Sunday 13 July 2014

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர் ச. முத்துசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீதம் இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் பயிற்சி செலவை அரசே ஏற்று தனியார் பயிற்சி நிலையங்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கலந்தாய்வு தொடக்கம்: அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் 21 வரை கலந்தாய்வு நடத்தி மதிப்பெண் தகுதி அடிப்படையிலும், இனவாரி அடிப்படையிலும் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, அவரவர் விருப்பப்படி அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான சேர்க்கை ஆணை வழங்கப்படும். இக் கலந்தாய்வில் 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 21 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் பங்கேற்கின்றன.

திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறும் கலந்தாய்வுக்கு 8, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 195 மாணவர், மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், பெண்களுக்கான இன ஒதுக்கீடுகளுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்கு 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு 2814 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் மாணவர்கள் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, சாதி மற்றும் வருமானச் சான்று, அரசு சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் நேரில் பெற்றோர்களுடன் பங்கேற்க வேண்டும்.

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உணவுடன் கூடிய இலவச விடுதியும் உள்ளது. பேட்டையில் மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர்களுக்கு 4 சக்கர வாகன பயிற்சியும், வீரகேரளம்புதூரில் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றுத் தரப்படும். கம்பியாள், மின்சாரப் பணியாளர் பிரிவு மாணவர்களுக்கு பி- உரிமம் பெற்று வழங்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், மடிக்கணினி, சைக்கிள், சீருடை, ஷூ, மாதாந்திர உதவித் தொகை ரூ. 500 ம், பேருந்து, ரயில் பயணக் கட்டணச் சலுகை போன்றவை வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 27 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து இலவச பயிற்சி பெறலாம்.

மேலும் விவரங்களை அறிய திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0462- 2501251, பேட்டை நிலையத் தொலைபேசி எண் 0462 - 2342005, அம்பாசமுத்திரம் நிலையத் தொலைபேசி எண் 04634 - 251108, வீரகேரளம்புதூர் நிலையத் தொலைபேசி எண் 04633 - 277962, தென்காசி நிலையத் தொலைபேசி எண் 04633 - 280933 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment