Sunday 22 March 2015

இது தமிழர்

முதல் இரண்டு தமிழ்ச்சங்கங்களில் உருவான பல அரிய தமிழ்க்கலை நூல்களை தின்றழித்த தாமிரபரணியின் கரையில்தான் இந்த தமிழ்ப்புரட்சியும் நடந்து வருகிறது. காடாகக் கிடந்த 120 ஏக்கர் பரப்பை செதுக்கிச் செப்பனிட்டு, ‘தமிழூர்’ என்ற ஒரு கிராமத்தையே நிர்மாணித்திருக்கிறார் ச.வே.சு என்று அன்பாக அழைக்கப்படும் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன். தமிழின் தொன்மத்தை நிறுவும் பல்வேறு ஆராய்ச்சிகள் தமிழூரில் நடந்து வருகின்றன. 25 ஆயிரம் அரிய நூல்களைக் கொண்ட மூன்று நூலகங்கள் எந்நேரமும் ஆய்வு மாணவர்களால் நிரம்பி வழிகின்றன.
முழங்காலுக்கு மேலான வேட்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு... டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஏதுமறியாத கிராமத்துப் பெரியவரைப் போல காட்சியளிக்கிறார் ச.வே.சு. ‘தமிழ்ப்பழம்’ என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். வீரகேரளம்புதூரைச் சேர்ந்த இவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும், கேரள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பணி செய்ய ஆரம்பித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குனராக உயர்ந்தவர். ‘‘ச.வே.சு சிலப்பதிகாரம் நடத்தினால் வகுப்பறை முழுவதும் தமிழும் இசையும் ததும்பி நிற்கும்’’ என்கிறார்கள் அவரது மாணவர்கள்.

ஓய்வுக்குப் பிறகு, தம் சொந்த ஊருக்கு அருகிலேயே தமிழூரை நிர்மாணித்து, சங்க இலக்கிய ஆய்வுகள், இலக்கிய உரைகள் என எந்நேரமும் தமிழும், இலக்கியமுமாகவே வாழ்கிறார். 84 வயதான இவரது பணியை மெச்சி, சாகித்ய அகாடமியின் பாஷா சன்மான் உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.

‘‘இது எனது நெடுநாள் கனவு. உலகில் வேறெந்த சமூகத்துக்கும் தம் மொழியின் பால் இவ்வளவு அலட்சியம் இல்லை. தமிழ் பிழைப்புக்குரிய முதலீடாக இங்கே மாறிவிட்டது. தமிழாசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் படிக்க வைக்க தயங்குகிறார்கள். சங்க இலக்கியங்கள்தான் நம் மொழியின் செழுமைக்கும், தொன்மைக்கும் சான்று. அதை சர்வதேச தளத்தில் நிறுவுவதற்கான ஆய்வுகள், ஏற்பாடுகள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. நிறைய வரலாறு பதிவு செய்யப்படாமல் கிடக்கிறது’’ என்று வருந்துகிற ச.வே.சு, இதுவரை 170 நூல்களை எழுதியிருக்கிறார்.

ஆலங்குளத்துக்கும் தென்காசிக்கும் இடையில், பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கிறது தமிழூர். அரசுப்பதிவேடுகளும் இப்பெயரை அங்கீகரித்துள்ளன. ச.வே.சு இங்கு வரும்முன்பு, அத்தியூத்து கிராமத்தின் ஒரு அங்கமாக இப்பகுதி இருந்தது. 1985ல் இந்த இடத்தை வாங்கிய ச.வே.சு, இதை ஒரு கல்வி கிராமமாக மாற்றும் எண்ணத்தில் 35 ஏக்கர் நிலத்தை ஒரு பொறியியல் கல்லூரிக்குக் கொடுத்தார். அருகில் ஒரு வேளாண்மைக் கல்லூரியையும் தொடங்கினார். தென்னந்தோப்பு, மாந்தோப்புகளை உருவாக்கினார். உலகத்தமிழ் கல்வி இயக்கம் என்ற அமைப்பு தொடங்கி, சர்வதேச அளவில் தமிழ் பற்றி ஆய்வுசெய்யும் மாணவர்களை ஒருங்கிணைத்தார். குடியிருப்புகளையும் உருவாக்கினார். தற்போது வேளாண் கல்லூரி செயல்படவில்லை. குடியிருப்புகளில் ஆய்வு மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள். ஊரின் நடுவில் தனக்கென ஒரு வீட்டையும் கட்டியிருக்கிறார். வீட்டின் பெயர் தமிழகம்.


‘‘தமிழ்ல இருக்கிற பழமையான இலக்கியங்களை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை என்னைப் போன்றவங்களுக்கு இருக்கு. இலக்கியங்கள்தான் நமக்கு சொத்து. ஆனால், மொழி மேம்பாட்டுக்கான ஆதரவும் இங்கே குறைவா இருக்கு. அந்தக்காலத்தில் தமிழ்ப்பணிக்காக பெரும் செல்வங்களைக்கூட இழந்தவர்கள் இருந்தார்கள். எங்கள் வீரகேரளம்புதூரை உள்ளடக்கிய ஊத்துமலை ஜமீன் இருதாலய மருதப்பர், 37 கவிஞர்களைக் கொண்டு ஊத்துமலை பிரபந்த திரட்டு ஒன்றை உருவாக்கினார். அந்தத் திரட்டின் ஒரு பிரதியை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன். காவடிச்சிந்து இயற்றிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்ற பலரை அரவணைத்துப் பாதுகாத்தார் மருதப்பர். நெல்லைக்கு வந்த உ.வே.சாமி நாதய்யருக்கு ஒரு மாட்டுவண்டி நிறைய ஓலைச்சுவடிகளை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அதில்தான் பத்துப்பாட்டும், குறுந்தொகையும் கிடைத்தன. மருதப்பரைப் பற்றி படித்தபிறகுதான் தமிழில் எனக்கு ஈடுபாடு வந்தது.

எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் கையில் இந்த வேலைகளை ஒப்படைக்க வேண்டும். மாதம்தோறும் ஏதேனும் ஒரு கருத்துருவை முன் வைத்து கருத்தரங்கங்களை நடத்துகிறேன். சிறந்த கட்டுரைகளைத் தேர்வுசெய்து பரிசு வழங்குகிறேன். இப்பணியை இன்னும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது’’ என்கிற ச.வே.சுவின் துணைவியார் பார்வதி அம்மாள். 2 மகன்கள். மூத்தவர், பள்ளி ஆசிரியர். இளையவர், கோவை வேளாண் கல்லூரியில் பேராசிரியர்.

தற்போது ‘தொல்காப்பியமே உலகின் முதல் பொதுநூல்’ என்ற உண்மையை நிறுவும் ஆய்வுகளில் தீவிரமாக முனைந்திருக்கிறார் இவர். தவிர, ‘தமிழ்மரபுச் செல்வம்’ என்ற திட்டத்தை உருவாக்கி, தொல்காப்பியர் தொடங்கி வாலி வரையிலான தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய ஆய்வுகள் தமிழூரில் தீவிரமாக நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment