Saturday 14 July 2018

தேடிவந்து அருள்பாலிக்கும் தேவி -அழகு பார்வதி அம்மன்


குற்றால மலையில் இருந்து ஓடி வரும் சிற்றாறும், சொக்கம்பட்டி வழியாக ஓடி வரும் கருப்ப நதியும் சங்கமிக்கும் அற்புத பூமி, சுரண்டை. இங்கு விவசாய விளைச்சலுக்குப் பஞ்சமில்லை; பக்தி விளைச்சலுக்கும் குறைவில்லை. சுரண்டை ஜமீன்தார்கள் கோயில் கட்ட இடம்கொடுத்தனர். மண்டகப்படி திருவிழாவை ஏற்படுத்தினர். கஷ்டம் பல வந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில் தங்களால் பலமுறை கப்பம் கட்ட முடியாமல் தங்கள் ஜமீன் ஏலத்துக்கு சென்றபோதும் தாங்கள் உருவாக்கிய கோயில்களை மறக்கவில்லை. தாங்கள் செய்யும் பணிவிடைகளை இன்றளவும் அவர்களுடைய வாரிசுகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
தென்னகத்தில் உருவான 72 பாளையங்களுள் ஒன்று சுரண்டை. ஆங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கு பாளையத்தினை நாயக்கர்களும், மேற்கு பாளையத்தினை மறவர்களும் ஆண்டு வந்தனர். மறவர் ஜமீனில் சுரண்டை முக்கியமானதாக விளங்கியது.

இந்த ஜமீன்தார்கள் வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்குக் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாக செலுத்திவிட்டு, மீதி பணத்தினை வைத்து சுகபோகமாக வாழ்ந்தார்கள். இவர்களில் சிலர் கப்பம் கட்ட விரும்பாமல் ஆங்கிலேயருக்கு எதிராகக் கலகம் செய்தனர். இதனால் பல ஜமீனை ஏலத்துக்கு விட்டனர் ஆங்கிலேயர்கள். இந்தவகையில் நான்கு முறை கப்பம் கட்ட முடியாமல் சுரண்டை ஜமீன் ஏலத்துக்கு வந்துள்ளது. அந்த சமயத்தில், ஊத்து மலை ஜமீன்தார் இருதலாய மருத்தப்பர் தலையிட்டு ஜமீனை மீட்டுக் கொடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் சிவனு சாலுவ கட்டாரி பாண்டியன் என்பவர் அந்த ஜமீனை ஆண்டு வந்திருக்கிறார் என்று தெரிகிறது. இவர் ஆட்சியின்போதுதான் சுரண்டையில் அழகு பார்வதியம்மன் கோயிலில் திருவிழா உருவானது என்றும் கூறுகிறார்கள். இன்றைக்கும் 10 நாள் கொண்டாட்டமாக நடை பெறும் இந்தத் திருவிழாவின் முதல் மண்டகப் படியே ஜமீன் அரண்மனைக்குரியதுதான்.

கட்டாரி பாண்டியன், சீரோடும் சிறப்போடும் ஊத்துமலை ஜமீனுக்கு நிகரான செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்தார். எனவே இவருக்கு ஊத்துமலை ஜமீன்தாரின் சகோதரி இந்திர மருத நாச்சியாரை மணமுடித்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே கட்டாரி பாண்டியன் இறந்த பிறகு நாச்சியார் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு உதவியாக இருந்த தம்பி இந்திர தலைவன், நாச்சியாரின் காலத்துக்கு பிறகு பட்டத்துக்கு வந்தார். இவர் ஆட்சி காலத்திலும் சுரண்டை ஜமீன் ஏலத்துக்கு வந்துள்ளது. இவர்களின் அரண்மனை ஏலத்துக்கு வந்தபோது சுந்தரபாண்டியபுரத்தினை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்தார். அரண்மனை இருந்த இடத்தில் இப்போது கிராம மக்களின் வீடுகள் காணப்படுகின்றன. அரண்மனை இருந்ததற்கான சான்றாக கோட்டைத் தெரு மட்டும் உள்ளது. தற்போது ஜமீன் வாரிசுகள் வசிக்கும் இடம் ஒரு காலத்தில் விருந்தினர் மாளிகையாக இருந்துள்ளது.

மிக பிரமாண்டமான மூன்று மாடி கட்டிடம் அது. கலைநயம் மிக்கது. மூன்றாவது மாடியில் மணிப்பாரா உள்ளது. இந்த மணிப்பாரா, ஜமீன் ஆட்சி காலத்தில் காவலர்கள் கண்காணிப்புத் தளமாக இருந்தது. வாரிசுகள் இங்கு வசித்தபோது, பிரச்னைகள் பல ஏற்பட்டன. எனவே வாஸ்து சாஸ்திரப்படி முன்பக்கம் வாசல் சரியில்லை என்று அதை அடைத்து விட்டு பின்பக்க வாசலை பிரதான வாசலாகப் பயன்படுத்தி வருகிறார்கள். வராண்டாவில் ஊஞ்சல் ஆடுகிறது. அருகே ஜமீன்தார்கள் பயன்படுத்திய வேட்டை துப்பாக்கி சுவரில் மாட்டப்பட்டுள்ளது. மூன்று மாடி ஏறிப்போனால் மணிப்பாராவை எட்டலாம். இந்திர தலைவரின் மகன் தங்கராஜ்பாண்டியன், இவரை அடுத்து இவரது மனைவி அன்னபூரணி நாச்சியார் என்னும் கருத்த துரைச்சி - இவர்களுக்குப் பிறகு, மூத்த மகனான சிவஞானராஜா, தற்போதைய சுரண்டை ஜமீன்தாராக உள்ளார். இவருடைய மகன், எஸ்.கே.பி. ராஜா, கோயிலில் நடைபெறும் பரிவட்டம் உள்பட ஜமீன் மரியாதைகளை ஏற்று வருகிறார். சுமார் 120 வருடங்களுக்கு முன்பு நடந்த வரலாறு இது:

இருதாலய மருதப்பதேவர் ஊத்துமலை ஜமீனை ஆண்டு வந்தார். இவருடைய பெண்ணை மணந்து மருமகனானவர், சுரண்டை ஜமீன்தாரான கட்டாரி பாண்டியன். மருமகனுக்கு அனைத்து சீர்வரிசை, மாலை மரியாதை எல்லாமே திரு விழாக்களில் வழங்கப்படுவதை மாமனார் உறுதிசெய்தார். ஆனால், கட்டாரி பாண்டியன் வித்தியாசமானவர். தன்னைப் போலவே தனது நண்பர்களுக்கும் மதிப்பும், மரியாதையும் தரவேண்டும் என்ற எண்ணங்கொண்டவர். எனவே திருவிழாக்காலங்களில் சுரண்டையில் இருந்து அனைத்து சமுதாய மக்களையும் திரட்டிக்கொண்டு சென்று விடுவார். சபையில் தனக்கு தரும் சிறப்பு மரியாதைபோலவே, கொஞ்சமும் குறைவின்றி தன் நண்பர்களுக்கும் தரப்படவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். வீரகேரளம் புதூர் நவநீத கிருஷ்ணன் கோயில் பங்குனி திருவிழாவில் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. சுரண்டை மக்களுக்கு வழங்கப்பட்ட உணவில் உப்பு இல்லை.

இதனால் அவர்கள் நல்ல உணவு வேண்டும் என்று கோர, அங்குள்ள ஊழியர்களுக்கும் சுரண்டைக்காரர் களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊத்துமலை ஜமீன் ஊழியர்கள், அவர்களைப் பாதி சாப்பாட்டிலேயே வலுக்கட்டாயமாக எழுந்திருக்கச் செய்தனர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட சுரண்டை ஜமீன்தார் கோபமுற்று, தனது ஊர்க்காரர்களை அழைத்துக்கொண்டு பாதி திருவிழாவிலேயே ஊருக்கு திரும்பி விட்டார். தகவலறிந்த இருதாலய மருதப்பர் தனது மருமகனை எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். ஆனால், அவர் சமாதானமாகவில்லை. சுரண்டைக்கு வந்த ஜமீன்தார், பலமுறை ஏலத்துக்கு வந்த தன் ஜமீனைக் காப்பாற்றித் தந்தது இருதாலய மருதப்பர்தான். என்றாலும், தனது ஊர்க்காரர்கள் மான மரியாதையை இழப்பது சரியா என்றெல்லாம் யோசித்தார். திருவிழாவை அந்தக் கோயிலில் நடத்துவதால்தானே தம் மக்கள் அங்கு செல்கிறார்கள், அதே திருவிழாவை நமது ஊரில் நடத்தினால் என்ன என்று சிந்தித்தார்.

ஒரு அம்மன் தமது முன்னோர்களிடம் இடம் கேட்டு அமர்ந்து ‘கேட்ட வரம் தரும் அம்ம’னாக சுரண்டையில் அருள்பாலிக்கும் வரலாறு அவருக்கு நினைவுக்கு வந்தது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுரண்டை பகுதியில் இலந்த குளம் கரையில் காளியம்மனை வைத்து வணங்கி வந்தனர். இங்கு வாழ்ந்த நாடார் சமுதாயத்தினர் இருவர் பொதி மாட்டில் பஞ்சு பொதியை ஏற்றிக்கொண்டு சிவகாசி பகுதிக்கு வியாபாரத்துக்கு சென்றனர். அங்கே வியாபாரத்தினை முடித்துவிட்டு ஒரு வேப்பமரத்தடியில் தங்கினர். அவர்கள் முன்பு சிறு பெண்ணாக தோன்றிய அம்மன், அவர்களிடம் உணவு கேட்டார். அவர்கள், “நாங்களோ வியாபாரிகள். இந்த இடத்தில் உணவு கேட்டால் எப்படி கிடைக்கும்? எங்கள் ஊருக்கு வந்தால் உணவு கொடுப்போம்” என்று கூறினர். “சரி, அப்போ ஊருக்கு வருகிறேன்” என்று அந்த பெண் சொன்னாள். அவர்களும், “உன்னால் நடந்து வரமுடிந்தால் வா” என்று கூறி விட்டுக் கிளம்பினர்.

சித்திரை மாதத்து வெயிலில் இருவரும் பொதி மாட்டுடன் சுரண்டைக்கு வந்தனர். பொதி மாட்டை காளியம்மன் கோயில் முன்பு கட்டினர். அப்போது தங்கள் பின்னாலேயே வந்துகொண்டிருந்த அந்த பெண் திடீரென மறைந்து விட்டாள்! திகைத்துப்போன வியாபாரிகள் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தனர். பிறகு, ‘பாவம், எங்கே போனாளோ’ என்று வருந்தியபடி தம் வீட்டிற்குச் சென்றனர். அந்த பெண்ணின் நினைவே சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு அயர்ச்சியில் தூங்கிவிட்டார்கள்.
அன்றிரவு ஒரேநேரத்தில் அந்த வியாபாரிகள் மற்றும் சுரண்டை ஜமீன்தார் கனவில், தோன்றினாள் அப்பெண். “நான்தான் அம்மன். இவ்வூர் மக்களை பாதுகாக்க நான் இங்கு உறைய விரும்புகிறேன். எனக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள்,’’ என்றாள். காலையில், கனவால் ஏற்பட்ட குழப்பத்துடன் ஜமீன்தார் நின்றிருந்தபோது வியாபாரிகள் இருவரும் ஓடோடி வந்தனர்.

அவரிடம் தாங்கள் ஒரு பெண்ணை சந்தித்த விவரத்தைச் சொன்ன அவர்கள், “எங்க கூடவே சின்னப் பொண்ணாட்டம் வந்த அம்மன், காளியம்மன் கோயில்கிட்டே நின்னுகிட்டு நிலையம் கேக்கா... அது ஜமீனுக்கு உள்பட்ட இடம். நீங்க அனுமதி கொடுத்தா அவளுக்கு அங்கே நிலையம் கொடுக்கலாம்,’’ என்றனர். இரவில் தன் கனவில் வந்த அதே பெண்ணைத்தான் இவர்களும் சந்தித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த ஜமீன்தார், அவள் நிச்சயம் விசேஷமான தெய்வம்தான் என்பதை உறுதிசெய்துகொண்டார். உடனே, இலந்த குளம் உள்பட 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை கோயிலுக்கு ஜமீன்தார் கொடுத்து விட்டார். அந்த இடத்தில் ஓர் ஓலைக் குடிசையில் அம்மனை பிரதிஷ்டை செய்தார்கள். அம்மன் சிறு பெண்ணாக, சிரித்தமுகத்துடன் வியாபாரிகளை சந்தித்ததாலும், அவளது சலங்கை சத்தம் இனிமையாக ஒலித்ததாலும் அவளுக்கு ‘அழகு பார்வதி அம்மன்’ என்று பெயர் வைத்தனர். காளியம்மன் திருக்கோயில் அருகேயே அழகு பார்வதி அம்மனும் நிலையம் கொண்டிருந்தாலும், இருவருமே காக்கும் தெய்வமானார்கள்.


நாளாக ஆக, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து, கேட்ட வரம் தந்த அந்த அம்மனை தரிசிக்கப் பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்தனர்; இன்றும் வந்து கொண்டிருக்கிறார்கள். மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் கோயிலில் கொடைவிழா நடைபெறும். விழாவில் முதல் சுருளை ஜமீன்தார் கொடுப்பார். கோயிலை வணங்க வணங்க வியாபாரிகள் குடும்பத்தினர் தழைத்தோங்கினர். உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூருக்கும் சென்று பெரிய அளவில் முன்னேறினர். நாளாவட்டத்தில் ஓலைக் குடிசை, ஜமீன்தார் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் கைங்கரியத்தால் காரைக்கட்டிடம் ஆனது. ஊரிலுள்ள அனைத்து சமுதாயத்தினரும் வணங்கும் தெய்வமாக அழகு பார்வதி விளங்கினாள். ஊத்துமலை ஜமீனுக்குப் போவானேன், நம் ஜமீனிலுள்ள அழகு பார்வதி அம்மனுக்குத் திருவிழா நடத்தினால் என்ன என்று சுரண்டை ஜமீன்தாருக்குத் தோன்றியது. அதற்காக ஊர் மக்களை ஒன்று கூட்டினார்.

ஊத்துமலை திருவிழாவில் தன் கிராமத்தாருக்கு நேர்ந்த அவமரியாதை சுரண்டை ஜமீன்தாரை மனவருத்தமடையச் செய்தது. அங்குபோய் திருவிழாவில் பங்கேற்பானேன், நாமே நம் ஜமீனிலேயே அதை நடத்தி நம் மக்களை மகிழ்விப்போமே என்று கருதினார். ஊர் மக்களும் அவர் கருத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். ஊத்துமலை ஜமீனைப்போலவே தேர் மற்றும் தெப்பத் திருவிழாக்களை நடத்த தீர்மானித்தனர்.



உடனே உள்ளூர் தச்சர்களைக் கொண்டே தேரை உருவாக்கினர். இந்தப் பணியை அங்கீகரிக்கும் வகையில் திருவிழாவின் பத்தாம் நாள் மண்டகப்படியை, தேர் உருவாக்கிய அந்தக் கலைஞர்களுக்கு அளித்தார் சுரண்டை ஜமீன்தார். அன்றிலிருந்து இன்றுவரை 10ம் திருநாள் மண்டகப்படியை விஸ்வகர்ம சமூகத்தினர் சிறப்புடன் செய்து வருகிறார்கள். இந்த ஏற்பாட்டின்படி திருவிழாவின் 10ம் நாளில் சப்பரத்தில் அம்மன் வீதி உலா புறப்படுவார்.

தச்சர் பெருமக்கள் குடியிருக்கும் தெருவுக்கு செல்வார். அம்மனை அவர்கள் தங்களது வீட்டுக் குழந்தைபோலவே பாவித்து மாலை அணிவித்து குடும்பத்தோடு வணங்கி மகிழ்வர். அதன் பிறகே அம்மன் கோயிலுக்கு திரும்புவார். திருவிழாவின் முதல்நாள் மண்டகப்படி ஜமீந்தாரால் நடத்தப்படுகிறது. இதில் ஜமீனின் இளைய ராஜாவான எஸ்.கே.பி. ராஜாவுக்கு மாலை மரியாதை செய்து பரிவட்டம் கட்டி, முதல்மரியாதை செய்யப்படுகிறது. இரண்டாம் நாள் மண்டகப்படி, தேவர் சமுதாயத்துக்குரியது.

மூன்றாம் நாள் மண்டகப்படி, செட்டியார் மற்றும் பிள்ளைமார் சார்பில் நடத்தப்படுகிறது. நான்காம் நாள் மண்டகப்படி, நாடார் சமுதாயத்தினருக்குரியது. (சிவகாசியிலிருந்து வியாபாரத்துக்குச் சென்றபோது அழகு பார்வதி அம்மனை அழைத்து வந்தவர்கள் இவர்கள்தானே!) ஐந்தாவது நாள் மண்டகப்படி முதலியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது. ஆறாவது நாள், படையாச்சி சமுதாயத்தினரும், ஏழாவது நாள் கிளையில்லா தேவர் சமுதாயத்தினரும் மண்டகப்படியைத் திறம்பட நடத்தி வருகிறார்கள்.

எட்டாம் நாள் அனைத்து சமுதாயத்தினர் சார்பிலும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பூப்பண்டார சமுதாயத்தினர் திரளாகக் கலந்துகொள்கிறார்கள். அப்போது வேண்டுதலை நிறைவேற்ற ஆயிரங்கண் பானை உருவம் மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபடுவர். நேர்ச்சை பொருட்களை கைகளில் வைத்து மார்போடு அணைத்தவாறு தங்கள் பிரச்னையை தீர்க்கக்கோரி அம்மனை மனமுருக வணங்குவர். அவர்கள் கேட்ட வரம் கிடைத்ததும், மறுவருடம் சந்தோஷமாக நன்றி செலுத்த வருவார்கள். அம்மனுக்கு பட்டு பரிவட்டங்களை காணிக்கையாக செலுத்தி மகிழ்வார்கள்.


ஒன்பதாவது நாள், தேரோட்டம். அம்மன் ஒய்யாரமாய் தேரில் எழுந்தருளி பவனி வருவார். திரளான பக்தர்கள் ஒருசேர தேர் இழுப்பார்கள். பத்தாவது நாள் ஜமீன்தார் உத்தரவுப்படி தச்சர்கள் தெருவில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளுவார். சுரண்டை ஊருக்குள் நுழையும் போது காணப்படும் பிரமாண்டமான வரவேற்பு வளைவு, அம்மனின் அருளாட்சியைப் பறைசாற்றுகிறது. கோயிலில் ஒய்யாரமாய் அழகு பார்வதி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

ஆதிகாலத்தில் இங்கு வீற்றிருந்த காளியம்மன் தற்போதும் தென்பகுதியில் அருள் வழங்குகிறார். இவருக்கு அசைவ படையல். ஆனால் அழகு பார்வதி அம்மனுக்கு எப்போதும் சைவப் படையல்தான். கோயிலுக்கு தெற்கு வாசலும் உண்டு. இங்கு பிள்ளையார், பாலமுருகன், காவல் தெய்வமாக கருப்பசாமி ஆகியோர் உள்ளனர். தேர்த் திருவிழா மட்டுமின்றி ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுகின்றன. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, விளக்கு பூஜை நடக்கிறது. இதில் சுரண்டை மட்டுமின்றி சுற்று வட்டார கிராம பெண்களும் பங்கேற்கிறார்கள்.

ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி. அன்று திருமணத்தடை நீங்கவும், குழந்தைவரம் வேண்டியும் பெண்கள் அம்மனை வழிபடுவர். அம்மன் அருளால் மறுவருடமே, தாம் கோரிய வரம் நிறைவேறி மகிழ்வர். சிவராத்திரியின்போது பத்து நாள் திருவிழா மற்றும் கந்த சஷ்டி திருவிழா ஆகியவையும் இங்கே சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் கார்த்திகை நட்சத்திர நாளிலும் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளுவார்.

இப்பகுதியில் மற்றொரு ஆலயமும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் ஒரு பின்னணி உண்டு. சுரண்டை ஜமீன்தார் ஏகோபித்த புகழுடன், வளத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் பெரும்படை வைத்திருந்தார். இந்தப் படை சிறப்பாக விளங்க, ராமநாதபுரத்திலிருந்து வந்த சிவனுபாண்டி, பரமசிவபாண்டி ஆகிய இரு படைவீரர்களே முக்கிய காரணம். எதிரிகளுக்கு இவர்களைக் கண்டாலேயே அடிவயிறு கலங்கும். இருவரும் பிரம்மசாரிகள். தங்களது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தனர். சுரண்டை ஜமீன்தாருக்கு மெய்க்காவலர்களாகத் திகழ்ந்தனர்.



அந்த காலத்தில் சுரண்டை ஜமீனுக்கும், நடுவக்குறிச்சி ஜமீனுக்கும் அடிக்கடி பகை மூண்டது. ஒவ்வொரு முறையும் தான் தோல்வியையே அடைவதைக் கண்டு மனம் வெறுத்த நடுவக்குறிச்சி ஜமீன்தார், சுரண்டை ஜமீன்தாரின் இரு மெய்க்காவலர்கள்தான் அந்தத் தோல்விகளுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களை எப்படியாவது கொன்றுவிட திட்டமிட்டார்.

ஒற்றர்கள் மூலம் அவர்களை அணுகி பணத்தாசை காட்டித் தம் பக்கம் இழுக்க முனைந்தார். ஆனால், சுரண்டை ஜமீன்தாருக்கே தாங்கள் விசுவாசமாக இருப்பவர்கள் என்றும் யாராலும், எந்த காரணத்தாலும் தங்களை சோரம் போகச் செய்யமுடியாது என்று உறுதியாக நின்றனர் அந்த இளைஞர்கள். ஆனாலும் நடுவக்குறிச்சி ஜமீன்தார் முயற்சியை விட்டுவிடவில்லை.

சுரண்டை ஜமீன்தார் அரண்மனையில் அந்த இரு வீரர்களுக்கு பிடிக்காத கணக்குப் பிள்ளை ஒருவர் இருந்தது அவருக்குத் தெரியவந்தது. அவரைத் தன் வசமாக்கி அவர் மூலம் காயை நகர்த்தினார். ‘சிவனையும், பரமசிவனையும் பெரும்தொகை கொடுத்து எங்களுக்கு அடிமையாக்கிவிட்டோம். இனி அவர்கள் எங்களுக்கு சாதகமாகத்தான் போர்புரிவார்கள்’ என்று ஒரு புரளியைக் கிளப்பினர். அதைக் கேட்ட கணக்குப் பிள்ளைக்கு கோபம் வந்து விட்டது.

ஏற்கெனவே அவர்கள் அவருக்கு ஆகாதவர்களாக இருந்தார்கள். உடனே அரண்மனைக்குப் போய் ஜமீன்தாரிடம், அவ்விருவரும் துரோகிகள், ஜமீனுக்கு எதிராகக் கலகம் செய்ய துணிந்து விட்டார்கள் என்று கூறினார். ஏற்கனவே ஒற்றர்கள் மூலம் நடுவக்குறிச்சி ஜமீன்தாரின் ஆட்கள் அவ்வீரர்களின் வீட்டுக்கு வந்ததை அறிந்திருந்த ஜமீன்தார், கணக்குப்பிள்ளை கூறியதை நம்பினார். இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அந்தப் பொறுப்பை கணக்குப் பிள்ளையிடமே ஒப்படைத்தார்.

இதற்காகவே காத்திருந்த கணக்கு பிள்ளையும் தனக்கு விசுவாசமான ஏவலாட்களுடன் இருவரையும் தீர்த்துக்கட்ட தருணம் பார்த்தார். ஒருநாள் நடுவக்குறிச்சி ஜமீன்தாரின் ஆட்கள் சுரண்டை ஜமீன்தார் வயலில் நெற்கதிர்களைத் திருடியபோது விவரம் அறிந்த பரமசிவன், சிவனுபாண்டி இருவரும் வயற்காட்டிற்கு வந்தனர்.

பாய்ந்து சென்று நடுவக்குறிச்சி ஜமீன் படை வீரர்களை விரட்டி அடித்தார்கள். திருடர்களிடமிருந்து நெல் மூட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டு வெற்றிக் களிப்புடன் இருவரும் ஜமீன் அரண்மனையை நோக்கிச் சென்றபோது கணக்குப் பிள்ளையின் ஏவலாட்கள் திடீரென எதிர்ப்பட்டு அவ்விருவருடைய தலைகளையும் வாளால் கொய்தனர்.

தன் பேரப்பிள்ளைகள் கொலையுண்டதை அறிந்த பாட்டி, ஓடோடி வந்து அந்த சடலங்களைப் பார்த்து அழுது அரற்றினாள். சுரண்டை ஜமீனே கதி என்று கிடந்த தனது பேரன்களை அதே ஜமீன்தார்தான் கொலை செய்திருக்கிறார் என்றறிந்ததும் மேலும் ஆவேசமானார். உடனே அரண்மனை நோக்கிச் சென்று ஆத்திரம் மிக, மண்ணை அள்ளி வீசி சாபமிட்டார்: ‘நீயே கதி என்று கிடந்த எனது பேரன்கள் இருவரையும் நம்ப வைத்து கழுத்தறுத்தாயே! உனது அரண்மனை இப்போதே அழிந்து போகும்,’ என்று சபித்ததோடு தானும் அங்கேயே விழுந்து இறந்தார்.
காலங்கள் உருண்டோடின. பாட்டியின் சாபம் பலித்தது. அரண்மனை அழிந்துபட்டது. ஜமீன்தார் வாரிசுகளும் விருந்தினர் மாளிகைக்கு குடியிருப்பை மாற்றினர். அரண்மனை இருந்த இடம் இப்போது பொதுமக்கள் குடியிருப்பாக மாறிவிட்டது. தொடர்ந்து வாரிசுகளுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டன. கணக்குப் பிள்ளை குடும்பத்தாரும் பிரச்னையிலிருந்து தப்பவில்லை.

இதற்கான பரிகாரத்தை மலையாள மந்திரவாதி களிடம் கேட்டபோது, ‘சிவனு பாண்டியும், பரமசிவ பாண்டியும் நல்ல ஜீவன்கள். கடைசிவரைக்கு அரண்மனைக்கு விசுவாசமாக இருந்தவர்கள். ஜமீன்தார் அவர்களை பலி வாங்கியதால் அவர்களுடைய ஆன்மாக்கள் அமைதியடையாமல் அலைந்துகொண்டிருக்கின்றன. அவை சாந்தியடைந்தால் எல்லா பிரச்னையும் தீரும்’ என்றனர்.

அழகு பார்வதி அம்மன்கோயில் அருகே மேற்கு நோக்கி இருவருக்கும் பீடம் அமைத்து வணங்க ஆரம்பித்தனர். அதன் பிறகு பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து விட்டது. வேண்டும் வரம் தரும் தெய்வமாக சிவனு பாண்டியும், பரமசிவ பாண்டியும் விளங்குகின்றனர். தற்போதைய ஜமீன்தார் வாரிசு சிவஞான ராஜா அந்த ஆலயத்துக்கு மணி மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார். இத்தனை பிரச்னைக்கும் மூலகாரணமான நடுவக்குறிச்சி ஜமீன் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

1910ம் ஆண்டு அரசு ஆவணப்படி, கடைசியாக இங்கு ராமசாமி ஜமீன்தார் என்பவர் ஆண்டு வந்தார் என்ற குறிப்பு மட்டுமே காணப்படுகிறது. சிவனு பாண்டி, பரமசிவபாண்டிக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கணக்குப் பிள்ளை வாரிசுகள் கொடை கொடுக்கின்றனர். இதில் ஜமீன்தாரும் கலந்துகொள்கிறார். இந்தக் கோயில் கொடைவிழாவின்போது வேளாளர் வீட்டில் இருந்து சிவனு பாண்டி, பரமசிவபாண்டி மற்றும் அவர்கள் வளர்த்த நாய் முதலிய மண்சிலைகளை தலைச்சுமையாக அரண்மனைக்குக் கொண்டு வருகிறார்கள்.

அங்கே பூசாரி மூன்று சிலைகளுக்கும் ஜமீன்தார் முன்னிலையில் கண் திறந்து வைப்பார். அதன்பின் சிலைகளைக் கோயிலில் வைத்து கொடைவிழா கொண்டாடுவார்கள். இந்தக் கோயில் பெயரையே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதுடன் குழந்தைக்கு காது குத்துதல், மொட்டைபோடுதல் போன்றவற்றையும் பல பக்தர்கள் இங்கேயே செய்கின்றனர். வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷகாலங்களில் குடும்பத்துடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.



1 comment:

  1. Brother please give your mobile number,I have some useful information about this blog

    ReplyDelete