்தில் போய் பதுங்கிக் கொண்டால், பின்னர் மன்னனின் உயிருக்கு ஆபத்தாகி விடும்! வைத்திய மாமேதையான அகத்தியரே கலங்கி விட்டார். இந்த சமயத்தில், அருகில் நின்ற தேரையர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். மன்னன் தலையருகே வைத்து, கைகளை தண்ணீருக்குள் விட்டு அளைந்தார். தண்ணீரின் சல சல சத்தம் கேட்ட தேரை தலையில் இருந்து குதித்து தண்ணீருக்குள் விழுந்து விட்டது. உடனே பாத்திரத்தை அங்கிருந்து அகற்றி விட்டார் தேரையர். தன் சிஷ்யனின் அபார அறிவு திறனை அகத்தியர் பாராட்டினார். தேரையா! தன்னைச் சார்ந்தவனுக்கு இக்கட்டான நிலையில் கை கொடுப்பவனே உலகில் உயர்ந்தவன். நீ செய்த காரியத்தால், என் மானமும், மன்னனின் உயிரும்காப்பாற்றப்பட்டன. என் மருந்துப்பெட்டி யிலுள்ள சந்தானகரணி மூலிகையை எடு, என்றார். சந்தானகரணியை எடுத்த தேரையர், குருவே! இதன் குணம் என்ன? என்றார். உடைந்த தலையை ஒட்டவைக்கும் அரியவகை மூலிகை இது, என்ற அகத்தியர் அதன் சாறைப் பிழிந்து தலையில் ஊற்றினார். சிறிது நேரத்திலேயே தலை ஒட்டிக்கொண்டது.

அகத்தியரே இந்த சிகிச்சையை செய்தார் என்றாலும் கூட, தேரை வெளியேற தேரையரே காரணமானார். தேரையுடன் சம்பந்தப்பட்டவர் என்பதால் தான் இவருக்கு தேரையர் என்ற பெயரே ஏற்பட்டது. இன்னொரு சமயத்திலும் அகத்தியருக்கு பெரும் உதவி செய்தார் தேரையர். அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.

ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார். அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன். நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம். மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார்.

குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்... தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா... தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய்யுமளவுக்கு தகுதி பெற்று விட்டாய். அதனாலேயே உன்னை வெளியே அனுப்புகிறேன். கடந்த வாரத்தில், உன் கைங்கர்யத்தால் காட்டில் இருக்கும் முனிவர் ஒருவரின் வயிற்று வலி நீங்கியது! என்றார். ஆம்...மன்னனுக்கு கூன் நிமிர்ந்த பிறகு, தீராத வயிற்றுவலி இருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு முனிவர் அகத்தியரிடம் மருந்து வாங்க வந்தார். அதி அற்புதமான திரவ மருந்தொன்றை அவருக்கு கொடுத்த அகத்தியர், பத்திய முறைகளின் படி இதைச் குடித்து வர, வலி பறந்தோடி விடும் என சொல்லி விட்டார். அகத்தியரின் மருந்துக்கு மறுமருந்து உண்டா? முனிவரும், அதை குடித்தார். உஹும்...வலி தீரவில்லை.இரண்டு நாள் கழித்து முனிவர், தன் சீடன் ஒருவனை அகத்தியரிடம் அனுப்பினார். அவன் அகத்தியரிடம் வந்து, அகத்திய சித்தரே! தங்கள் மருந்தாலேயே எங்கள் குருவின் வியாதியைக் குணப்படுத்த முடியவில்லை என்றால், இனி யாரால் மருந்து தர இயலும்? குரு வயிற்றுவலி தாளாமல், இன்னும் பிதற்றிக் கொண்டிருக்கிறார், என்றான். அகத்தியருக்கு ஆச்சரியம். சரியான மருந்தைத் தானே கொடுத்தேன். சரி.. சரி... உன்னோடு, தேரையனை அழைத்துச் செல். அவன் என்ன ஏதென்று பார்ப்பான், எனச்சொல்லி தேரையரை அனுப்பி வைத்தார். தேரையர் அங்கு சென்று முனிவரைச் சோதித்தார். கொருக்கை என சொல்லப்படும் குச்சியை எடுத்தார். அந்தக் குச்சியின் நடுவில் துவாரம் இருக்கும். அதாவது, இப்போது நாம் குளிர்பானம் குடிக்கப் பயன்படுத்தும் ஸ்டிரா போல! அதன் மூலமாக, அகத்தியர் கொடுத்த அதே மருந்தை உறிஞ்சி குடிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்! வலி உடனே பறந்து விட்டது.

தேரையர் மகிழ்ச்சியுடன் ஆஸ்ரமத்துக்கு வந்து, அகத்தியரிடம் நடந்ததைச் சொன்னார். அகத்தியர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் பெயரைக் காப்பாற்றினாய், என்று சொல்லி பாராட்டினார். இப்படி அகத்தியர் பல மருந்துகளைக் கண்டுபிடிக்க, அதைப் பயன்படுத்தும் வித்தையை தேரையர் பல்வேறு விதங்களில் கையாள...பல நோயாளிகள் பயன் பெற்றனர். இந்தக் காரணத்தாலேயே அகத்தியர், தேரையரை வெளியில் அனுப்ப உத்தேசித்தார். இந்தக் காலத்தில் தொழில் தெரிந்த ஒருவர், தன்னைப் போலவே ஒருவர் அதே தொழிலைச் செய்ய முற்படுகிறார் என்றால், அவரை எப்படி கவிழ்க்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்து விடுவார். ஆனால், மகான்கள் பிறர் நன்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.குருவின் கட்டளையை ஏற்று தேரையரும் கிளம்பி விட்டார். அகத்தியர் இருந்த இடத்தை விட்டு வெகு தொலைவிலுள்ள காட்டுக்குச் சென்றார். அங்கு பல முனிவர்களுக்கு வைத்தியம் செய்து அவர்களின் பிணி நீக்கினார். இந்நிலையில், பாண்டியநாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தங்களுக்கு தங்கம் கிடைத்தால், அதை வேற்று நாட்டவரிடம் விற்று, உணவுப் பொருள் வாங்கிக் கொள்வதாக மக்கள் தேரையரைச் சந்தித்துக் கூறினார்.தேரையரும் தங்கம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் அமைத்த பட்டறைகளில் இருந்து எழுந்த புகை, அப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களுக்கு இடைஞ்சலைக் கொடுத்தது. அவர்களில் சிலர், அகத்தியரிடம் வந்து, உங்கள் சீடன் செய்த காரியத்தால், எங்கள் தியானம் கலைந்தது என புகார் செய்தனர். அகத்தியருக்கு கடும் கோபம். தேரையரை வரவழைத்தார். அவரிடம் பேசக்கூட இல்லை. இரண்டாக அவரைக் கிழித்தார். தேரையரின் உயிர் பறந்து விட்டது. தேரையர் தன் சீடர்களுக்கு முன்கூட்டியே, இப்படி ஒரு நிலை வந்தால், உடலை ஒட்ட வைத்து மீண்டும் உயிரூட்டும் கலையைச் சொல்லிக் கொடுத்திருந்தார். அதைப் பயன்படுத்தி தேரையரை உயிர் பெறச் செய்து விட்டனர் சீடர்கள். அதன்பின் அகத்தியருக்கு பயந்து தலைமறைவாக இருந்தார் தேரையர். சீடனின் திறமையையும், சமயோசிதத்தையும் கேள்விப் பட்டு மகிழ்ந்தார். ஆண்டுகள் ஓடின. அகத்தியருக்கு பார்வைக் குறைவு ஏற்பட்டது. அவர் சீடர்களை அழைத்து, தேரையனை மருந்துடன் வரச்சொல்லுங்கள். அவன் வந்தால் தான் எனக்கு கண் குணமாகும், என்றார். சீடர்களும் பல மைல் தூரம் சென்று, தேரையரை அழைத்து வந்தனர். தேரையர் தன் குருநாதரின் கண்களில், ஒரு மூலிகையைப் பிழிந்து விட, கண் முன்பை விட தெளிவாகத் தெரிந்தது. தன் சீடனை அப்படியே அணைத்துக் கொண்டார் அகத்தியர். தேரையா! நீ முன்னிலும் தேறி விட்டாய். உன்னை நான் கொன்றும் கூட, புத்திசாலித் தனத்தால் உயிர் பெற்றாய். என்னை பழி வாங்க எண்ணாமல், தக்க வைத்தியம் செய்தாய். உயிர் போகும் அளவிலான துன்பம் செய்தவர்களுக்கும் கூட நன்மை செய்பவனே உலகில் உயர்ந்தவன். அத்தகைய நற்குணத்தை நீ பெற்றுள்ளாய். நீ கண்டுபிடித்த மருத்துவக்குறிப்புகள் வீண் போகக்கூடாது. அவற்றை ஒரு நூலாக எழுதி வை. எதிர்கால வைத்தியர்கள் உன்னை தலைதலைமுறையாக வாழ்த்துவர், என்றார்.தேரையரும், 21 நூல்களை எழுதினார். பலகாலம் வாழ்ந்த அவர், முன்பு கேரளத்தில் இருந்ததும், தற்போது தமிழகத்தில் தென்காசி அருகில் உள்ளதுமான தோரணமலையில் சமாதியானதாக ஒரு குறிப்பு கூறுகிறது.

Saturday 14 July 2018

தேடிவந்து அருள்பாலிக்கும் தேவி -அழகு பார்வதி அம்மன்


குற்றால மலையில் இருந்து ஓடி வரும் சிற்றாறும், சொக்கம்பட்டி வழியாக ஓடி வரும் கருப்ப நதியும் சங்கமிக்கும் அற்புத பூமி, சுரண்டை. இங்கு விவசாய விளைச்சலுக்குப் பஞ்சமில்லை; பக்தி விளைச்சலுக்கும் குறைவில்லை. சுரண்டை ஜமீன்தார்கள் கோயில் கட்ட இடம்கொடுத்தனர். மண்டகப்படி திருவிழாவை ஏற்படுத்தினர். கஷ்டம் பல வந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில் தங்களால் பலமுறை கப்பம் கட்ட முடியாமல் தங்கள் ஜமீன் ஏலத்துக்கு சென்றபோதும் தாங்கள் உருவாக்கிய கோயில்களை மறக்கவில்லை. தாங்கள் செய்யும் பணிவிடைகளை இன்றளவும் அவர்களுடைய வாரிசுகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
தென்னகத்தில் உருவான 72 பாளையங்களுள் ஒன்று சுரண்டை. ஆங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கு பாளையத்தினை நாயக்கர்களும், மேற்கு பாளையத்தினை மறவர்களும் ஆண்டு வந்தனர். மறவர் ஜமீனில் சுரண்டை முக்கியமானதாக விளங்கியது.

இந்த ஜமீன்தார்கள் வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்குக் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாக செலுத்திவிட்டு, மீதி பணத்தினை வைத்து சுகபோகமாக வாழ்ந்தார்கள். இவர்களில் சிலர் கப்பம் கட்ட விரும்பாமல் ஆங்கிலேயருக்கு எதிராகக் கலகம் செய்தனர். இதனால் பல ஜமீனை ஏலத்துக்கு விட்டனர் ஆங்கிலேயர்கள். இந்தவகையில் நான்கு முறை கப்பம் கட்ட முடியாமல் சுரண்டை ஜமீன் ஏலத்துக்கு வந்துள்ளது. அந்த சமயத்தில், ஊத்து மலை ஜமீன்தார் இருதலாய மருத்தப்பர் தலையிட்டு ஜமீனை மீட்டுக் கொடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் சிவனு சாலுவ கட்டாரி பாண்டியன் என்பவர் அந்த ஜமீனை ஆண்டு வந்திருக்கிறார் என்று தெரிகிறது. இவர் ஆட்சியின்போதுதான் சுரண்டையில் அழகு பார்வதியம்மன் கோயிலில் திருவிழா உருவானது என்றும் கூறுகிறார்கள். இன்றைக்கும் 10 நாள் கொண்டாட்டமாக நடை பெறும் இந்தத் திருவிழாவின் முதல் மண்டகப் படியே ஜமீன் அரண்மனைக்குரியதுதான்.

கட்டாரி பாண்டியன், சீரோடும் சிறப்போடும் ஊத்துமலை ஜமீனுக்கு நிகரான செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்தார். எனவே இவருக்கு ஊத்துமலை ஜமீன்தாரின் சகோதரி இந்திர மருத நாச்சியாரை மணமுடித்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே கட்டாரி பாண்டியன் இறந்த பிறகு நாச்சியார் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு உதவியாக இருந்த தம்பி இந்திர தலைவன், நாச்சியாரின் காலத்துக்கு பிறகு பட்டத்துக்கு வந்தார். இவர் ஆட்சி காலத்திலும் சுரண்டை ஜமீன் ஏலத்துக்கு வந்துள்ளது. இவர்களின் அரண்மனை ஏலத்துக்கு வந்தபோது சுந்தரபாண்டியபுரத்தினை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்தார். அரண்மனை இருந்த இடத்தில் இப்போது கிராம மக்களின் வீடுகள் காணப்படுகின்றன. அரண்மனை இருந்ததற்கான சான்றாக கோட்டைத் தெரு மட்டும் உள்ளது. தற்போது ஜமீன் வாரிசுகள் வசிக்கும் இடம் ஒரு காலத்தில் விருந்தினர் மாளிகையாக இருந்துள்ளது.

மிக பிரமாண்டமான மூன்று மாடி கட்டிடம் அது. கலைநயம் மிக்கது. மூன்றாவது மாடியில் மணிப்பாரா உள்ளது. இந்த மணிப்பாரா, ஜமீன் ஆட்சி காலத்தில் காவலர்கள் கண்காணிப்புத் தளமாக இருந்தது. வாரிசுகள் இங்கு வசித்தபோது, பிரச்னைகள் பல ஏற்பட்டன. எனவே வாஸ்து சாஸ்திரப்படி முன்பக்கம் வாசல் சரியில்லை என்று அதை அடைத்து விட்டு பின்பக்க வாசலை பிரதான வாசலாகப் பயன்படுத்தி வருகிறார்கள். வராண்டாவில் ஊஞ்சல் ஆடுகிறது. அருகே ஜமீன்தார்கள் பயன்படுத்திய வேட்டை துப்பாக்கி சுவரில் மாட்டப்பட்டுள்ளது. மூன்று மாடி ஏறிப்போனால் மணிப்பாராவை எட்டலாம். இந்திர தலைவரின் மகன் தங்கராஜ்பாண்டியன், இவரை அடுத்து இவரது மனைவி அன்னபூரணி நாச்சியார் என்னும் கருத்த துரைச்சி - இவர்களுக்குப் பிறகு, மூத்த மகனான சிவஞானராஜா, தற்போதைய சுரண்டை ஜமீன்தாராக உள்ளார். இவருடைய மகன், எஸ்.கே.பி. ராஜா, கோயிலில் நடைபெறும் பரிவட்டம் உள்பட ஜமீன் மரியாதைகளை ஏற்று வருகிறார். சுமார் 120 வருடங்களுக்கு முன்பு நடந்த வரலாறு இது:

இருதாலய மருதப்பதேவர் ஊத்துமலை ஜமீனை ஆண்டு வந்தார். இவருடைய பெண்ணை மணந்து மருமகனானவர், சுரண்டை ஜமீன்தாரான கட்டாரி பாண்டியன். மருமகனுக்கு அனைத்து சீர்வரிசை, மாலை மரியாதை எல்லாமே திரு விழாக்களில் வழங்கப்படுவதை மாமனார் உறுதிசெய்தார். ஆனால், கட்டாரி பாண்டியன் வித்தியாசமானவர். தன்னைப் போலவே தனது நண்பர்களுக்கும் மதிப்பும், மரியாதையும் தரவேண்டும் என்ற எண்ணங்கொண்டவர். எனவே திருவிழாக்காலங்களில் சுரண்டையில் இருந்து அனைத்து சமுதாய மக்களையும் திரட்டிக்கொண்டு சென்று விடுவார். சபையில் தனக்கு தரும் சிறப்பு மரியாதைபோலவே, கொஞ்சமும் குறைவின்றி தன் நண்பர்களுக்கும் தரப்படவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். வீரகேரளம் புதூர் நவநீத கிருஷ்ணன் கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. சுரண்டை மக்களுக்கு வழங்கப்பட்ட உணவில் உப்பு இல்லை.

இதனால் அவர்கள் நல்ல உணவு வேண்டும் என்று கோர, அங்குள்ள ஊழியர்களுக்கும் சுரண்டைக்காரர் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊத்துமலை ஜமீன் ஊழியர்கள், அவர்களைப் பாதி சாப்பாட்டிலேயே வலுக்கட்டாயமாக எழுந்திருக்கச் செய்தனர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட சுரண்டை ஜமீன்தார் கோபமுற்று, தனது ஊர்க்காரர்களை அழைத்துக்கொண்டு பாதி திருவிழாவிலேயே ஊருக்கு திரும்பி விட்டார். தகவலறிந்த இருதாலய மருதப்பர் தனது மருமகனை எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். ஆனால், அவர் சமாதானமாகவில்லை. சுரண்டைக்கு வந்த ஜமீன்தார், பலமுறை ஏலத்துக்கு வந்த தன் ஜமீனைக் காப்பாற்றித் தந்தது இருதாலய மருதப்பர்தான். என்றாலும், தனது ஊர்க்காரர்கள் மான மரியாதையை இழப்பது சரியா என்றெல்லாம் யோசித்தார். திருவிழாவை அந்தக் கோயிலில் நடத்துவதால்தானே தம் மக்கள் அங்கு செல்கிறார்கள், அதே திருவிழாவை நமது ஊரில் நடத்தினால் என்ன என்று சிந்தித்தார்.

ஒரு அம்மன் தமது முன்னோர்களிடம் இடம் கேட்டு அமர்ந்து ‘கேட்ட வரம் தரும் அம்ம’னாக சுரண்டையில் அருள்பாலிக்கும் வரலாறு அவருக்கு நினைவுக்கு வந்தது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுரண்டை பகுதியில் இலந்த குளம் கரையில் காளியம்மனை வைத்து வணங்கி வந்தனர். இங்கு வாழ்ந்த நாடார் சமுதாயத்தினர் இருவர் பொதி மாட்டில் பஞ்சு பொதியை ஏற்றிக்கொண்டு சிவகாசி பகுதிக்கு வியாபாரத்துக்கு சென்றனர். அங்கே வியாபாரத்தினை முடித்துவிட்டு ஒரு வேப்பமரத்தடியில் தங்கினர். அவர்கள் முன்பு சிறு பெண்ணாக தோன்றிய அம்மன், அவர்களிடம் உணவு கேட்டார். அவர்கள், “நாங்களோ வியாபாரிகள். இந்த இடத்தில் உணவு கேட்டால் எப்படி கிடைக்கும்? எங்கள் ஊருக்கு வந்தால் உணவு கொடுப்போம்” என்று கூறினர். “சரி, அப்போ ஊருக்கு வருகிறேன்” என்று அந்த பெண் சொன்னாள். அவர்களும், “உன்னால் நடந்து வரமுடிந்தால் வா” என்று கூறி விட்டுக் கிளம்பினர்.

சித்திரை மாதத்து வெயிலில் இருவரும் பொதி மாட்டுடன் சுரண்டைக்கு வந்தனர். பொதி மாட்டை காளியம்மன் கோயில் முன்பு கட்டினர். அப்போது தங்கள் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அந்த பெண் திடீரென மறைந்து விட்டாள்! திகைத்துப்போன வியாபாரிகள் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தனர். பிறகு, ‘பாவம், எங்கே போனாளோ’ என்று வருந்தியபடி தம் வீட்டிற்குச் சென்றனர். அந்த பெண்ணின் நினைவே சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு அயர்ச்சியில் தூங்கிவிட்டார்கள்.
அன்றிரவு ஒரேநேரத்தில் அந்த வியாபாரிகள் மற்றும் சுரண்டை ஜமீன்தார் கனவில், தோன்றினாள் அப்பெண். “நான்தான் அம்மன். இவ்வூர் மக்களை பாதுகாக்க நான் இங்கு உறைய விரும்புகிறேன். எனக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள்,’’ என்றாள். காலையில், கனவால் ஏற்பட்ட குழப்பத்துடன் ஜமீன்தார் நின்றிருந்தபோது வியாபாரிகள் இருவரும் ஓடோடி வந்தனர்.

அவரிடம் தாங்கள் ஒரு பெண்ணை சந்தித்த விவரத்தைச் சொன்ன அவர்கள், “எங்க கூடவே சின்னப் பொண்ணாட்டம் வந்த அம்மன், காளியம்மன் கோயில்கிட்டே நின்னுகிட்டு நிலையம் கேக்கா... அது ஜமீனுக்கு உள்பட்ட இடம். நீங்க அனுமதி கொடுத்தா அவளுக்கு அங்கே நிலையம் கொடுக்கலாம்,’’ என்றனர். இரவில் தன் கனவில் வந்த அதே பெண்ணைத்தான் இவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த ஜமீன்தார், அவள் நிச்சயம் விசேஷமான தெய்வம்தான் என்பதை உறுதிசெய்துகொண்டார். உடனே, இலந்த குளம் உள்பட 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை கோயிலுக்கு ஜமீன்தார் கொடுத்து விட்டார். அந்த இடத்தில் ஓர் ஓலைக் குடிசையில் அம்மனை பிரதிஷ்டை செய்தார்கள். அம்மன் சிறு பெண்ணாக, சிரித்தமுகத்துடன் வியாபாரிகளை சந்தித்ததாலும், அவளது சலங்கை சத்தம் இனிமையாக ஒலித்ததாலும் அவளுக்கு ‘அழகு பார்வதி அம்மன்’ என்று பெயர் வைத்தனர். காளியம்மன் திருக்கோயில் அருகேயே அழகு பார்வதி அம்மனும் நிலையம் கொண்டிருந்தாலும், இருவருமே காக்கும் தெய்வமானார்கள்.


நாளாக ஆக, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து, கேட்ட வரம் தந்த அந்த அம்மனை தரிசிக்கப் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்தனர்; இன்றும் வந்து கொண்டிருக்கிறார்கள். மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் கோயிலில் கொடைவிழா நடைபெறும். விழாவில் முதல் சுருளை ஜமீன்தார் கொடுப்பார். கோயிலை வணங்க வணங்க வியாபாரிகள் குடும்பத்தினர் தழைத்தோங்கினர். உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூருக்கும் சென்று பெரிய அளவில் முன்னேறினர். நாளாவட்டத்தில் ஓலைக் குடிசை, ஜமீன்தார் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் கைங்கரியத்தால் காரைக்கட்டிடம் ஆனது. ஊரிலுள்ள அனைத்து சமுதாயத்தினரும் வணங்கும் தெய்வமாக அழகு பார்வதி விளங்கினாள். ஊத்துமலை ஜமீனுக்குப் போவானேன், நம் ஜமீனிலுள்ள அழகு பார்வதி அம்மனுக்குத் திருவிழா நடத்தினால் என்ன என்று சுரண்டை ஜமீன்தாருக்குத் தோன்றியது. அதற்காக ஊர் மக்களை ஒன்று கூட்டினார்.

ஊத்துமலை திருவிழாவில் தன் கிராமத்தாருக்கு நேர்ந்த அவமரியாதை சுரண்டை ஜமீன்தாரை மனவருத்தமடையச் செய்தது. அங்குபோய் திருவிழாவில் பங்கேற்பானேன், நாமே நம் ஜமீனிலேயே அதை நடத்தி நம் மக்களை மகிழ்விப்போமே என்று கருதினார். ஊர் மக்களும் அவர் கருத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். ஊத்துமலை ஜமீனைப்போலவே தேர் மற்றும் தெப்பத் திருவிழாக்களை நடத்த தீர்மானித்தனர்.



உடனே உள்ளூர் தச்சர்களைக் கொண்டே தேரை உருவாக்கினர். இந்தப் பணியை அங்கீகரிக்கும் வகையில் திருவிழாவின் பத்தாம் நாள் மண்டகப்படியை, தேர் உருவாக்கிய அந்தக் கலைஞர்களுக்கு அளித்தார் சுரண்டை ஜமீன்தார். அன்றிலிருந்து இன்றுவரை 10ம் திருநாள் மண்டகப்படியை விஸ்வகர்ம சமூகத்தினர் சிறப்புடன் செய்து வருகிறார்கள். இந்த ஏற்பாட்டின்படி திருவிழாவின் 10ம் நாளில் சப்பரத்தில் அம்மன் வீதி உலா புறப்படுவார்.

தச்சர் பெருமக்கள் குடியிருக்கும் தெருவுக்கு செல்வார். அம்மனை அவர்கள் தங்களது வீட்டுக் குழந்தைபோலவே பாவித்து மாலை அணிவித்து குடும்பத்தோடு வணங்கி மகிழ்வர். அதன் பிறகே அம்மன் கோயிலுக்கு திரும்புவார். திருவிழாவின் முதல்நாள் மண்டகப்படி ஜமீந்தாரால் நடத்தப்படுகிறது. இதில் ஜமீனின் இளைய ராஜாவான எஸ்.கே.பி. ராஜாவுக்கு மாலை மரியாதை செய்து பரிவட்டம் கட்டி, முதல்மரியாதை செய்யப்படுகிறது. இரண்டாம் நாள் மண்டகப்படி, தேவர் சமுதாயத்துக்குரியது.

மூன்றாம் நாள் மண்டகப்படி, செட்டியார் மற்றும் பிள்ளைமார் சார்பில் நடத்தப்படுகிறது. நான்காம் நாள் மண்டகப்படி, நாடார் சமுதாயத்தினருக்குரியது. (சிவகாசியிலிருந்து வியாபாரத்துக்குச் சென்றபோது அழகு பார்வதி அம்மனை அழைத்து வந்தவர்கள் இவர்கள்தானே!) ஐந்தாவது நாள் மண்டகப்படி முதலியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது. ஆறாவது நாள், படையாச்சி சமுதாயத்தினரும், ஏழாவது நாள் கிளையில்லா தேவர் சமுதாயத்தினரும் மண்டகப்படியைத் திறம்பட நடத்தி வருகிறார்கள்.

எட்டாம் நாள் அனைத்து சமுதாயத்தினர் சார்பிலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பூப்பண்டார சமுதாயத்தினர் திரளாகக் கலந்துகொள்கிறார்கள். அப்போது வேண்டுதலை நிறைவேற்ற ஆயிரங்கண் பானை உருவம் மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபடுவர். நேர்ச்சை பொருட்களை கைகளில் வைத்து மார்போடு அணைத்தவாறு தங்கள் பிரச்னையை தீர்க்கக்கோரி அம்மனை மனமுருக வணங்குவர். அவர்கள் கேட்ட வரம் கிடைத்ததும், மறுவருடம் சந்தோஷமாக நன்றி செலுத்த வருவார்கள். அம்மனுக்கு பட்டு பரிவட்டங்களை காணிக்கையாக செலுத்தி மகிழ்வார்கள்.


ஒன்பதாவது நாள், தேரோட்டம். அம்மன் ஒய்யாரமாய் தேரில் எழுந்தருளி பவனி வருவார். திரளான பக்தர்கள் ஒருசேர தேர் இழுப்பார்கள். பத்தாவது நாள் ஜமீன்தார் உத்தரவுப்படி தச்சர்கள் தெருவில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளுவார். சுரண்டை ஊருக்குள் நுழையும் போது காணப்படும் பிரமாண்டமான வரவேற்பு வளைவு, அம்மனின் அருளாட்சியைப் பறைசாற்றுகிறது. கோயிலில் ஒய்யாரமாய் அழகு பார்வதி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

ஆதிகாலத்தில் இங்கு வீற்றிருந்த காளியம்மன் தற்போதும் தென்பகுதியில் அருள் வழங்குகிறார். இவருக்கு அசைவ படையல். ஆனால் அழகு பார்வதி அம்மனுக்கு எப்போதும் சைவப் படையல்தான். கோயிலுக்கு தெற்கு வாசலும் உண்டு. இங்கு பிள்ளையார், பாலமுருகன், காவல் தெய்வமாக கருப்பசாமி ஆகியோர் உள்ளனர். தேர்த் திருவிழா மட்டுமின்றி ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றன. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, விளக்கு பூஜை நடக்கிறது. இதில் சுரண்டை மட்டுமின்றி சுற்று வட்டார கிராம பெண்களும் பங்கேற்கிறார்கள்.

ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி. அன்று திருமணத்தடை நீங்கவும், குழந்தைவரம் வேண்டியும் பெண்கள் அம்மனை வழிபடுவர். அம்மன் அருளால் மறுவருடமே, தாம் கோரிய வரம் நிறைவேறி மகிழ்வர். சிவராத்திரியின்போது பத்து நாள் திருவிழா மற்றும் கந்த சஷ்டி திருவிழா ஆகியவையும் இங்கே சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் கார்த்திகை நட்சத்திர நாளிலும் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளுவார்.

இப்பகுதியில் மற்றொரு ஆலயமும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் ஒரு பின்னணி உண்டு. சுரண்டை ஜமீன்தார் ஏகோபித்த புகழுடன், வளத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் பெரும்படை வைத்திருந்தார். இந்தப் படை சிறப்பாக விளங்க, ராமநாதபுரத்திலிருந்து வந்த சிவனுபாண்டி, பரமசிவபாண்டி ஆகிய இரு படைவீரர்களே முக்கிய காரணம். எதிரிகளுக்கு இவர்களைக் கண்டாலேயே அடிவயிறு கலங்கும். இருவரும் பிரம்மசாரிகள். தங்களது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தனர். சுரண்டை ஜமீன்தாருக்கு மெய்க்காவலர்களாகத் திகழ்ந்தனர்.



அந்த காலத்தில் சுரண்டை ஜமீனுக்கும், நடுவக்குறிச்சி ஜமீனுக்கும் அடிக்கடி பகை மூண்டது. ஒவ்வொரு முறையும் தான் தோல்வியையே அடைவதைக் கண்டு மனம் வெறுத்த நடுவக்குறிச்சி ஜமீன்தார், சுரண்டை ஜமீன்தாரின் இரு மெய்க்காவலர்கள்தான் அந்தத் தோல்விகளுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களை எப்படியாவது கொன்றுவிட திட்டமிட்டார்.

ஒற்றர்கள் மூலம் அவர்களை அணுகி பணத்தாசை காட்டித் தம் பக்கம் இழுக்க முனைந்தார். ஆனால், சுரண்டை ஜமீன்தாருக்கே தாங்கள் விசுவாசமாக இருப்பவர்கள் என்றும் யாராலும், எந்த காரணத்தாலும் தங்களை சோரம் போகச் செய்யமுடியாது என்று உறுதியாக நின்றனர் அந்த இளைஞர்கள். ஆனாலும் நடுவக்குறிச்சி ஜமீன்தார் முயற்சியை விட்டுவிடவில்லை.

சுரண்டை ஜமீன்தார் அரண்மனையில் அந்த இரு வீரர்களுக்கு பிடிக்காத கணக்குப் பிள்ளை ஒருவர் இருந்தது அவருக்குத் தெரியவந்தது. அவரைத் தன் வசமாக்கி அவர் மூலம் காயை நகர்த்தினார். ‘சிவனையும், பரமசிவனையும் பெரும்தொகை கொடுத்து எங்களுக்கு அடிமையாக்கிவிட்டோம். இனி அவர்கள் எங்களுக்கு சாதகமாகத்தான் போர்புரிவார்கள்’ என்று ஒரு புரளியைக் கிளப்பினர். அதைக் கேட்ட கணக்குப் பிள்ளைக்கு கோபம் வந்து விட்டது.

ஏற்கெனவே அவர்கள் அவருக்கு ஆகாதவர்களாக இருந்தார்கள். உடனே அரண்மனைக்குப் போய் ஜமீன்தாரிடம், அவ்விருவரும் துரோகிகள், ஜமீனுக்கு எதிராகக் கலகம் செய்ய துணிந்து விட்டார்கள் என்று கூறினார். ஏற்கனவே ஒற்றர்கள் மூலம் நடுவக்குறிச்சி ஜமீன்தாரின் ஆட்கள் அவ்வீரர்களின் வீட்டுக்கு வந்ததை அறிந்திருந்த ஜமீன்தார், கணக்குப்பிள்ளை கூறியதை நம்பினார். இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அந்தப் பொறுப்பை கணக்குப் பிள்ளையிடமே ஒப்படைத்தார்.

இதற்காகவே காத்திருந்த கணக்கு பிள்ளையும் தனக்கு விசுவாசமான ஏவலாட்களுடன் இருவரையும் தீர்த்துக்கட்ட தருணம் பார்த்தார். ஒருநாள் நடுவக்குறிச்சி ஜமீன்தாரின் ஆட்கள் சுரண்டை ஜமீன்தார் வயலில் நெற்கதிர்களைத் திருடியபோது விவரம் அறிந்த பரமசிவன், சிவனுபாண்டி இருவரும் வயற்காட்டிற்கு வந்தனர்.

பாய்ந்து சென்று நடுவக்குறிச்சி ஜமீன் படை வீரர்களை விரட்டி அடித்தார்கள். திருடர்களிடமிருந்து நெல் மூட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டு வெற்றிக் களிப்புடன் இருவரும் ஜமீன் அரண்மனையை நோக்கிச் சென்றபோது கணக்குப் பிள்ளையின் ஏவலாட்கள் திடீரென எதிர்ப்பட்டு அவ்விருவருடைய தலைகளையும் வாளால் கொய்தனர்.

தன் பேரப்பிள்ளைகள் கொலையுண்டதை அறிந்த பாட்டி, ஓடோடி வந்து அந்த சடலங்களைப் பார்த்து அழுது அரற்றினாள். சுரண்டை ஜமீனே கதி என்று கிடந்த தனது பேரன்களை அதே ஜமீன்தார்தான் கொலை செய்திருக்கிறார் என்றறிந்ததும் மேலும் ஆவேசமானார். உடனே அரண்மனை நோக்கிச் சென்று ஆத்திரம் மிக, மண்ணை அள்ளி வீசி சாபமிட்டார்: ‘நீயே கதி என்று கிடந்த எனது பேரன்கள் இருவரையும் நம்ப வைத்து கழுத்தறுத்தாயே! உனது அரண்மனை இப்போதே அழிந்து போகும்,’ என்று சபித்ததோடு தானும் அங்கேயே விழுந்து இறந்தார்.
காலங்கள் உருண்டோடின. பாட்டியின் சாபம் பலித்தது. அரண்மனை அழிந்துபட்டது. ஜமீன்தார் வாரிசுகளும் விருந்தினர் மாளிகைக்கு குடியிருப்பை மாற்றினர். அரண்மனை இருந்த இடம் இப்போது பொதுமக்கள் குடியிருப்பாக மாறிவிட்டது. தொடர்ந்து வாரிசுகளுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டன. கணக்குப் பிள்ளை குடும்பத்தாரும் பிரச்னையிலிருந்து தப்பவில்லை.

இதற்கான பரிகாரத்தை மலையாள மந்திரவாதி களிடம் கேட்டபோது, ‘சிவனு பாண்டியும், பரமசிவ பாண்டியும் நல்ல ஜீவன்கள். கடைசிவரைக்கு அரண்மனைக்கு விசுவாசமாக இருந்தவர்கள். ஜமீன்தார் அவர்களை பலி வாங்கியதால் அவர்களுடைய ஆன்மாக்கள் அமைதியடையாமல் அலைந்துகொண்டிருக்கின்றன. அவை சாந்தியடைந்தால் எல்லா பிரச்னையும் தீரும்’ என்றனர்.

அழகு பார்வதி அம்மன்கோயில் அருகே மேற்கு நோக்கி இருவருக்கும் பீடம் அமைத்து வணங்க ஆரம்பித்தனர். அதன் பிறகு பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து விட்டது. வேண்டும் வரம் தரும் தெய்வமாக சிவனு பாண்டியும், பரமசிவ பாண்டியும் விளங்குகின்றனர். தற்போதைய ஜமீன்தார் வாரிசு சிவஞான ராஜா அந்த ஆலயத்துக்கு மணி மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார். இத்தனை பிரச்னைக்கும் மூலகாரணமான நடுவக்குறிச்சி ஜமீன் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

1910ம் ஆண்டு அரசு ஆவணப்படி, கடைசியாக இங்கு ராமசாமி ஜமீன்தார் என்பவர் ஆண்டு வந்தார் என்ற குறிப்பு மட்டுமே காணப்படுகிறது. சிவனு பாண்டி, பரமசிவபாண்டிக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கணக்குப் பிள்ளை வாரிசுகள் கொடை கொடுக்கின்றனர். இதில் ஜமீன்தாரும் கலந்துகொள்கிறார். இந்தக் கோயில் கொடைவிழாவின்போது வேளாளர் வீட்டில் இருந்து சிவனு பாண்டி, பரமசிவபாண்டி மற்றும் அவர்கள் வளர்த்த நாய் முதலிய மண்சிலைகளை தலைச்சுமையாக அரண்மனைக்குக் கொண்டு வருகிறார்கள்.

அங்கே பூசாரி மூன்று சிலைகளுக்கும் ஜமீன்தார் முன்னிலையில் கண் திறந்து வைப்பார். அதன்பின் சிலைகளைக் கோயிலில் வைத்து கொடைவிழா கொண்டாடுவார்கள். இந்தக் கோயில் பெயரையே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதுடன் குழந்தைக்கு காது குத்துதல், மொட்டைபோடுதல் போன்றவற்றையும் பல பக்தர்கள் இங்கேயே செய்கின்றனர். வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷகாலங்களில் குடும்பத்துடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.



வீ.கே.புதூர் அரண்மனையில் டாஸ்மாக் மது ஆறாக ஓடுதாம்


‘‘அல்வா மாவட்டத்துல என்ன விசேஷம்’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இது சாதாரண ஆறு இல்ல... சாராய ஆறு... நெல்லையின் வரலாற்றுச் சின்னமாக இருக்கும் வீ.கே.புதூர் அரண்மனையில் டாஸ்மாக் மது ஆறாக ஓடுதாம்... ஊத்துமலை மன்னர் இருதாலய மருதப்ப பாண்டியனார் தமிழ் வளர்த்த இந்த அரண்மனை மதுக்கடையாக மாறி விட்டது வரலாற்று ஆய்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கட்டிடம் ஸ்டிராங்க் இல்லைனு இதற்கு முன்பு இருந்த கலெக்டர் நிராகரித்த பைல் எங்கே போச்சுனே தெரியல... கலெக்டர் மாறிய பிறகு நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த பைலை தூசி தட்டி எப்படியோ தற்போது கடையை திறந்து விட்டனர். இந்த அரண்மனையின் அருகில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலும் உள்ளதாம். வழிபாட்டு தலம் அருகில் மதுக்கடை இருக்கக் கூடாது, ஸ்திரத்தன்மை இல்லாத கட்டிடம் என விதிமுறைகளை மீறி அங்கு மதுக்கடை திறந்து இருக்காங்களாம்... இதனால பக்தர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் ரொம்பவே அப்செட்ல இருக்காங்களாம்...’’ என்று சொல்லிவிட்டு எழுந்தார் விக்கியானந்தா.

Saturday 12 May 2018

வீ.கே.புதூரில் இந்து அறநிலைய துறை இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா?


நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கு கிழக்கே சிற்றாற்றின் கரையில் உள்ள வீரகேரளம் புதூர் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 வருவாய் ஊராட்சிகளையும், ஒரு பேரூராட்சியையும் தன்னகத்தே கொண்டது. வீ.கே.புதூரில் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். விவசாயம், பீடி சுற்றுதல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தென்காசியோடு இணைந்திருந்த வீ.கே.புதூர் 1998ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டது. மேலும் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த தாலுகா அலுவலகத்துக்கு 2009ம் ஆண்டில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இப்போது வடக்கு, தெற்கு என இரண்டு பஸ் நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன. இவ்வாறு 1998ல் தனி தாலுகாவாக உருவான வீ.கே.புதூர், மாவட்டத்திலேயே பஸ் நிலையம் இல்லாத நிலையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இங்குள்ள இரு பஸ் நிறுத்த பகுதிகளிலும் நிழற்குடையோ, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு வசதியும் செய்துதரப்படவில்லை. எனவே, வீ.கே.புதூரில் பஸ் நிலையம் அமைத்தால் அனைத்து பஸ்கள் நின்று செல்லும். வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தை சுற்றி காலியாக இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமாக உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் மற்றும் மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Sunday 8 April 2018

வீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் அனுமன் நதி

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை தாலுக்காவின் பண்பொழி, மேக்கரை அருகே உற்பத்தி ஆகும் நதி அனுமன் நதி ஆகும் .
தாமிரபரணியின் வடக்கு கடைக்குட்டி கிளைநதி அனுமன் நதி. தென்காசியில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும் ஆற்றின் துணை ஆறு ஆகும்.அனுமன் நதி மூலம் தென்காசி நகராட்சியில் உள்ள 4046.94 எக்டேர்களுக்கு நேரடியாகவும், இதன் துணையாறான கருப்பா நதி மூலம் 3844.59 எக்டேர்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதி கிடைக்கிறது. இது வீரகேரளம்புதூர் என்னும் ஊரில் சிற்றாறுடன் இணைகிறது. இது 14 அணைக்கட்டுகளை கொண்டுள்ளது.


அனுமன் நதி வரலாறு

இராமாயண காலத்தின் போது இராமன், இலட்சுமணனுடன் வந்த அவர்களின் படையின் தாகத்தைத் தணிக்க அனுமான் ஒரு பாறையை உடைத்தான். அதில் இருந்து விண்கங்கை கொட்டியது. அதுவே நாளடைவில் ஆறாக மாறி அனுமன் ஆறு எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

அல்லது

ஸ்ரீராமர் பதினாறு ஆண்டு வனவாச காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தண்ணீர் தாகம் எடுக்கவே ஸ்ரீஆஞ்சநேயர் தனது வாலால் மலையில் அடித்த இடத்தில் தோன்றியது தான் அனுமன் நதி ஆகும்

அனுமன் நதி அருகில் உள்ள ஊர்கள்:

பண்பொழி- பைம்பொழில்-பசுமையான சோலைகள் நிறைந்த இடத்தின் வழியாகவும். அனுமன் நதிக்கு வடகரையில் அமைந்த வடகரை வழியாகவும்.இலவையம்பதி என்ற இலத்தூர் வழியாக வந்து துணையாறான கருப்பா நதியுடன், காசி தர்மம் அருகே உள்ள நெடுவயல் என்னும் ஊரில் இணைகிறது. பின்பு ஆயர்கள் குடும்பம் அல்லது ஆயர்கள் வாழிடமான ஆய்க்குடி வழியாகவும். அகத்திஷ்வரர்சாம்பவமுர்த்தி- சாம்பவமுர்த்தி கோவிலுக்கும் அனுமன் நதிக்கும் வடகரையில் அமைந்த சாம்பவர்வடகரை வழியாகவும்.சுரர் அண்டிய இடம்.- அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த சுரண்டை வழியாக வந்து வீரகேரளனின் புதிய ஊர் அல்லது வீரமாய் கேரளாவைப் போல செழிப்பான புதிய ஊரான -வீரகேரளம்புதூரில் சிற்றாறுடன் இணைகிறது.

அடவி நயினார் அணை தேக்கம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை தாலுக்காவின் பண்பொழி, மேக்கரை அருகே அனுமன் நதி ஆற்றின் குறுக்கே அடவி நயினார் அணை அமைந்துள்ளது.

அணையின் உயரம் : 51.5 m
அணையின் கொள்ளளவு : 4.927 Mcum
அணையின் நீளம் :670 m
அணையின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு : 15.54 km2



இந்நதி செங்கோட்டை , தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் தாலுக்காவின் நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை தருகிறது.நமது ஊரிலுள்ள அருந்தாபிரட்டிக்குளம்,கோவில் குளம் மற்றும் குறு குளத்திற்கு தேவையான நீரை அனுமன் நதி மற்றும் கருப்பா நதி தருகிறது.


வீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் கருப்பா நதி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூர் நகரம் சொக்கம்பட்டி கிராமம் அ௫கில் மேற்கு மலை் தொடர்ச்சியில் உற்பத்தி ஆகும் நதி ஆகும் .
இந்த நதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட ஒ௫ அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது இதன் மூலம் கடையநல்லூரைச் சுற்றி 72 குளங்கள் பாசன வசதிக்கு உள்ளன. இந்நதிஅனுமன் நதியின் துணை ஆறாகும். இந்நதி மூலம் 3844.59 ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இது ஆறு அணைக்கட்டுகளையும் ஒரு தேக்கத்தையும் கொண்டுள்ளது.

கருப்பா நதி அருகில் உள்ள ஊர்கள்:

கடையநல்லூர்:

தற்போதைய ஊரான கடையநல்லூர் அந்த காலத்தில் அர்ஜுனபுரி என்று அழைக்கப்பட்டு வந்தது.பக்தர் ஒருவர் சாமிக்கு பால் கொண்டு வரும்போது கால் இடறி தட்டியதால் கடையநல்லூர் என்ற பெயர் பழக்கத்தில் வந்தது.அதற்கு பிறகு தான் மேல கடையநல்லூரில் உள்ள கடைகால் ஈஸ்வரன் கோயில் கட்டபட்டது.

கருப்பா நதி காசி தர்மம் அருகே உள்ள நெடுவயல் என்னும் ஊரில் அனுமன் நதியுடன் இணைகிறது.

கருப்பா நதி அணை தேக்கம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடையநல்லூர் தாலுக்காவின் சொக்கம்பட்டி கிராமம் அருகே கருப்பா நதி ஆற்றின் குறுக்கே கருப்பா நதி அணை தேக்கம் அமைந்துள்ளது.

அணையின் உயரம் : 38.64 m
அணையின் கொள்ளளவு : 5.239 Mcum
அணையின் நீளம் : 890 m
அணையின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு : 29.34 km


இந்நதி கடையநல்லூர், தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் தாலுக்காவின் நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை தருகிறது.நமது ஊரிலுள்ள அருந்தாபிரட்டிக்குளம்,கோவில் குளம் மற்றும் குறு குளத்திற்கு தேவையான நீரை அனுமன் நதி மற்றும் கருப்பா நதி தருகிறது.

கழனியூரன்

தமிழ் நாட்டுப்புற வழக்காற்றியலின் முன்னத்தி ஏரான கி.ராஜநாராயணனின் நீட்சியாக, அவர் வழி வந்தவர் கழனியூரன். கரிசல் வட்டார வழக்குகள், நாட்டார் கதைகள், வசவுச் சொற்கள், விடுகதைகள், தமிழ்-தெலுங்கு சொலவடைகள், சிறுவர் கதைகள், பாலியல் சேகரிப்புகள் என்று ஒரு தேனீயைப் போல தேடித்தேடிச் சேகரித்தவர் கழனியூரன். கி.ராவின் அத்யந்த சீடனாகவே தன் வாழ்நாள் முழுக்கவும் செயல்பட்ட கழனியூரனின் சொந்தப் பெயர் எம்.எஸ். அப்துல் காதர். எழுத்துக்காக, தான் பிறந்த ஊரான கழுநீர் குளத்துக்காரராக (கழனியூரன்) மாறியவர். சிறுவயதில், கண்பார்வையற்ற தனது அண்ணனுக்காக அவர் கொடுத்த புத்தகங்களைத் சத்தமாக வாசிக்கத் தொடங்கியதுதான் கழனியூரனின் முதல் இலக்கிய அறிமுகம். பிறகு, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் நடக்கும் ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆர்வமாகக் கலந்துகொள்ளத் தொடங்கினார். அங்கேதான் ‘லானா சானா’ என்று அழைக்கப்படும் ல. சண்முகசுந்தரத்தின் அறிமுகம் கழனியூரனுக்குக் கிடைத்தது.

திருநெல்வேலியில் வட்டத்தொட்டி இலக்கியக் குழுமமும், ரசிகமணி டி.கே.சி.யின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். ராஜாஜியில் தொடங்கி, ரா.பி. சேதுப்பிள்ளை, கல்கி, அ. சீனிவாச ராகவன், தொ.மு. பாஸ்கர தொண்டைமான், வையாபுரிப்பிள்ளை, மீ.ப. சோமு, கி.ரா., ஜெயகாந்தன் என்று பலரும் வட்டத்தொட்டியின் நெடுநாளைய உறுப்பினர்கள். டி.கே.சி.யின் மறைவுக்குப் பிறகு, அவரது பேரன் தீப. சிதம்பரநாதன் முயற்சியில், டி.கே.சி. அன்பர்கள் அனைவரும்கூடி, அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடத் தொடங்கினார்கள்.

அந்நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆசான்களும் கலந்துகொள்வார்கள். அங்குதான் முதன்முறையாக கி. ராஜநாராயணனைச் சந்தித்தார். நிகழ்ச்சி முடிந்து ஊருக்குப் போன கி.ரா.விடமிருந்து சில நாட்களில் கழனியூரனுக்குக் கடிதம் வந்தது. “நீங்கள் ஒரு நல்ல வாத்தியார், அதே நேரம் கிராமம் கிராமமாக அலைந்து வேலை பார்க்கும் வாய்ப்பும் உங்களுக்கு இருக்கிறது. இப்படி, நாட்டார் வழக்காற்றியல் தொடர்புடைய கதைகளைத் தேடிச் சேகரியுங்களேன்” என்று முதல் தடவையாக கி.ரா கழனியூரனைத் தூண்டிவிட்டார். இப்படித்தான் தொடங்கியது கழனியூரனின் நாட்டாரியல் வேட்டை.

முதல் தடவை கழனியூரன் கிராமங்களுக்குப் போய்க் கதைகள் சேகரிப்பதற்காக கிராமத்தினரை அணுகியபோது, வெட்கத்தின் காரணமாகவும், வேலைப்பளுவைக் காரணம் காட்டியும், பெண்ணும் ஆணும் கதைசொல்ல மறுத்திருக்கிறார்கள். அதை கி.ராவிடம் சொன்னதும், “பொம்பளையாளு சோறு ஆக்கணும்பா. நீங்க போய்ப் பக்கத்துல உக்காந்து அடுப்புல தீயைத் தள்ளுங்க, அவங்களோட ஒண்ணுமண்ணா பழகிப் பேச்சு கொடுத்து, கதையச் சொல்ல விட்டுக் கேளுங்க” என்றாராம் கி.ரா. அப்படி மனிதர்களோடு நெருங்கிப் பழகி கழனியூரன் கதைகள் சேகரித்த சம்பவங்களையே தனித் தொகுப்பாக எழுதலாம்.

கரிசல் நிலம், செவக்காட்டு நிலம் முழுக்க அலைந்து கழனியூரன் திரட்டிக் கொண்டுவந்து குவித்த கதைகளில், தான் ஏற்கெனவே பதிவுசெய்தவற்றை, அரிசியில் கல் பிறக்குவதுபோலப் பிறக்கி எடுத்துவிட்டு, மற்றவற்றைச் சேர்த்துப் புத்தகமாக்கினார் கி.ரா. அப்படித் தொகுக்கும் ஒவ்வொரு முறையும் தவறாமல் கழனியூரன் பெயரையும் சேர்த்துப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருந்தார்.

ஒரு சீடனுக்குக் கிடைக்கிற உச்சபட்ச மரியாதையை கி.ரா. எப்போதும் கழனியூரனுக்குத் தந்தார். அவர்கள் இரண்டு பேருக்குமிடையே வெளியில் சொல்லாத ஒரு தந்தை மகன் உறவு நிலை கொண்டிருந்தது. கிராம மக்களின் பேச்சில் நடமாடும் வசவுச் சொற்களை எல்லாம் விசாரித்து அவற்றில் இருக்கும் பூர்வாங்க மனித உணர்வுகளைப் படிக்க வேண்டும் என்று தனது 92-வது வயதில் யாருக்காவது ஆசை வருமா? கி.ராவுக்கு வந்தது. உடனே வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கினார் கழனியூரன். இத்தனைக்கும் அப்போதுதான் அவர் புற்றுநோய் பாதிப்பை உணரத் தொடங்கியிருந்தார்.



கழனியூரன் நூல்களில் சில...

தாய்வேர் - பூங்கொடி பதிப்பகம்.

கதைசொல்லியின் கதை - தாமரைச்செல்வி பதிப்பகம்.

நெல்லை நாடோடிக் கதைகள் - மித்ரா பதிப்பகம்.

மண் மணக்கும் மனுஷங்க - பூங்கொடி பதிப்பகம்.

நாட்டுப்புற நீதிக் கதைகள் - காவ்யா பதிப்பகம்.

பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம்.

செவக்காட்டு மக்கள் கதைகள் - சந்தியா பதிப்பகம்.

தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - பாரதி புத்தகாலயம்.

குறுஞ்சாமிகளின் கதைகள் - உயிர்மை பதிப்பகம்.

வாய்மொழி வரலாறு - சந்தியா பதிப்பகம்.

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் -

(தலைமைத் தொகுப்பாளர் கி. ராஜநாராயணன்,

சண்முகசுந்தரம், கழனியூரன், பாரததேவி) - சாகித்ய அகாடமி.

நெருப்பில் விழுந்த விதைகள் (கவிதைகள்) - அகரம் பதிப்பகம்.

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - உயிர்மை பதிப்பகம்

நாட்டுபுற வழக்காறுகள் - தாமரைச்செல்வி பதிப்பகம்.

நாட்டுபுற நம்பிக்கைகள் - அகரம் பதிப்பகம்.

அன்புள்ள கி.ரா (கடித இலக்கியம்) - உயிர்மை பதிப்பகம்.

ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம்.



ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, கழனியூரனின் உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. சிகிச்சைக்காக மகள் வீட்டிலும், ஓய்வுக்காகச் சொந்த ஊரிலுமாக நாட்களைப் பங்குபோட்டுக்கொண்டார். தனக்கு மிச்சமாகக் கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் அதுவரையிலான தன் நாட்டுப்புறச் சேமிப்புகளை ஆவணப்படுத்தும் பணிகளுக்காகக் கவனத்தோடு செலவிடத் தொடங்கினார். தன்னுடையவை மட்டுமல்லாமல் கி.ராவின் கதைகள், கடிதங்கள், கட்டுரைகள், முன்னுரைகள், கதைசொல்லி இதழ் வெளியீடுகள், கி.ரா. பிற சஞ்சிகைகளில் எழுதியவை, வல்லிக்கண்ணன் -திகசி கடிதங்கள் என்று யாவற்றையும் தொகுத்துப் பத்திரப்படுத்தி நூலாக்கினார்.

கி.ரா.வை ஆசிரியராகக் கொண்டு, கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிப்பித்து வெளியிடும் ‘கதைசொல்லி’ இதழில் கடைசிவரைக்கும் பொறுப்பாசிரியர் பணிகளை கழனியூரன் கவனித்தார். கி.ரா.வின் வாழ்க்கையை, திரும்ப அவருக்கே படம்போட்டுக் காட்டுவதுபோல, அவருடனான தன் அனுபவங்களைத் தொடராக எழுதிக்கொண்டிருந்தார் கழனியூரன்.

இந்த ஆண்டு 95-வயதைப் பூர்த்திசெய்யும் தன் குருநாதர் கி.ரா.வுக்குக் காணிக்கையாக, அவர் பற்றிய பிற படைப்பாளர்களின் எழுத்துகள் அடங்கிய தொகுதி ஒன்றை நூலாக ஆவணப்படுத்தும் பணியை கழனியூரன் என்னிடம் ஒப்புவித்திருந்தார். நூல் வேலைகள் முடிவடையும் நிலையில் புற்றுநோய் அவரை முற்றிலுமாகப் பறித்துக்கொண்டது. கழனியூரன் தன் குருவுக்கான காணிக்கையைக் கையளிக்கும் முன்பாகக் காலமாகிவிட்டார்.

கி.ரா. சொல்லுவார், “ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்நாளில் பேசினதை, எழுதினதையெல்லாம் பத்திரப்படுத்திக்கொடுத்த மகேந்திரநாத் மாதிரி, ரசிகமணி டி.கே.சி.க்கும் ஒரு ‘சுடுகுஞ்சு’ கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று. டி.கே.சி.க்கு அப்படி ஓர் ஆள் வாய்த்தாரோ இல்லையோ! கி.ரா.வின் ‘சுடுகுஞ்சாக’ வாழ்ந்தவர் கழனியூரன்.

கரிசல் மண்ணில் கி.ரா.வின் பங்களிப்பு பூரண நிலவென்றால் அதே வானத்தின் விடிவெள்ளியாக மின்னியவர் கழனியூரன். ஒரு முறை அவரிடம் ‘உங்கள் காலம்போல எங்களுடைய காலம் அவ்வளவு நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கவில்லையே?” என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதில்: “எங்க தாத்தா வாழ்ந்த காலத்தை நான் பார்க்கும்போது அது பிரம்மாண்டமா இருந்துச்சு. அதிலே அவ்வளவு விஷயங்கள் இருந்துச்சு. என் காலத்து வாழ்க்கை என் பேரனுக்கு வித்தியாசமா இருக்கும். அவன் பேரன் வரும்போது, இங்கே இன்னும் நிறைய மாறியிருக்கலாம். நவீனத்துக்கான மாற்றங்கள் வந்துகிட்டேதான் இருக்கும். அவரவர் காலத்தோட கண்ணாடியை அணிஞ்சுக்கிட்டே இருக்கணும். நம் பார்வைகள் நாளுக்கு நாள் மாறும்; உடலும் உயிரும் வந்து வந்து போய்க்கிட்டே இருப்பது மாதிரி. ஆனா அதோட ஆன்மா அப்படியே இருக்கும். ஆன்மா அழியாது” என்றார். கழனியூரனின் ஆன்மா அவரது எழுத்து.

அஞ்சலி: கழனியூரன் - (1954 - 2017)


Friday 6 April 2018

சிற்றாறு பாசனவசதி

சிற்றாற்றின் மீது பாசனவசதிக்காக 17 அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன.
எண் அணைக்கட்டின் பெயர் பதிவுசெய்யப்பட்ட

ஆயக்கட்டு நேரடியாக

(ஏக்கரில்)
பதிவுசெய்யப்பட்ட

ஆயக்கட்டு மறைமுகமாக

(ஏக்கரில்)
1 தலை அணைக்கட்டு 590.06 1467.32
2 அடிவட்டாம்பாறை அணைக்கட்டு 114.08 157.72
3 வால்விளகுடி அணைக்கட்டு 153.27 -
4 புலியூர் அணைக்கட்டு 381.00 911.48
5 பாவூர் அணைக்கட்டு 488.00 3110.08
6 திருசிற்றம்பலம் அணைக்கட்டு 163.00 163.25
7 மாறைந்தை அணைக்கட்டு 1361.00 2543.04
8 வீராணம் அணைக்கட்டு 231.15 2207.70
9 மானூர் அணைக்கட்டு 821.75 2677.52
10 மேட்டூர் அணைக்கட்டு 500.10 1027.50
11 பள்ளிக்கோட்டை அணைக்கட்டு 249.81 2135.00
12 உக்கிரன்கோட்டை அணைக்கட்டு 421.00 47.18
13 அழகியபாண்டியபுரம் அணைக்கட்டு - 440.48
14 பிள்ளையார்குளம் அணைக்கட்டு 66.90 413.19
15 செழியநல்லூர் அணைக்கட்டு 67.81 372.71
16 பிராஞ்சேரி அணைக்கட்டு 344.39 409.40
17 கங்கைகொண்டான் அணைக்கட்டு 216.28 779.80
மொத்தம் 9963.83 37062.19