Wednesday 30 October 2013

தஞ்சைக் கோயிலைப் பற்றியும் பொதுவாகவே கோயில் விமானங்கள் பற்றியும் குடவாயில் ஆய்வு

பெரிய கோயிலைப் பற்றி டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற ஆய்வறிஞர்களிடம் பேசப் பேச நமக்கெழும் முதல் நினைவு அது ஒரு மாபெரும் கலைக் களஞ்சியம் (Encyclopiedia) என்பதே.

கவிஞர் மு மேத்தா இவ்வாறு எழுதுவார் -

"இதனை குளமென்று எண்ணி குளிக்கப் புறப்படுங்கள் -
கால் வைத்தவுடன் இது கடலாக மாறுவதை கண்டு கொள்ளலாம்"

பெரியகோயிலும் அப்படிப் பட்டதொரு கடல்தான்.

ஒரு காலகட்டத்தின் ஒட்டுமொத்த பொறியியல் அறிவு, கலாச்சார அறிவு, சமய அறிவு முதலியவற்றை தாங்கி காலகாலத்தைக் கடந்து நிற்கும் காவியமாகத்தான் நாம் பெரிய கோயிலை அணுக வேண்டும். நாமும் சரி நம்முடன் வந்த நண்பர்களும் சரி - பெரிய கோயிலை பலமுறை பார்த்தவர்கள்தான். என்றாலும் அது தன்னுள் மறைபொருளாக அடக்கி வைத்திருக்கும் விஷயங்களை அறிஞர்கள் சிறிதளவு வெளிச்சம்போட்டுக் காட்டியதுமே - குவிந்து கிடக்கும் பொக்கிஷங்களின் அளவைக் கண்டு பிரமித்துப் போகிறோம் !

"The true knowledge is knowing the extent of your ignorance" என்பதுபோல் அதனைப் பற்றி விஷயங்களை அறிந்துகொள்ள அறிந்துகொள்ள அறிந்ததன் அளவைவிட அறியாததன் அளவு பிரமிப்பூட்டுகிறது. கடல் வரை வந்தாலும் கையளவு நீர்தான் அள்ளிச் செல்ல முடியும் - ஆக குடவாயில் அவர்கள் அன்று பகிர்ந்துகொண்ட செய்திகளில் எங்கள் சிற்றறிவில் தங்கியதை மட்டும் முடிந்தவரை பகிர்ந்து கொள்கிறோம்.

29 சைவ ஆகமங்களில் சிவபெருமான் திருக்கோயில்களுக்கான அமைப்பு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் பெரிய கோயில் மகுடாகமம் என்ற ஆகம வகையை சார்ந்து அமைக்கப்பட்ட கோயிலாகும். ஆகமங்களில் மகுடாகமம் திருமூலர் காலத்திலேயே பிரபலமாக இருந்ததென்பது திருமந்திரப் பாடலால் தெரிகிறது.

மகுடாமத்தின் சிறப்பு என்னவெனில் மூலமூர்த்தத்தை முதலில் பிரதிஷ்டை செய்துவிட்டு பிறகுதான் அதனைச்சுற்றி கோயிலே எழுப்பப்படும். ஆக வழிபாடுகள் முதல் நாளிலிருந்தே உண்டு. இதனால்தான் அத்தனை பெரிய இராஜராஜேசுவரமுடையார் எனும் லிங்கத்தை குறுக்களவில் சிறிய நுழைவாயிலைக்கொண்ட கருவரைக்குள் இருத்த முடிந்தது. இதே காரணத்தினால்தான் கோயில் முழுமையாய் பூர்த்தி பெறாத நிலையிலேயே கும்பாபிஷேகம் செய்வதும் சாத்தியமாயிற்று என்றார். (டாக்டர் கலைக்கோவன் 52 இடங்களில் கோயில் நிறைவடையவில்லை என்று தெரிவித்ததை நினைவு கூர்கிறோம்). இந்த மகுடாகமத்தை பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நமது To Do லிஸ்டில் எழுதிவைத்துக் கொண்டோம்.

அக்காலத்தில் ஒரு திருக்கோயிலைக் கட்டுவதற்கு முன்னும் அது கட்டப்படும் போதும் கடைபிடிக்கப்பட்ட சமய நெறிமுறைகளை ஏறக்குறைய திரைப்படம் காட்டுவதுபோல் மிக pictorial ஆக விளக்கினார் குடவாயில். திசை, வாஸ்து என்று எல்லாம் பார்த்து திருக்கோயில் எழும்ப வேணடிய இடத்தை தெரிவு செய்தல், தேர்ந்தெடுத்த இடத்தை மயிர் முதலான அசுத்தங்கள் இல்லாமல் சுத்தமாக சலித்தல், யானைகளை கொண்டு நடக்கச் செய்து மண்ணை கெட்டிப் படுத்துதல், கோயில் உருப்பெரும் காலத்தில் பசுக்களை பல காலத்திற்கு கட்டிவைத்து அந்தப் பசுக்களின் கோமியம் மற்றும் சாணம் திருக்கோயில் கட்டப்படும் இடத்தின் பல பகுதிகளிலும் விழுமாறு செய்து அந்த இடத்தைப் பவித்திரமாக்கி தோஷங்களை நீக்குதல் என்று ஒரு கோயிலைக் கட்டத் துவங்குவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன.

இதில் பெரிய கோயில் போன்ற மெகா ப்ராஜக்டுகளில் இந்த நெறிமுறைகளெல்லாம் எத்தனை கவனத்துடன் நடந்தேறியிருக்கும் என்று சொல்லத் தேவையேயில்லை.

இந்த நெறிமுறைகளில் நம்மைக் கவர்ந்த அம்சம் ஒன்று இருந்தது.

அதாவது கோயில் கட்டப்போகும் முழு இடத்தையும் குறிப்பிட்ட அளவுடைய கட்டங்களாகப் பிரித்து (மொத்தம் 21 கட்டங்கள் என்று நினைவு) அதில் ஒவ்வொரு கட்டத்தையும் காப்பதற்கு ஒரு தேவதையை வழிபட்டு வேண்டுவார்களாம். இதற்கு பதவிந்யாசம் என்று பெயர். இந்த தேவதைகளில் அஷ்டதிக் பாலகர்கள் (எண்திசைக் காவலர்) முக்கியமானவர்கள். ஆக பெரிய கோயிலின் ஒவ்வொரு குறிப்பிட்ட கட்டத்தையும் ஒரு தேவதை ஆட்சி செய்து காத்து வருகிறது.

இதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே - அட, அத்தனை பெரிய வளாகத்தை கட்டம் கட்டமாய் கோடுகட்டிப் பிரித்து பூஜை செய்து முடிப்பதற்கு மிகுந்த சிரமமாயிருந்திருக்குமே என்றோம்.

அது அப்படி இல்லையாம் !

வளாகத்தின் அருகில் தரையில் நெல்லைப் பரப்பி அதில்தான் கட்டங்களைப் போடுவார்களாம் ! அதாவது மொத்த கோயில் வளாகத்தையும் இப்போது அந்த நெல் பரப்பில் நினைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்தப் பரப்பிலேயே உரிய கட்டங்களைப் போட்டு பூஜையெல்லாம் அதற்கு அருகிலேயே முடித்து விடுவார்களாம் ! அதாவது அந்தப் பூஜையை பொறுத்தவதை நெற்பரப்பே அந்தக் கோயில் வளாகம் என்றாகிறது. எத்தனை எளிமையான / அர்த்தம் மிக்க முறை என்று வியந்தோம். இந்துமதச் சடங்குகளில் இந்தத் தத்துவம் முக்கியமானது. அதாவது ஒன்றை மற்றொன்றாய் நினைத்து அதன்படியே நடந்து வழிபாடு செய்தல். உருவம் முக்கியமில்லை, நமது நினைப்புத்தான் முக்கியம் என்கிற விஷயம் அது. "நினைத்தலும் செயலும் ஒக்கும்" என்பது வள்ளுவர் வாக்கு. சடங்குகளின்போது பிடிக்கப்படும் மஞ்சள் பிள்ளையாரும் சரி, கருவறையில் இறைவடிவமாய் வீற்றிருக்கும் கற்சிற்பமும் சரி - இந்தத் தத்துவத்திற்குள் அடங்குபவையே. வடமொழியில் இதற்கு ஆவாகனம் என்று பெயர்.

இந்த எண்திசைக் காவலர்களின் சன்னிதிகள் பெரிய கோயில் வளாகத்தில் மூலைக்கொன்றாக அமைக்கப்பட்டிருந்தனவாம். காலப் போக்கில்அனைத்தும் அழிந்தொழிய இன்றைக்கு மிஞ்சுவது அக்கினி தேவன் சிலை, மூர்த்தம் இல்லாத இந்திரன் சன்னிதி என்று ஒரு சில மட்டுமே.




எண்திசைக் காவலர் சன்னிதிகளின் அமைப்பு


இந்த எண்திசைக் காவலர் அமைப்பு கோயில்களுக்கு மட்டுமல்ல - யாகங்களுக்கும் பொருந்தும். யாகத்தீ மூட்டப்படும் முன் எண்திசைக் காவலர்களையும் படத்தில் காண்பித்துள்ள திசைகளிலேயே எழுந்தருளுவிப்பது மரபாம்.

அடுத்து இராஜராஜேச்சுர விமானம் பற்றிய பேச்சு ஆரம்பித்தது.

விமானத்தின் உள்கூடு அமைப்பே பரசிவம் என்கிற எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருளை ஒரு கட்டுக்குள் அடக்கி வழிபடும் விதமாகும் என்கிற தனது முக்கியமான கருத்தை வலியுறுத்திச் சொன்னார். இதே கருத்து அவரது இரு புத்தகங்களிலும் ("தஞ்சாவூர்" மற்றும் "தஞ்சை இராஜராஜேஸ்வரம்") மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இதனைப் புரிந்துகொள்ள குடவாயிலின் புத்தகத்திலிருந்தே சில படங்களை பயன்படுத்திக் கொள்கிறோம்.




விமான உள்கூடு / சிவ லிங்க வடிவம் - பரசிவம்


அதாவது முதலில் தூலவடிவமான பெருவுடையாரிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த லிங்க வடிவில் படத்தில் காட்டியிருப்பதுபோல் பல்வேறு ரூபங்களும் அடங்கும். பிரம்மா, விஷ்ணு, பரசிவம், பரபிந்து, பரநாதம்...என்று ஒவ்வொன்றாக வழிபட்டுக்கொண்டு வரும்போது ஒரு கட்டத்தில் லிங்கத்தின் வடிவம் முடிந்து அதற்கு மேலெழும்பும் ஆகாசமே பரசிவமாக விரியும். அதாவது இந்த உலகை படைத்து காத்து அழித்து மீண்டும் படைக்க வைக்கும் கண்ணுக்குப் புலனாகாத அந்த ஒப்பற்ற ஆற்றலே சிவம் ! கண்ணுக்குத் தெரியும் தூலப்பொருளாக அந்தச் சிவத்தை வழிபடத்துவங்கி மனம் அமைதியுற்றதும் உருவமற்ற பரம்பொருளை வணங்க வேண்டும்.

இந்த பரசிவமும் பெரிய கோயிலைப் பொருந்த அளவில் கிட்டத்தட்ட லிங்க வடிவத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயம் ! சிதம்பரம் கோயிலில் எந்த பரவெளி இரகசியமாக காட்டப்படுகிறதோ அதே பரவெளி இங்கு பெருவுடையார் லிங்கத்தின்மேல் பரசிவமாக விரிகிறது - முப்பரிமாணத்தில் !

இராஜராஜர் காலத்தில் லிங்கவடிவத்துக்கு மேல் நேராக விமானம் மேலெழும்படிதான் அமைப்பிருந்தது. சமீப காலத்தில் (அதாவது கிட்டத்தட்ட சரபோஜி ராஜா காலத்தில்) பெருவுடையாருக்குமேல் ஒரு மரப்பலகையை போட்டு இந்த லிங்கம் - பரசிவமாக விரியும் அற்புதக் கோலத்தை தடுத்தாட்கொண்டு விட்டார்கள் சில புண்ணியவான்கள் ! உண்மையில் பெருவுடையாருக்கும் விமானத்தின் கலசத்திற்கும் நடுவில் எந்த தடுப்பும் இல்லை ! மேலே அமைக்கப்பட்டுள்ள தளங்களும் கவனமாக இந்த விஷயத்தை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

தன் கருத்துக்கு வலிவூட்ட வேறொரு விஷயத்தையும் சொன்னார் குடவாயில். அதாவது தனது போர் வெற்றக்குப் பிறகு பொற் பூக்களை பெருவுடையாருக்கு அர்பணித்த இராஜராஜர் எட்டு பூக்களை பெருவுடையாருக்கு செலுத்திவிட்டு ஒன்பதாம் மலரை பரசிவத்திற்கு அர்பணிப்பாராம் ! இந்த ஒப்பற்ற ஆற்றலை ஒரு குறியீடு மூலமும் உணர்த்த நினைத்தார்கள் நமது முன்னோர்கள். அந்த குறியூட்டு வடிவம்தான் நடராஜ தாண்டவம். இந்த ஆனந்த தாண்டவ தத்துவத்தை மிக மிக அழகாக வேறொரு சமயத்தில் விளக்கினார் குடவாயில்.

கோயிலின் உள்கூடைப் போன்று வெளி விமான அமைப்பும் கவனிக்கப்பட வேண்டியதே.

விமானத்தின் ஒரு தளம் விட்டு ஒரு தளம் பற்பல சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறன்றன. இவை அனைத்துமே சிவபெருமானின் பல்வேறு வடிவங்களாகும். மேல் தளத்தில் ருத்ரேச்வரர், மூர்த்தேச்வரர், இராஜராஜேஸ்வரர் முதலான மூர்த்தங்கள் வடிக்கப்பட்டிருக்க கருவறையின் நாற்புற வாயில்களையும் சிவபெருமானின் தசாயுத பேரர் காவல் காக்கின்றனர்.

மழை நீர் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குச் செல்லும் வழியில் கும்ப பஞ்சரங்கள் அமைக்கப்பட்டு அவை மழை பெய்யும்போது கையிலயங்கிரியின் துரோணிகளை ஒத்துள்ளன என்கிறார் குடவாயில். சான்றாக ஞானசம்மந்தரின் பதிகம் ஒன்றையும் குறிப்பிட்டார்.

பேச்சு இந்தக் கட்டத்தில் சற்று விறுவிறுப்படைந்து விட்டது....

அதாவது அத்தனை பெரிய விமானத்தின் மூலம் மன்னர் இராஜராஜர் குறிப்பிட நினைத்தது என்ன ? அந்தக் கோயில் அமைப்பின் அடிப்படைத் தத்துவம் என்ன ? What was the fundamental concept behind rajarajeswaram ? என்று ஆவேசமாக கேட்டுவிட்டு எங்களைப் பார்த்தார்.

எங்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை - குடித்த டீ வெளியில் வந்துவிடும்போலிருந்தது ! கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக ஒருவாறு சமாளித்துக் கொண்டோம்.

ரொம்ப முக்கியமான கேள்வி. இப்படி வேலை மெனக்கெட்டு பிரம்மாண்டமான கற்றளியும் விமானமும் குறிப்பிட்ட விதத்தில் கட்டி குறிப்பிட்ட மூர்த்தங்களை எழுந்தருளுவித்து பெரிய லிங்கப் பிரதிஷ்டை செய்து..... இதற்கெல்லாம் அடிப்படையாக இராஜராஜர் சொல்ல நினைத்த ஒரு தத்துவம் - ஒரு கருத்து - ஒரு செய்தி இருந்திருக்கவேண்டும் அல்லவா ? அது என்ன ?

அந்த மாமன்னர்தான் எல்லா விதத்திலும் அதிபுத்திசாலியாயிற்றே ? இந்த அடிப்படைக்குப் பின்னால்தானே அந்த மாபெரும் கற்றளி அவரது மனதில் உதயமாகியிருக்க வேண்டும் ? What was his vision behind such a massive project ?

குடவாயில் அவர்களை பொறுத்தவரை இந்த அடிப்படைத் தத்துவமாக ஒன்றே ஒன்றுதான் மீண்டும் மீண்டும் எழுகிறது. இந்தத் தத்துவம்தான் அந்தக் கோயிலின் மூலை முடுக்குகளெல்லாம் பரந்து விரிந்துள்ளது. இதே தத்துவம்தான் அந்த மகத்தான விமானத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.

அந்தத் தத்துவம் இதுதான்.

அதாவது அந்த ஒட்டுமொத்த விமானமும் தூலக் கண்களால் காணமுடியாத - இறைவன் கொலுவீற்றிருக்கும் கையிலங்கிரியையே குறிப்பதாகும். அந்த விமானத்தின் அமைப்பு, அதற்கு பொற் தகடுகள் போர்த்தியமை* விமானத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் மகாமேரு விடங்க மூர்த்தி, உள்ளே அமைந்த பரசிவம் - எல்லாமே ஞானிகள் தமது ஞானக் கண்களால் கண்டு வர்ணித்த கையிலங்கிரியை தூலக் கண்களாலும் அனைவரும் காணவேண்டும் என்பதற்கான மன்னரின் முயற்சியே இது !

* இது குடவாயில் அவர்களின் மற்றொரு செய்தி - அதாவது மொத்த விமானமும் இராஜராஜர் காலத்தில் பொன் வேயப்பட்டிருந்ததாம் ! இதற்குச் சான்றாக துண்டுக் கல்வெட்டொன்றையும் தனது புத்தகத்தில் பதிப்பித்துள்ளார் அவர்.

தேவாரத்தில் - ஆளுடையப் பிள்ளையான சம்மந்தர் உட்பட பலரும் கயிலயங்கிரி பற்றிய விளக்கமான செய்திகளைத் தருகிறார்கள். அந்த செய்திகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு அமைக்கப்பட்டதே பெரியகோயிலான இராஜராஜேஸ்வரம் என்பது குடவாயில் அவர்களின் கருத்து.

மேற்கொண்டு பருத்தியூர் இராமர் திருடர்களிடம் பறிபோய் மீண்ட அனுபவம், உடையார்குடி அனந்தீசுவரம் கல்வெட்டு, நந்திபுரம், பஞ்சவன் மாதேவீச்சுரம், ஆடவல்லான் தத்துவம் என்று நாள் முழுவதும் தொடர்ந்த அவரது ஆய்வு மழையை நமது சிற்றறிவுக்குள் தேக்கி வாசகர்களுக்கு வழங்க மேலும் பலப்பல கட்டுரைகள் தேவைப்படும் என்பதால் இந்தக் கட்டுரையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.

பெரிய கோயில் ஒரு கலைக் களஞ்சியமெனில் அதனை குடவாயில் போன்ற அறிஞர்கள் விவரிக்கக் கேட்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சுகானுபவம்.

தஞ்சை பெரிய கோவில் எப்படி கட்டப்பட்ட்து ????



பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்ட்து பெரிய கோவில். பண்டைய தமிழர்களின் கலை திறனை இப்பொழுதும் சொல்லிக்கொண்டு ஆயிரம் ஆண்டுகலை கடந்து கம்பீரமாக நிற்கும் கோவில் இது. பரந்து விரிந்த இக்கோவிலைக் கண்டால் ஒவ்வொரு தமிழனின் மனதும் கண்டிப்பாக பரவசப்படும்.


டிஸ்கவரி சானலில் ,  கோவில் எப்படி அந்த காலத்தில் கட்டி இருந்து இருப்பார்கள் என்று டாக்குமெண்டரி அடிக்கடி காட்டுகின்றனர். அதைப் பார்த்த பிறகுதான், நமக்கும் பல கேள்விகள் எழுகின்றன
எப்படிய்யா, அவ்வளவு பெரிய கல்லை , தூக்கி மேல வைச்சாங்க..? எங்கே கிடைச்சு இருக்கும், எப்படி அங்கே இருந்து  தூக்கி வந்து இருப்பாங்க..? அதோட எடை இவ்வளவுன்னு எப்படி கண்டுபிடிக்கிறாங்க? அதுக்கு என்ன வழி ?
எதற்கு வேலை மெனக்கெட்டு இப்படி செய்யனும்? இவ்ளோ பெரிய விஷயம் பண்ணனும்னா, அப்போ உள்ள இருக்கிற கர்ப்பகிரகம் எவ்வளவு சக்தி வாய்ந்த கதிர்களையும் ஈர்க்க கூடியதா இருக்கணுமே! முகத்தில் அறையும் பிரமாண்டத்தையும் தாண்டி, காலம் காலமாக அருள் பாலித்து வரும் அந்த இறைவனின் மகத்துவம் எப்பேர்ப்பட்டது என்பதையும் மனப்பூர்வமாக உணர முடிகிறது.
எண்பது ஆயிரம் கிலோ  எடையுள்ள கல்லை, தற்போது உள்ள எந்த தொழில் நுட்பமும் இருந்து இருக்க வாய்ப்பில்லாத அந்த காலத்தில் , எப்படி கோபுரத்தின் உச்சியில் வைத்து இருக்க கூடும்? அதை தாங்கும் அளவுக்கு கோபுரம் வடிவமைக்கப்பட்டது? இவையெல்லாம், தற்போது இருக்கும் பொறியியல் வல்லுனர்களையே வியப்பில் ஆழ்த்தும் அதிசயங்கள்...
கிட்டத்தட்ட தென் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், ஒன்றுகூடி - உடல் உழைப்பு , பொருள் உதவி எல்லாம் செய்து  எழுப்பிய மகத்தான ஆலயம் இது. ராஜ ராஜ சோழன் என்னும் அரசன், ஒரு தனிமனிதன் தன் பெருமையை காலம் காலமாக நிலைக்க செய்த ஒரு செயல் , என்று நினைத்து , இங்கு நிலவும் தெய்வ சாந்நித்தியத்தை மறந்துவிட போகிறீர்கள்...
இங்கு உள்ள வராஹி - ஒரு மாபெரும் வரப்பிரசாதி. சோழர்களின் குல தெய்வமாக இருந்த துர்க்கை அம்மனுக்கு போர்படைத் தளபதி. கணபதிக்கு இணையாக முதல் வழிபாடு இங்கு இவளுக்கே என்னும்போது - நம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிகிறது.  அடுத்து நந்தி எம்பெருமான். பிரதோஷ நேரத்தில் , ஒருமுறை சென்று பாருங்கள்...

பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் - ராஜ ராஜ சோழனின் காலத்தில் , அரசருக்கு பலவிதங்களில் இந்த ஆலயம் அமைக்கும்போது வழி காட்டி இருந்து இருக்கிறார். சிவலிங்கம் மட்டும் 25 ,000  கிலோ எடையுள்ளது என்கிறார்கள்..... இப்போது புரிகிறதா? இது மனிதமுயற்சியையும் தாண்டி, தன் செல்லப் பிள்ளைகளான சித்தர்களையும் உடன் வைத்துக்கொண்டு - அருண்மொழி என்னும் கருவியின் மூலம் , சிவம் தன் சித்து விளையாட்டை நிகழ்த்தி இருப்பதை!
அருண்மொழித் தேவருக்கு, சிவம் எப்பேர்பட்ட பேறை அளித்து இருக்கிறது தெரியுமா? அவர் மூலமாக , சிவம் தான் உறைய  , தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட மாபெரும் அதிசயம் தான் , இந்த ஆலயம்.
மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பாருங்கள்...
புராதனக் கல்வெட்டு சாசனங்களையும் ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தையும் பற்பல தெய்வீக ரகசியங்களையும் உள்ளடக்கியது, தஞ்சை பெருவுடையார் கோயில். சுந்தர சோழர் வம்சத்தில் வந்த  சக்ரவர்த்தி ராஜராஜ சோழனால்  கோயில் எழுப்பப்பட்ட வரலாறு, நாடிச் சுவடியில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் காவிரியின் கரையில் கம்பீரமான 216 அடி விமான உயரமும், அதன் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட 80 டன் எடையுள்ள கலசத்தையும் பொருத்தி 9 அடி உயரமும், 23.5 அடி சுற்றளவும், 25 டன் எடையும் கொண்ட ஒரே கல்லால் ஆன பெருவுடையார் லிங்கத்தையும் தனது குருவான ‘ஹரதத்தர்’ ஆலோசனை பேரில் உருவாக்கினார் ராஜராஜ சோழன். நந்தி தேவனார் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்டு உயிர் ஊட்ட பெற்றவர். கோயிலுக்கு வாஸ்து சாந்தி செய்த பின்னரே நந்தி தேவரை நிறுவினார், சோமன் வர்மா என்ற தலைமை சிற்பி. 12 அடி உயரமும் 19.5 அடி நீளமும் கொண்டவர் நந்தி. ஆதலால், வாஸ்து புருஷன் தன் அருளாசியை பக்தர்களுக்கு எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

சொந்தவீடு, கடை, நிலம் போன்ற அசையாசொத்துகளை வாங்க எண்ணுபவரும், வாங்கியசொத்துகள் விருத்தி ஆகவும் அமாவாசைதிதியில் உச்சி வேளையில் நந்தியின்வால்புறத்தில் நின்று நந்தி சகஸ்ரநாமம்சொல்ல சித்திக்கும் என்கிறார்அகஸ்தியர்.

பெருவுடையார், பஞ்ச பூதங்களின் அம்சம். இவரை தொழுவது பஞ்ச பூத லிங்கங்களை தொழுவதற்கு சமம். சரும நோயினால் அவஸ்தைப்பட்ட சோழ மன்னர், நோயின் கொடுமை தீர ஆலய யாத்திரையை மேற்கொண்டார். அருணகிரிநாதருக்கு வந்த நோய்க்குச் சமமான நோயால் பீடிக்கப்பட்ட சோழன், தனது ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை என இந்நாளில் அழைக்கப்படும் தலை மன்னார் காடு உறை ஈசனைத் தொழச் சென்றார்.

அப்போது மன்னரின் குலகுருவும் உடன் இருக்க, கருவறையின் உள்ளிருந்து அசரீரி ஒலித்தது: ‘‘ராஜராஜனே, எமக்கொரு கோ இல் சமை.” இம்மொழி கேட்ட மன்னர் தன் நாடு மீண்டு மனைவி லோகமாதேவியோடு திருவாரூர் தியாகராசரைத் தொழுது நாடி கேட்டனர். அப்பொழுது அகஸ்திய மகரிஷியே வானில் தோன்றி ஆசி கூற, ஓலைச்சுவடி படிக்கப்பட்டது.

அதில் தஞ்சை, உறையூர், காஞ்சி என்ற மூன்று தலைநகர்களில் தஞ்சையில் காவிரிக்கரையில் கோயில் கட்டவும், இதற்கான கற்கள் திருச்சி மலைப் பகுதியிலிருந்து எடுக்கவும் ஆணை வந்தது. சிவனே நாடி படித்ததாக கூறுகிறார், சிவ வாக்கியர். நர்மதை தீரத்திலிருந்து மூலவருக்கு கற்களை கொணர்ந்து, அதில் ஒளி பொருந்தியதும், நீரோட்டம் நிறைந்ததுமான ஒரு லிங்க ஸ்வரூப கல்லை ப்ரஹந் நாயகி என்ற சோழரின் குலதெய்வம் காட்டி மறைந்தது. இந்தக் கல், லிங்க வடிவில் தானே பெரு வளர்ச்சி அடைந்ததால் இந்த லிங்க மூர்த்திக்கு ‘பெருவுடையார்’ என்ற பெயர் வழங்கி வருகிறது.

கோபுரத்தின் ஒரு பகுதியில் ஆங்கிலேயரின் உருவம் காணலாம். இது பின்னர் இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆள்வர் என்பதன் குறிப்பாகும். மேலும் பற்பல ரகசிய கல்வெட்டுக்கள் தேசத்தை ஆள்பவரின் பெயரையும் காட்டுகின்றன. ராஜராஜ சோழ மன்னரின் படமும், அவரது குரு ஹரி தத்தர் ஓவியமும் உள்ளது உள்ளபடியே வரையப்பட்டுள்ளன. நாடிச் சுவடிகளை படித்த முனிவர், ராஜராஜனின் நோய் நீங்கும், வம்சம் தழைக்கும் என்றெல்லாம் கூறி வந்தவர்,  காலத்தால் கோயில் சிதிலம் அடையாது இருக்க, ‘‘திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேரு” என்ற யாகத்தை செய்யச் சொன்னார்.

இந்த யாகம் 288 நாட்கள் நடைபெற்றது. சுமார் ஆறு மண்டல காலம். கோவிலை கைப்பற்றும் எண்ணத்தில் - மாற்று அரசர்கள், அமைச்சர்கள், அரசு பிரதானிகர்கள் யாரும், ஆலயத்துள் எவ்வகையில் நுழைந்தாலும் அவர்கள் சிம்மாசனத்தை இழப்பர்; குலம்  நசியும் என்று நந்தி மண்டபத்திலிருந்து அசரீரி ஒலித்தது. இதனாலேயே, பிரகதீஸ்வரன் சந்நதியுடைய தஞ்சை பெருங்கோயிலுக்கு அரசரோ, அவர் குடும்பத்தவரோ நுழைவது தீமை பயக்கும் என்கிறது, நாடி. இதனாலேயே மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்றவர்களிடமிருந்து இந்தக் கோயில் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
இங்கே, அஷ்டதிக் பாலகர்கள் அமர்ந்து வழிபாடு செய்கின்றனர். ஆறு அடி உயரம் கொண்ட இந்திரன், வருணன், அக்னி, ஈசானன், வாயு, நிருதி, யமன், குபேரன் போன்ற விக்ரகங்களைக் காணலாம். இவை ஜீவன் உடையவை. கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 தேய்பிறை பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது நாடி.
வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், கண்டிப்பாக விமோசனம் உண்டு. நாடியும் இதைத்தான் சொல்கிறது:

‘‘பேரிடர்  நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான்  பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே.’’

பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி,நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர்.

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு???

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது???

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.
இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது.உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம்.

ஆயிரம் ரூபாய் நோட்டு

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954&ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4&வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.

ஆயிரமாண்டு நிறைவு விழா
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது.

Thursday 24 October 2013

POLICE STATION



V.K.PUDUR POLICE STATION

View Police Station
Mother Village Hamlets
1. V.K.PUDUR1.    KALINGAPATTI
2.    ANNANAGAR
3.    RAMANOOR
4.    THAYARTHOPPU
5.    GOVINDAPERI
2. RAJAGOPALAPERI1.    ATHISAYAPURAM
3. VEERANAM1.    ENTHALOOR
2.    NATCHIYARPURAM
4. RAJAPANDI1.    CHEMPULIPATTINAM
5. KALUNEERKULAM1.    KALLUTHU
2.    ATHIYOOTHU

Friday 4 October 2013

நவராத்திரி

சிவனுக்கு உகந்த ஒரு ராத்திரி, சிவராத்திரி. சக்திக்கு உகந்த ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10–வது நாளான தசமி அன்று விஜயதசமி விழாவாகும்.

மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில்களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத்திரி விழா, வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று கூறினால் அது மிகையாகாது.

சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி யும் கொண்டாடப்படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேசுவரி, கவுமாரி, வராகியாகவும், இடை மூன்று தினங்களில் லட்சுமிதேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டியாகவும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. நவராத்திரி விழாவை வைணவர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்றன.

இந்தியா மட்டுமின்றி இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உலகில் உள்ள இந்து மக்கள் ஆகியோரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தார் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரதத்தை இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.

இந்த விரதம் பெண்களுக்கே உரியதாகும். அனைத்து வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயனாகும். அதே போல் இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.

நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு அமைக்கும் முறை:

முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின்

பொம்மைகள்.

இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

நாலாம்படி : நான்கறிவு உயிர்களாக விளங்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

ஐந்தாம்படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள்,

பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்

ஆறாம்படி: ஆறறிவு மனிதர்கள்

பொம்மைகள்.

ஏழாம்படி: மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

எட்டாம்படி: தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவகிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

ஒன்பதாம்படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர். அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.



நவராத்திரி வழிபாட்டு முறை:

முதலாம் நாள்: சாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபம் கொண்ட அன்னை. நீதியைக் காக்கவே கோபமாகக் காட்சியளிக்கிறாள்.

நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல்.

இரண்டாம் நாள்: அன்னையை வாராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

நிவேதனம் : தயிர்சாதம்.

மூன்றாம் நாள்: சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்ரி, சாம்ராஜ்யதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி. பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

நிவேதனம்: வெண்பொங்கல்.

நான்காம் நாள்: அன்னையை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். இவள் தீயவற்றை சம்ஹரிப்பவள்.

நிவேதனம் : எலுமிச்சை சாதம்.

ஐந்தாம் நாள்: அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். இவள் சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். க டின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற

அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

நிவேதனம் : புளியோதரை.

ஆறாம் நாள்: அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். இவள் தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்குபவள். வீரத்தைத் தருபவள்.

நிவேதனம் : தேங்காய் சாதம்.

ஏழாம் நாள்: அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும். இவள் விஷ்ணு பத்தினி. தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.

நிவேதனம் : கற்கண்டு சாதம்.

எட்டாம் நாள்: அன்னையை நரசிம்ஹியாக வழிபடவேண்டும். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.

நிவேதனம் : சர்க்கரைப் பொங்கல்.

ஒன்பதாம் நாள்: அன்னையை ப்ராஹ்மி (சரஸ்வதி )ஆக வழிபடவேண்டும். இவள் வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியம்.

நிவேதனம் : சுண்டல்