Sunday 10 March 2013

உ.வே.சாமிநாதையர் -லட்டுச் சுமை


























இராமநாதபுரம் ஜில்லா வேம்பத்தூர் வாசியான சிலேடைப்புலி பிச்சுவையரைப் பற்றிப் பலர் கேட்டிருப்பார்கள். அவர் வியக்கத்தக்க வண்ணம் அதிவிரைவில் கவிபாடும் ஆற்றலையுடையவர். திருவாவடுதுறையில் சின்னப்பட்டத்திலிருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரவர்களிடம் பாடம் கேட்டவர். இராமநாதபுரம் ராஜா ஸ்ரீ பாஸ்கர ஸேதுபதி அவர்களால் மிகவும் ஆதரிக்கப்பெற்றவர். அவரிடம் சுப்பையரென்னும் ஓரிளைஞர் அடிக்கடி வந்து பாடங்கேட்டு வந்தார். பிச்சுவையர் வெளியூருக்குப் போகையில் சுப்பையரையும் அழைத்துச் செல்வதுண்டு.

அக்காலத்தில் ஊற்றுமலையில் ஜமீன்தாராக இருந்தவர் ஹ்ருதயாலய மருதப்பத்தேவர் என்பவர். அவருடைய கல்வியறிவும் ஆற்றலும் நற்குணங்களும் மிக உயர்ந்தவை. தமிழ் வித்துவான்களிடத்தும் ஸங்கீத வித்துவான்களிடத்திலும் அவருக்கிருந்த அன்பு யாவராலும் மறக்க இயலாதது. வீண்காலம் போக்காமல் காலவரையறைப்படி ஒழுங்காக எல்லா வேலைகளையும் திருத்தமுறச் செய்வார். தம்முடைய ஜமீன் ஸம்பந்தமான வேலைகளையும் மற்ற காரியங்களையும் அவ்வப்போது செய்வதால் உண்டாகும் அயர்ச்சியை அவர் தமிழ் நூலாராய்ச்சியால் ஆற்றிக் கொள்வார். தினந்தோறும் கலையில் 8-மணி முதல் 10- மணி வரையிலும், மாலையில் 2-மணி முதல் 4-மணி வரையிலும் புலவர்களைக் கொண்டு நல்ல தமிழ் நூல்களை வாசிக்கச் செய்து கேட்பதும் அப்புலவர்கள் அங்கங்கே கூறும் நயமான பொருள்களையறிந்து உவப்பதும் தாமே எடுத்துக் கூறுவதும் அவருக்கு இயல்பு. இதற்கென்றே தம்முடன் சில புலவர்களை வைத்து ஆதரித்து வந்தார்.

ஊற்றுமலை ஜமீன்தார்களுக்குக் குலதெய்வமாகிய நவநீத கிருஷ்ண ஸ்வாமியின் ஆலயம் அவ்வூரில் இருக்கிறது. அங்கே நித்திய நைமித்திகங்கள் சிறப்பாக நடைபெறும். பெரிய கோயில்களுக்கு நடைபெறுவனபோன்ற சிறப்புக்களை அங்கே பார்க்கலாம். அதற்குரிய நித்தியப் படித்தரம் பத்து வராகனென்று கேள்வி. அந்தக் கோயிலின் நைவேத்தியங்களுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. பல வர்க்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேங்குழல் முதலிய பக்ஷியவகைகளும் கண்ணபிரானுக்கு நிவேதனம் செய்யப்படும். எல்லாம் புத்துருக்கு நெய்யிற் செய்யப்படுவன. ஒரு லாடு உரித்த தேங்காயளவு இருக்கும். தேங்குழல் பெரிய சந்தனக் கல்லளவு இருக்கும். இவ்வளவு விசேஷமான நைவேத்தியங்களை ஒவ்வொரு நாளும் அங்கே காணலாம். உத்ஸவ காலங்களில் இவை பன்மடங்கு சிறப்பாக இருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஹ்ருதயாலய மருதப்பத்தேவர் புலவர்களிடம் காட்டும் அன்பைப் பலவகைகளில் அறியலாம். அவர்களுக்கு உரிய சம்மானங்களை அளிப்பதோடு நவநீத கிருஷ்ணனுடைய பிரசாதத்தையும் ஒவ்வொரு நாளும் அவர்கள் வெறுக்கும் வரையில் அளிக்கச் செய்வார். சில சமயங்களில் புலவர்களுக்குப் பக்ஷியங்களைக் கொடுத்தனுப்புவதும் உண்டு.

நவநீதகிருஷ்ண ஸ்வாமியின் உத்ஸவத்துக்கு ஒரு சமயம் பிச்சுவையர் சுப்பையரையும் உடன் அழைத்துக்கொண்டு ஊற்றுமலை போயிருந்தார். அவரிடம் ஜமீன்தாருக்கு மிக்க அன்பு உண்டு. அவருடைய சாதுரியமான செய்யுட்களைக் கேட்டுப் பொழுது போக்குவதில் ஜமீன்தார் சலிப்படைவதில்லை. உத்ஸவம் நடந்த பிறகு பிச்சுவையர் தம் ஊருக்குப் புறப்பட்டார். வழக்கப்படி அவருக்கு அளிக்கவேண்டிய சம்மனங்களை அளித்த ஜமீன்தார், "உங்களுக்கென்று இரண்டு மூன்று நாள் பிரசாதங்களை எடுத்து வைக்கச் சொல்லியிருக்கிறேன். அவற்றைக் கொண்டுபோய் உங்கள் குழந்தைகளிடம் கொடுக்கவேண்டும்" என்றார். பிச்சுவையரிடம் அவை கொடுக்கப்பட்டன. அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொள்ளுகையில் உடன் வந்த இளைஞராகிய சுப்பையர், "நான் எடுத்து வருகிறேன்" என்று சொல்லி வாங்கிக்கொண்டார். சுமை சிறிது பெரிதாகவே இருந்ததால் சுப்பையர் அதைத் தம் தலையில் வைத்துத் தூக்கி வந்தார்.

வழியில், பிச்சுவையர் சிறிது தங்கிச் செல்ல நேர்ந்தது; "நீ முன்னே போ; நான் சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன்" என்று சொல்லி இவரை முன்னே அனுப்பினார். இவர் சிறிது தூரம் சென்றார். நடந்து வந்ததனாலே களைப்பு ஏற்பட்டது; பசியும் உண்டாயிற்று. இவர் உடனே பக்ஷிய மூட்டையைக் கீழே வைத்தார். அதன் மணம் இவர் மூக்கைத் துளைத்தது; நாவில் நீர் ஊறிற்று. அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே மூட்டையை அவிழ்த்துச் சிறிது சிறிதாகப் பக்ஷியத்தைச் சுவை பார்க்கலானார். அதன் சுவை இவரைத் தன் வசப்படுத்திவிட்டது. பின்னால் பிச்சுவையர் வருவாரென்ற நினைவில்லாமல் ஒரே ஞாபகத்தோடு அந்த வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார்.

சிறிது நேரம் சென்றது. "என்னடா பண்ணுகிறாய்?" என்ற குரலைக் கேட்டவுடன் சுப்பையர் திடுக்கிட்டார். இவர் பக்ஷியங்களை ஊக்கத்தோடு தின்றுகொண்டிருக்கும் காட்சியைப் பிச்சுவையர் பார்த்து வியந்தார்; "என்னிடம் சொன்னால் நான் வேண்டாமென்றா சொல்லுவேன்?" என்று கேட்டார் அவர்.

சுப்பையர்:- நான் என்ன செய்வேன்! கால் வலித்தது; பசியும் உண்டாயிற்று. இப்படிச் செய்வதைவிட வேறு வழியேது?

பிச்சுவையர், "அதற்காக இப்படி வழியிலே மூட்டையைப் போட்டுக்கொண்டா தின்னவேண்டும்? சரி, மூட்டையைத் தூக்கு" என்று சொல்லிக் கொண்டே அதனைக் கட்டிச் சுப்பையரிடம் கொடுக்கலானார்.

உடனே சுப்பையர் தம் கையிலிருந்த பக்ஷியங்களைத் தின்று கொண்டே, "இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவது மியல்பு தானோ?" என்றார். ஒரு பாட்டின் ஓரடியாக இருந்தது அது.

உடனே சுப்பையர் தம் கையிலிருந்த பக்ஷியங்களைத் தின்று கொண்டே, "இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவது மியல்பு தானோ?" என்றார். ஒரு பாட்டின் ஓரடியாக இருந்தது அது.

பிச்சுவையர், "நீ செய்யுள் கூடச் செய்வாய் போலிருக்கிறதே!" என்று பின்னும் வியப்புடன் கூறினார்.

சுப்பையர்:- எல்லாம் உங்களுடைய ஆசீர்வாதந்தான்.

பிச்சுவையர்:- சரி, அப்படியானால் உன் கையிலுள்ள பக்ஷியத்தைத் தின்று பூர்த்தி செய்து விட்டு அந்தச் செய்யுளையும் பூர்த்தி செய்.

சுப்பையர் அங்ஙனமே பூர்த்தி செய்தார். அந்தச் செய்யுள் வருமாறு:-

(அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்)

எச்சகமும் புகழ்படைத்த தொன்னூற்று மலைமருதப்

...பேந்த்ரன் போற்றும்

நச்சரவி னடிப்பவர்க்கு நைவேதித் திட்டதிவ்ய

...லாடு லட்டு

வச்சுவச்சுத் தின்றுதின்று வயிறுகுறை யாமன்மிக

...வருந்தும் வேளை

இச்சுமையைப் பிச்சுவையா வென்றலையி லேற்றுவதும்

...இயல்பு தானோ.

Posted by இளைய நிலா

No comments:

Post a Comment