Wednesday 27 March 2013

அன்னபூரணத்தின் அவலக்கதை-II

பத்து வயதில் கல்யாணம் நடந்ததும், பதினோரு வயதில் விவாகரத்து நடந்ததும் தெரியாமல், அன்ன பூரணம் என்ற சிறுமி, தன் சோட்டுப் பிள்ளைகளுடன் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தாள்.


மருதப்பர் விவாகரத்து ஓலை அனுப்பினாலும், அழகப்பத் தேவர் அதை வாங்கிக் கொள்ளவில்லை. "வயசுக்கு வராத பெண் பிள்ளையை விவாகரத்து செய்ய. கட்டிய கணவனுக்கும் உரிமை கிடையாது" என்று வாதிட்டார்.


மருதப்பரின் வகையறாக்காரர்களோ, "விவாகரத்து ஓலையில் கட்டிய கணவர் கையொப்பம் இட்டு விட்டதால் இனி, இந்த ஊரில் உமக்கு வேலை இல்லை, அரண்மனைக்குச் சொந்தமான லெட்சுமி விலாஸ் என்ற வீட்டைக் காலிசெய்துவிட்டு, உம் சொந்த ஊருக்குச் சென்றால் உயிர் பிழைத்தீர், இல்லை என்றால் நடக்கிறதே வேறு!"என்று அழகப்பரை மிரட்டினார்கள்.


ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மருதப்பரின் ஆட்களிடம் இனியும் மோதினால் நிலமை மோசமாகிவிடும் என்று நினைத்த அழகப்பத் தேவர். இரவோடு இரவாக, அரண்மனைக்குச் சொந்தமான லெட்சுமி விலாஸ் என்ற வீட்டைக் காலி செய்துவிட்டு மகளையும் அழைத்துக் கொண்டு, தன் சொந்த ஊரான குருக்கள் பட்டிக்கே வந்துவிடுகிறார்.


சிறுமியான அன்னபூரணத்திற்கு, திடீரென்று தன் வாழ்வில் எங்கிருந்தோ ஒரு பிரகாசம் வந்தது போலவும், அது இடையில் அணைந்து மீண்டும் இருள் வந்தது போலவும் இருந்தது.


சின்னஞ்சிறு கிராமத்தில் சிறிய ஓட்டு வீட்டில் வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த அனுபவமும், இடையில், படாடோபமான,அரண்மனை அந்தஸ்துடன் கூடிய வாழ்வனுபவமும், அன்னபூரணம் என்ற சிறுமியைத் திகைக்க வைத்தது.


பட்டுப்பாவாடையும் சட்டையும் உடுத்திக் கொண்டு, பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கியதும், பால் பழங்கள், நாவுக்கு ருசியான உணவு என்று சாப்பிட்டதும் தன்னைச் சுற்றிப் பணிப் பெண்கள் அமர்ந்து கொண்டு, மகாராணியாரே, நாச்சியாரே! என்று அழைத்து. ஏவிய வேலைகளைச் செய்ததும் அச்சிறுமிக்கு வியப்பைக் கொடுத்தது.


"இந்தப் பச்சமதலைக்கு (சின்னஞ்சிறு பெண்ணுக்கு) வந்த வாழ்வைப் பாரேன்!" என்று சுற்றி உள்ள பெண்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்.


சும்மா இருந்த மரக்கிளையில் திடீரென்று தேனீக்கள் வந்து தேன்கூடு கட்டி, அதில் தேனைச் சேமித்தது போல அச்சிறுமியின் வாழ்வில் ஒளி வீசியது.


விதி வசத்தால் அந்த வாழ்வு வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை. யார் கண்பட்டதோ, தேன்கூட்டில் உள்ள தேனை எல்லாம் யாரோ ஒருவன் வந்து எடுத்துச் சென்றுவிட்டான்.


சிறுமியின் கழுத்தில் கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தாலிகட்டிய மருதப்பர் அதன் பிறகு ஒரு நாள் ஒரு பொழுதுகூட அச்சிறுமியைப் பார்க்க வரவில்லை.


கல்யாணம் முடிந்த மகிழ்ச்சியும் விவாகரத்து செய்த துக்கமும் அன்னபூரணம் என்ற சிறுமியைப் பாதிக்கவில்லை. ஆனால் அழகப்பத் தேவர் மிகவும் மனம் நொந்து போனார்.


"பனை ஏறியும் பாளை தொடாமல் போனது போல, நம் நிலைமை ஆகிவிட்டதே!" என்று வருந்தினார். "தன் கைக்கு எட்டிய அரண்மனை வாழ்வும் சுக போகமும், ஆட்சி அதிகாரமும், தன் வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே!" என்று வருத்தப்பட்டார்.


அன்னபூரணம் என்ற சிறுமி மீண்டும் தன் சொந்தக் கிராமத்தில் உள்ள தன் சோட்டுப் பிள்ளைகளுடன் (சமவயதுப் பிள்ளைகளுடன்) சேர்ந்து,பாண்டி, நொண்டி, கிளித்தட்டு, கிச்சுக் கிச்சுத் தாம்பளம் என்று பலவிதமான விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தாள்.


அழகப்பத் தேவரின் உறவினர்கள், "ஜமீன்தார், மேஜராகாத பிள்ளைக்கு ஓலை அனுப்பி விவாகரத்து செய்தது செல்லாது. எனவே நீ வெள்ளைக்கார துரைமார்களிடம் (அதிகாரிகளிடம்) மனுக்கொடுத்து மேல் நடவடிக்கை எடு!" என்று தூண்டினார்கள்.


பணத்தாசை பிடித்த அழகப்பத்தேவர் தன் உறவினர்கள் சொன்னபடி, திருநெல்வேலி சென்று, அப்போது அங்கு கலெக்டராக இருந்த வெள்ளைக்கார துரையிடம் ஜமீன்தார் மருதப்பரின் மேல் புகார் மனு கொடுத்தார்.


ஜமீன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருந்து கொண்டு, ஜமீன்தாருக்கு எதிராக வெள்ளைக்கார துரையிடம் (கலெக்டரிடம்) புகார் மனு கொடுத்ததால், ஜமீன்தாரின் உறவினர்களும், அங்கு பணி செய்யும் அதிகாரிகளும், நேரடியாகவும், மறைமுகமாகவும், அழகப்ப தேவரை மிரட்டினார்கள். எனவே அழகப்பத்தேவர் தன்னைக் காத்துக் கொள்ள தன் உறவினர்களின் துணையை நாடினார்.


ஜமீன்தார் நேசமுடன் இருந்த காலத்தில், தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த பொன், பொருள்களையும், நிலபுலன்களையும் அழகப்பத் தேவர் ஒவ்வொன்றாய் விற்றுத் தன் உறவினர்களின் உல்லாச வாழ்வுக்காகச் செலவு செய்தார்.


தன்னைச் சுற்றிச்சூழும் பகையைப் பற்றிக் கவலைப்படாமல் அன்னபூரணி என்ற சிறுமி தன் சோட்டுப்பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.


அரண்மனையில் உள்ள ஆட்களால் அன்னபூரணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அச்சிறுமியை ஜமீன் எல்லை தாண்டிய வேறொரு கிராமத்தில் உள்ள தன் உறவினர் ஒருவரின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார் அழகப்பத் தேவர்.


அன்னபூரணம் என்ற சிறுமிக்கு. ஏன் நாம் இப்போது வேறொரு ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்ற விபரமும் தெரியவில்லை.தாயில்லாப்பிள்ளையான அன்னபூரணம், அவளின் சிற்றன்னையி்ன் வீட்டில் தங்க ஆரம்பித்தாள். அந்தக் காலகட்டத்தில்தான், அன்னபூரணம் வயசுக்கு வந்தாள்.


அன்னபூரணத்தின் பூப்பு நீராட்டு யாருக்கும் தெரியாதபடி மிக ரகசியமாக வைக்கப்பட்டது. பருவம் வந்த தன் பெண்ணைப் பகடைக் காயாக வைத்து ஜமீன் சொத்துகளைப் பெற வேண்டும் என்று அழகப்பத் தேவர் கனவு கண்டார்.


கலெக்டரிடம் அழகப்பத்தேவர் கொடுத்த மனு விசாரணைக்கு வந்தது. அழகப்பத் தேவருக்கு ஆங்கிலம் தெரியாததால் தனக்கு என்று ஒரு வக்கீலை வைத்துக் கொண்டு வாதாடினார். மருதப்பரும் தனக்காக ஒரு வழக்கறிஞரை நியமித்தார்.


வெள்ளைக்கார கலெக்டருக்கு இந்த வழக்கே மிக விசித்திரமாகப்பட்டது. வயசுக்கு வராத சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதும், அதே சிறுமி வயசுக்கு வரும் முன்னரே, அவளை விவாகரத்து செய்ததும் சட்டப்படி குற்றம் என்று வெள்ளைக்கார கலெக்டர் நினைத்தார்.


ஆனால் வழக்கறிஞர்கள், பாலியமனம் என்பதும், சொத்துக்காக, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, அல்லது தாத்தா, பாட்டி, போன்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற இது போன்ற திருமணங்களைச் செய்து கொள்வதும் தமிழர்களின் சம்பிரதாயம் என்றும் கலெக்டர் துரைக்கு எடுத்துரைத்தார்கள்.


எதிர் மனுதாரர், ஜமீன்தார் என்பதாலும், அவர், தன் ஆட்சி அதிகாரங்களுக்கு எல்லாவிதத்திலும் ஒத்துப் போகிறவர் என்பதாலும், கலெக்டர் துரை,இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு்க் கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.


கலெக்டரின் உத்தரவின் பேரில், வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. அழகப்பத் தேவர் தன் சொத்துகளை ஒவ்வொன்றாய் விற்று வழக்கை நடத்தினார். நீதிமன்றம் வாய்தாக்களைப் போட்டுக் காலத்தைக் கடத்தியது.


நாளாக நாளாக, அன்ன பூரணம் கன்னிப் பெண்ணாக வளர்ந்து வந்தாள். இப்போது அவளை யாருக்கும் திருமணம் செய்து கொடுக்க அப்பெண்ணின் தந்தையான அழகப்பத் தேவர் விரும்பவில்லை. அவரைப் பொருத்தவரை அன்னபூரணம் ஊத்துமலை ஜமீனின் இளையராணிதான்.


ஜமீன்தார் மாலையிட்டு, பின் விவாகரத்தும் செய்துவிட்ட பெண்ணை, யாரும் திருமணம் செய்து கொள்ளவும் முன் வரவில்லை. செயற்கையாக ஒரு துறவு வாழ்க்கை அன்னபூரணியின் மேல் திணிக்கப்பட்டது.


ஒருபுறம் இளைய மகாராணி என்ற பிம்பம், மறுபுறம் சோத்துக்கே, அடுத்த வீட்டில் (சித்தியிடம்) கையேந்திக்கொண்டு தலைமறைவாக வாழும் அவல வாழ்க்கை. அன்ன பூரணியின் வாழ்க்கை, இருதலைக் கொள்ளி எறும்பாகிவிட்டது.


மருதப்பருக்கும், மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் பிள்ளைப்பேறுவேறு இல்லை. எனவே, மருதப்பர் யாராவது ஒரு சிறுவனைத் தனக்கு வாரிசாகத் தத்தெடுக்க நினைத்தார்.


ஏற்கனவே ரெண்டாந்தாரமாகக் கட்டிய மனைவி கன்னிப் பெண்ணாகக் கைநிமிர்ந்து நிற்கும்போது, அவளுடன் சேர்ந்து வாழாமல் சிறுவன் ஒருவனைத் தத்தெடுக்கக்கூடாது என்று அழகப்பத்தேவர் கோர்ட்டில் தடங்கல் மனு கொடுத்தார்.


மருதப்பர் எந்த நிலையிலும் அழகப்பத் தேவரின் எந்தக் கோரிக்கையையும் ஏற்க மறுத்தார். வாரிசு இல்லாத ஜமீன் சொத்துகளுக்கு தன் மகளே வாரிசு என்று அழகப்பத் தேவர் வாதாடினார்.


ஒரு புறம் தன்னைப் பெற்றெடுத்த தந்தை ஜமீன் சொத்துகளை அடைய வேண்டித் தன்னைப் பகடைக் காயாக வைத்து விளையாடுகிறார்;மறுபுறம் அறியாத வயதில் தான் கொடுத்த வாக்கிற்காகப் பேருக்குத் தாலி கட்டிவிட்டு, தன் கணவரான மருதப்பரும், பாராமுகமாக இருந்துகொண்டு தன்னை நிராகரிக்கிறார். எனவே நம் இல்லற வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட அன்னபூரணம் தனியே இருந்து அழுது தன் தலைவிதியை நினைத்துக் கண்ணீர் சிந்தினாள். பெற்றவர், கணவர் என்ற இரு ஆண்களின் ‘ஈகோ’வுக்குள் சிக்கி அப்பெண்ணின் வாழ்வு சிதைந்தது.


நீதி மன்றத்தில் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அடிக்கடி அன்னபூரணத்தம்மாளைச் சந்திக்கச் சென்றார்.


அவர்மூலம் கிறிஸ்தவ மதத்தைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் தெரிந்து கொண்டு, அன்னபூரணத்தம்மாள் ஒருநாள் கிறிஸ்தவ மதத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.


கிறித்தவ மதத்தில் சேர்ந்த அன்னபூரணத்தம்மாளின் பெயர் மேரி விக்டோரியாள் என்று மாற்றப்பட்டது. மன உளைச்சலின் உச்சக்கட்டத்தில் இருந்த அப்பெண், மதமாற்றத்திற்குப்பின், கன்னியாஸ்திரியாகித் துறவறம் பூண்டார்.


மகள் மதம் மாறியதால், மனம் உடைந்த அழகப்பத் தேவரும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்து விடுகிறார்.

அன்னபூரணத்தம்மாளின் இந்த அவலக் கதையை எனக்கு வாய்மொழியாக வீரகேரளம்புதூரைச் சேர்ந்த இரா.உ.விநாயகம் பிள்ளை என்ற கதை சொல்லி கூறினார். தற்போது அவர் உயிரோடு இல்லை

No comments:

Post a Comment