Sunday 21 July 2013

அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கோவில்


அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்

மூலவர் : ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன்
உற்சவர் :
அம்மன்/தாயார் :
தல விருட்சம் : வேப்பமரம்
தீர்த்தம் : சிற்றாறு
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வீரகேரளம்புதூர்
ஊர் : வீரகேரளம்புதூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு

ஊர்ச்சிறப்பு

தென்தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தென்றல் தவழும் தென்காசி நகருக்கு கிழக்கில் 20 கி.மீ.தொலைவில் நீர்வளமும் , நிலவளமும் நிறைந்த குற்றாலச் சாரலின் குளுமையுடன் சிற்றாற்றின் வடபுரம் அமைதியும் இயற்கை அழகும் கொண்ட பேரூராக “வீரகேரளம்புதூர்” அமைந்துள்ளது.


வடக்கு வாசல் செல்வி அம்மன் கதை

வடக்கு வாசல் செல்வி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம்.
அம்பிகை, காவல் தெய்வமான காளி அம்சத்தோடு வடக்குவாசல் செல்வியம்மன், என்னும் கோலங்களில் அருள்பாலிக்கிறாள்.
தேவர் தலைவனான இந்திரன், கவுதமரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டான். ஒருநாள், நள்ளிரவில் சேவல் வடிவெடுத்து கூவினான். பொழுது புலர்ந்தது என எண்ணிய முனிவர், காலைநேர அனுஷ்டானத்திற்காக கிளம்பினார். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், கவுதமரின் வடிவில் சென்று அகலிகையை ஏமாற்றினான். விஷயமறிந்த முனிவர், இந்திரன் உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்தார். சாபம் தீர இந்திரன் யாத்திரை புறப்பட்டான். பூலோகத்தில் அர்ஜுனபுரி என்னும் (கடையநல்லூர்) தலத்தை அடைந்தான். அங்கு நீலமணிநாதர், அருணாசலேஸ்வரர் என்னும் இரு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அப்பகுதியின் ஈசானபாகமான வடகிழக்கில் குளம் ஒன்றை வெட்டினான்.
நீலமணிநாதரின் வடபுறத்தில், அம்பாளை வடக்குவாசல் செல்வி என்னும் பெயரில் நிர்மாணித்து பூஜித்தான். இவர்களை வணங்கி சாப விமோசனம் பெற்றான்.
வடக்குவாசல் செல்வியம்மன் பெயருக்கேற்றாற் போல் ஊரின் வடபுறத்தில், அமைந்துள்ளது. பத்ரகாளி அம்சத்தோடு செல்வியம்மனும், சக்தி அம்சத்தோடு நீலகண்டேஸ்வரி அம்மனும் வீற்றிருக்கின்றனர். செல்வியம்மனுக்கு "உத்ரதுவார பாலினி' என்ற பெயரும் உண்டு. எதிரெதிர் சந்நிதிகளில் இரு அம்மன்களும் இருக்கின்றனர். செல்வியம்மன் அசுர சக்தியை அழித்து பக்தர்களைக் காக்கும் விதத்தில் வலக்கையில் திரிசூலம் ஏந்தியிருக்கிறாள். இடக்கரத்தில் விபூதி கொப்பரை உள்ளது. தீராத பழிபாவத்தில் இருந்து பக்தர்களைக்காப்பதில்நிகரற்றவளாகத் திகழ்கிறாள்.


திருக்கோவில் அமைப்பு
இத்திருக்கோயிலின் கர்ப்பகிரஹத்தில் “ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கரத்தில் சூலம் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள் .கற்பூர ஆரத்தியின்போது அவளது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும்..

இதர தெய்வங்கள்
கணபதி இருபுறங்களிலும் நாகங்களுடன் அருள் தருகிறார் .பைரவர் ,கருப்பசுவாமி முதலிய பரிவாரதேவதைகளுடன் வடக்கு வாசல் செல்வி அம்மன் அருள்பாலித்து வருகிறாள்.

திருவிழா
தை மாதம் மூன்றாம் செவ்வாய் அன்றும் அதற்கு அடுத்த தினமும் (புதன்கிழமை) 'கோயில் கொடை' நடத்தப்படும். விழாவிற்கு முதல்நாள் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், குங்கும அபிஷேகமும் நடத்துவர். செவ்வாயன்று மதியம் வரை தொடர் அபிஷேகம் நடக்கும். செவ்வாய் அன்று இரவு தொடங்கி அதிகாலை வரை 'சாமக் கொடை' நடக்கிறது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்வர்.
சாமக் கொடையின்போது 'ஆடு பலியிடுதலும்', 'அசைவப் படையலும்' நடைமுறையில் இக்கோவில்களிலும் உள்ளது. இந்த வழிபாடு, அம்மனுக்கு அல்ல; அம்மனின் காலடியில் கிடக்கும் அரக்கனுக்கு என்று சொல்லப்படுகிறது.
தீப்பந்தம் ஏந்தி, சாமி 'வேட்டைக்குப் போகுதல்', சாமி 'குறி சொல்லுதல்' போன்ற நம்பிக்கைச் செயல்பாடுகளும் இக்கோவில்களில் நடைமுறையில் உள்ளது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு போன்றவையும் நடைமுறையில் உள்ளது.
புதனன்று காலை தொடங்கி மதியம் வரை 'பகல் கொடை' நடக்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாவிளக்கு, உருவம் செலுத்துவது போன்ற நேர்ச்சைகளைச் செலுத்துவர்.

திறக்கும் நேரம்:
காலை 9- 11 மணி வரை, மாலை 4-7 மணி வரையிலும் வடக்கு வாசல் செல்வி அம்மனை தரிசனம் செய்யலாம்.

முகவரி:
அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்,- 627 861 திருநெல்வேலி மாவட்டம்.


No comments:

Post a Comment