Friday 21 June 2013

வீரகேரளம்புதூரில் புதிய பேருந்து நிலையம்

சென்னை, ஏப்.3 - ஊராட்சிப் பகுதிகளில் ரூ.16 கோடி மதிப்பில் 16 புதிய பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படும் என்று நகராட்சி நிர்வாக மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மான்யக் கோரிக்கையில், அமைச்சர் கே.பி.முனுசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

முதல்வரின் ஆணைப்படி, 2013-14 ஆம் ஆண்டில், மக்கள் தொகை அதிகமுள்ள ஊரகப் பகுதிகளிலும், முக்கிய சந்திப்புகளிலும், பயணிகள் நிழற்கூடம், கழிப்பறை, குடிநீர் வசதி, கடைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் அமையப்பெற்ற, ஒவ்வொன்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 புதிய பேருந்து நிலையங்கள் 16 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் கட்டப்படும்.

கடலூர் - பெரியாகுறிச்சி, விழுப்புரம் - திருவக்கரை, கிருஷ்ணகிரி - தளி, கிருஷ்ணகிரி - சூளகிரி, தர்மபுரி - பஞ்சப்பள்ளி, ஈரோடு - லக்காபுரம், நீலகிரி - உள்ளட்டி, நாமக்கல் - ஏடப்புளிநாடு, திருப்பூர் - கோடங்கிபாளையம், கரூர் - தோகைமலை, திண்டுக்கல் - செந்துறை, இராமநாதபுரம் - ஏர்வாடி, விருதுநகர் - ஆலங்குளம், தூத்துக்குடி - தருவைக்குளம், திருநெல்வேலி - வீரகேரளம்புதூர், கன்னியாகுமரி - தடிக்காரன்கோணம்.

2012-13 ஆம் ஆண்டில், ஊரகப்பகுதிகளிலுள்ள 5,200 கி.மீ நீளமுள்ள மண் மற்றும் சரளைச் சாலைகள் அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்றவைகளாக மேம்படுத்த எடுத்துக்கொள்ளப்பட்டன. 2013 - 14 ஆம் ஆண்டிலும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் 9,235 கி.மீ நீளமுள்ள மண், சரளை மற்றும் கப்பிச் சாலைகள் தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 12,524 கிராம ஊராட்சிகளிலும், 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் சேவை மையங்கள் கட்டப்படும். இச்சேவை மையங்களில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பற்றிய தகவல்களும், முழு சுகாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டங்களை ஊராட்சி அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் செயலாக்கம் செய்யும் அலுலகங்களும் அமையப்பெறும். முதற்கட்டமாக 2013-14-ம் ஆண்டில், தலா 10 லட்சம் ரூபாய் செலவில் 4,000 ஊராட்சி சேவை மையங்கள் மற்றும் தலா 25 லட்சம் ரூபாய் செலவில் 120 ஊராட்சி ஒன்றிய சேவை மையங்கள் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை 2023-ல் தெரிவிக்கப்பட்டுள்ள பத்து முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஒட்டுமொத்த குடிநீர் மற்றும் சுகாதாரச் சேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும், 2015-க்குள் தமிழகத்தை திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டுமென முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

அதனடிப்படையில், 2015-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை திறந்து வெளி மலம் கழித்தல் அற்ற மாநிலமாக ஆக்குவதற்கு வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். இந்நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக 2006-ம் ஆண்டு முதல் செயல்பாடற்று இருக்கும் தமிழ்நாடு சுகாதார விழிப்புணர்வு குழுமம் மீண்டும் புனரமைக்கப்படும்.

இதற்கெனத் தேவையான வலுவான நிறுவன அமைப்புகள் ஏற்படுத்தும் விதமாக மாவட்ட அளவில் குடிநீர் மற்றும் சுகாதார துணை மையங்களும், வட்டார வள மையங்களும் 2013-14 ஆம் ஆண்டில் அமைக்கப்படும். இதற்கு 11 கோடியே 89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முதல்வரால் டிசம்பர் 2012-ல் நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களது மாநாட்டில், தேவைப்படும் மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியங்களையும், ஊராட்சிகளையும் பிரித்து மக்கள் பயன்பெறும் வண்ணம் நடவடிக்கையெடுக்க ஆணையிட்டார். அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 கிராம ஊராட்சிகளை 95 கிராம ஊராட்சிகளாக மறு சீரமைக்கவும், 4 ஊராட்சி ஒன்றியங்களை 6 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கவும் ஆணையிட்டுள்ளார். அதேபோல, மக்களின் வசதிக்காகவும், நிர்வாக நலனுக்காகவும், 2013-14-ம் ஆண்டில், புதிய ஊராட்சி ஒன்றியங்கல் பின்வருமாறு ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடலாடி, கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து, சிக்கல் என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும்.

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார் கோயி, கீரப்பாளையம் மற்றும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து, ஸ்ரீமுஷ்ணம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து,அஞ்செட்டி என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப் பட்டனம், பர்கூர் மற்றும் மத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து போச்சம்பள்ளி என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும்.

புதிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகள் 2016 முதல் முழு அளவில் சட்டப்படி செயல்பட ஏதுவாக கட்டடங்கள் மற்றும் ஏனைய பணிகள் தற்போது நிறைவேற்றப்படும். புதிய அலுவலகங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.

மக்கல் தொகை, வருவாய் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு அருகாமை ஆகியவற்றின் அடிப்படையில் ஊராட்சிகளை வகைப்படுத்தி, அதற்கிணங்க தேவையான கூடுதல் அலுவலர்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளித்திட ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.

கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களில், ஊராட்சி நிர்வாகத்தினை செம்மைப்படுத்தும் முயற்சியாக, 500 கிராம ஊராட்சிகளுக்கும் அதிகமாக உள்ள திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம்ம ஆகிய ஏழு மாவட்டங்களில் கூடுதலாக ஒரு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் ஒரு உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகியோர் நியமிக்கப்படுவர். இந்த அலுவலகங்களுக்குத் தேவையான கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்படுவர்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment